Sunday, September 30, 2007

அறத்துப்பால்-இல்லறவியல்-மக்கட்பேறு-7

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பெறு அல்ல பிற.

தன் அறிவை உணர்ந்த அறிவாற்றலுடைய மக்களைபெற்றதை விட பெரும் பேறு வேறெதுவுமில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பழியை பெறாத பண்புள்ள மக்களைபெற்றால் ஏழுதலைமுறைக்கும்(அல்லது ஏழு பிறப்பிலும்) தீமை நம்மை நெருங்காது

தம்பொருள் என்பதன் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாம் வரும்.

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

அமிழ்தினும் ஆற்ற இனிதெதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தம் குழந்தைகள் தன் பிஞ்சுக்கரத்தால் அளாவும் கூழே அமிழ்த்த்தை விட இனியது

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

உடலுக்கு இன்பம் குழந்தைகள் தொடுவது, தழுவுவது. மற்றொறு இன்பம் அவர் சொல்கேட்டு செவி அடையும் இன்பம்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை இனிமையானவை என்று கூறுவார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

தம்மிந்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பெற்றோரை காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

ஈன்ற் பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

ஈன்ற பொழுதே ஒரு தாய் பெரிதும் மகழ்ச்சிகொள்ளும் தருணம். அதையும் தாண்டி மகிழ்ச்சியை எப்பொழுது ஒரு தாய் அடைவாளெனில் அது தன் மகன் சான்றோன் என மற்றவர்
கூறுவதை கேட்கும் தருணமே

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மகன் தந்தைக்கு செய்யும் உதவி 'இவனைப்பெறுவதற்கு எந்த நோன்பை நோற்று இவனைப்பெற்றான் இவன் தந்தை' என்ற சொல்லைக்கேட்பது.

Wednesday, September 26, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத் துணைநலம்- 6

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

தான் பேண விரும்பும் இல்லறத்துக்கு ஏற்றவளை துணையாக கொண்டவன் வாழ்வு அதற்குறிய வளத்தைப் பெறும்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

கணவன், மனைவி இடையே கருத்தொத்த அறம் இல்லையெனின் வேறு சிறப்புகள் இருந்த போதிலும் போற்றுதலுக்குரிய இல்லறம் அமையாது.

மனைமாட்சி - வீட்டிற்கு சிறப்பு சேர்க்கும் செயல்கள் (அறம்)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

மனைவி நற்செயல்களால் சிறப்பு பெற்றவள் எனில் ஒருவனிடம் இல்லாதிருப்பது எது? அவ்வாறான துணை அமையவில்லை எனில் இருப்பது தான் எது?

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

தாங்கள் போற்றும் அறத்தை கற்பைப் போல் காக்கும் உறுதி கொண்ட பெண்ணை விட சிறந்த துணை ஒருவனுக்கு வேறு எதுவும் இல்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

தலைவனைப் போலவே அறத்தை முதற் பொருளாய் கொண்டு வாழ்பவள் எப்பொழுதும் பெய்யலாம் என்றிருக்கும் சூல் கொண்ட மேகத்துக்கு ஒப்பானவள். இப்படிப் பட்ட ஆற்றலுக்கு தெய்வத்தை தொழ வேண்டிய அவசியம் இல்லை.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தமது அறத்தை காத்தல், அறம் செழிக்க துணையின் நலம் காத்தல், அதனால் பெற்ற குடியின் புகழை நிலை நிறுத்துதல் போன்ற கடமைகள் பெண்ணுக்கு ஒருபோதும் சோர்வைத் தராது.

சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

வீரனே ஆனாலும் இல்லறத்தை பேணுவதில் மனைவிக்கு துணையாக இருப்பதே அவனுக்கு முதற் கடமையாகும்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

புத்தேளிர் - கடவுளர்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்
முன் ஏறுபோல் பீடு நடை.

தான் போற்றும் அறத்தை போற்றும் மனைவி அமையவில்லை எனில் தன் இல்லறத்தை பழிப்போர் முன் அவமானத்தால் குன்ற நேரும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

அறத்தை ஒத்து வாழும் துணைவியால் ஒருவன் நல்லறம் பேண இயலும். அத்தகைய நல்லறத்தின் பயன் அறவழி போற்றும் குழந்தைகள் வாய்ப்பது.

அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்க்கை-5

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தில் ஈடுபடுபவன் அதில் தன் வாழ்வின் பகுதியாய் வரும் பெற்றோர், வாழ்க்கைத்துணை, மக்கள் ஆகிய மூவருக்கும் துணையாய் நிற்பதே நல்லறம் எனப்படும்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறவு கொண்டோருக்கும், இரந்து வாழ்வோருக்கும், வாழ்ந்து மறைந்தோருக்கும் இல்லறம் பேணுபவரே இயல்பான துணை.

துவ்வாதவர் - துப்பாருக்கு எதிர்ப்பதம்
உணவுக்கு துப்பில்லாதவர்

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல், பிறருக்கு வழிகாட்டி கடவுளை ஒப்ப வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் நாடுதல் ஆகிய கடமைகளை நிறைவேற்ற தன்னை நிலை நிறுத்திக் கொளல் ஆகிய ஐந்தும் இல்லறம் வாழ்பவன் கடைபிடிக்க வேண்டியவை.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பிறர் பழிக்கும் செயல்களுக்கு அஞ்சுதல், உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணல் ஆகிய போற்றுதலுக்குரிய குணங்களை உடையவன் வாழ்வு நிறைவானதாக இருக்கும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அன்புடனும், நூலோர் வகுத்த அறநெறியிலும் அமையும் வாழ்வே இல்லறத்தின் பண்பு. அவ்வாறான வாழ்வு இல்லறத்தின் பயன் ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய்ப் பெறுவ தெவன்.

அறம் ஓம்பி வாழ்ந்ததால் இல்லறம் தரும் பயனை வேறு வழியால் பெற்றிட யாரால் முடியும்?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இல்லறத்தின் இயல்பான அறத்தை பற்றி வாழ்பவன் அதன் பயனாக குறிக்கப் படுவனவற்றை எளிதில் அடைவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

இல்லறத்தில் இழுக்கு ஏற்படாமல் அறத்தின் வழியால் வாழ்பவனின் வாழ்வு தருமம் தவறாத துறவிகளின் வாழ்வினை ஒத்தது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பிறர் பழிக்க முடியாத இல்லறம் என்பதே அறம் போற்றும் வாழ்வாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பிறர் ஒப்புமை கூறத்தக்க இல்லறம் பேணியவன் கடவுளை ஒத்தவனாகவே போற்றப் படுவான்.

Sunday, September 16, 2007

அறத்துப்பால் -பாயிரவியல் -அறன் வலியுறுத்தல்-4

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

ஒருவனுக்்கு சிறப்பையும், செல்வத்தையும் தரக்கூடிய அறத்தைக் காட்டிலும் உயிர்க்கு ஆக்கம் தருவது ஒன்றும் இல்லை.


அருஞ்சொற்பொருள்
ஆக்கம் -நன்மை


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஒருவனுக்கு அறம் செய்வதே சிறந்த நன்மைத் தரும் செயலாகும். அவ்வறத்தைச் செய்யாமல் மறப்பதே அவனுக்குக் கேடு விளைவிக்கும் செயலும் ஆகும்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

ஒருவன் தம்மால் இயன்ற வகைகளில் எல்லாம் அறச்செயல்களை இடைவிடாது செய்ய வேண்டும்.

அருஞ்சொற்பொருள்
ஓவாது -இடையறாது

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.


அறச்செயல்களில் ஈடுபடும் ஒருவனின் மனமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மனத்தூய்மை இல்லாமல் ஒருவன் செய்யும் அறச்செயலானது அறமாகக் கருதப்படாமல், வெறும் ஆராவாரத் தன்மையானதாகவேக் கருதப்படும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கனையும் விலக்கி நடத்தலே அறமாகும்.


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

ஒருவன் தன் இளமைக்காலத்தில், பிறகு செய்துக்கொள்ளலாம் என்று அறச்செயல்கள் செய்வதை கடத்தாமல் இளமைத் தொட்டே செய்ய வேண்டும். அந்த அறம் மட்டுமே அவரின் இறுதிக் காலத்தில் அவரைவிட்டு நீங்காதத் துணையாகும்.

அருஞ்சொற்பொருள்
பொன்றுங்கால் -இறுதிக் காலம்
பொன்றா -நீங்காத

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தின் பயன் என்னவென்று ஆராய்பவர்க்கு, பல்லக்கில் அமர்ந்து செல்பவனும் அப்பல்லக்கைத் தூக்கிச் செல்பவனைக் காணும் காட்சியினாலேயே அது அறியப்படும்.

அருஞ்சொற்பொருள்
சிவிகை -பல்லக்கு

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஒருவன் தன் வாழ்நாள் வீணாகாதவாறு ஒவ்வொரு நாளும் இடையறாது அறம் செய்வானாயின், அதுவே அவனுக்கு வீடுபேற்றை அளிக்கும். (மீண்டும் பிறப்பு உண்டாக்கும் வழியை அடைக்கும் கல்)

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

ஒருவனுக்கு அறத்தின் பயனாய் வரும் இன்பமே உண்மையான இன்பமாகும். மற்றவழியில் வருபவையனைத்தும் இன்பத்தைப் போல் தோன்றினாலும் அவை அனைத்தும் வெறும் மயக்கமே ஆகும். அதனால் துன்பமேயன்றி இன்பமுமில்லை, புகழுமில்லை.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் செய்யக்கூடிய செயல்களே அறமாகும். செய்யாமல் விலக்கக் கூடிய அனைத்தும் பழித் தரும் செயல்களே ஆகும்.

தீப்பொறி

குனிந்து வாங்கியதல்ல -சுதந்திரம்
குருதியைக்கொடுத்து வாங்கியது!
குட்டப்பார்த்தால் குனியாதே,
எட்டி உதைத்துவிடு - எது
வந்தாலும் அஞ்சாதே!
எமனையே எதிர்த்தவன்்டா நீ - என்
தோழன்!

மரம்

மக்களை மதித்து
மரியாதைக்
குடை பிடிக்கும்
மன்னவன்!

வெயில்

மண்ணில் உழைக்கும்
மனித குலத்திற்கு
சூடான மதிய உணவு!
கொஞ்சம் அதிகமாக!

மழை

இருண்டு போன
வாழ்க்கையால்
கருத்துப்போன
முகில்களின்
கண்ணீர்!

Saturday, September 15, 2007

அறத்துப்பால் -பாயிரவியல் -நீத்தார்பெருமை-3

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

நல்லொழுக்க நெறிகளில் நிலைத்து நின்று, ஆசைகளைத் துறந்த முனிவர்களை சிறப்பாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவு.

அருஞ்சொற்பொருள்
நீத்தார் -ஆசைகளைத் துறந்தவர்
பனுவல் -நூல்


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

இவ்வுலக ஆசைகளைத் துறந்த முனிவர்களின் பெருமையைக் கூறுவதென்பது, இவ்வுலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களைக் கணக்கிட்டுக் கூறுவதை ஒத்தது ஆகும்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பிறப்பு, வீடுபேறு ஆகிய இரண்டின் இன்பதுன்பங்களை ஆய்ந்தறிந்து தெரிவிப்பதற்காக , இப்பிறவியில் துறவு பூண்டவர்களின் பெருமையே இவ்வுலகில் முதன்மையானது ஆகும்.


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அறிவு என்னும் துறட்டியினால் தன் ஐம்புலன்களையும் அடக்கும் வல்லமையுள்ள முனிவர்கள், விளை நிலத்திற்கான மேலான விதைகளைப் போன்றவர்கள்.

அருஞ்சொற்பொருள்
உரன் -அறிவு
தோட்டியான் -துறட்டி, அங்குசம்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐம்புலன்களையும் அடக்கும் முனிவர்களின் வலிமைக்கு, வானவர்களின் தேவர்களான இந்திரனின் வலிமையே சிறந்த சான்று ஆகும்.

அருஞ்சொற்பொருள்
கோமான் -அரசன்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பிறரால் செய்ய இயலாத அரிய செயல்களைச் செய்யக் கூடியவர்களே பெரியர், அத்தகைய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியர்கள் ஆவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐம்புலன்களின் தன்மைகளான சுவை, ஒளி, தொடு உணர்வு, ஓசை, மணம் ஆகிய ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறியக் கூடியவனுடைய அறிவிற்குள் அடங்குவதே உலகம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

நன்மை நிறைந்த சொற்களையுடைய முனிவர்களின் பெருமையை, இப்பூவுலகில் அவர்கள் மந்திரமாகச் சொல்லிச் சென்ற வேதங்களே எடுத்துக்காட்டிவிடும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

நல்ல குணங்களாகிய குன்றின்மேலிருக்கும் முனிவர்களின் சினமானது சிறிது நேரமே என்றாலும், அச்சினத்திற்கு ஆளாகும் சாதாரண மானிடர்களால் அதைத் தாங்க இயலாது.

அருஞ்சொற்பொருள்
வெகுளி -கோபம்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் தன் குளிர்ந்த அன்பைக் காட்டுவதால்தான் முனிவர்களே சிறந்த அந்தணர்களாகக் கருதப்படுவார்கள்.

முதல் கவிதை - கடவுள் வாழ்த்து

கண்களை மூடிக் கொண்டு
சூழ்நிலைக் கைதியாய்
சுவாசிக்கக் காற்றின்றி
தினமொருமுறை
தீமுன்னே முகம் விழித்து
காண வரும் - என்னுடைய
கண்ணிரண்டைத் திறக்கச்செய்து
முடிவிலா உலகினை
முக்காலும் உணரச்செய்த - தாய்
மூகாம்பிகையே -
நல்லவர்கள் நலம்பெற,
நாளுமுனை தினம் தொழ
அருள்புரிவாய் தேவி!

அறத்துப்பால் -பாயிரவியல் -வான்சிறப்பு-2

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மேகங்கள் நிலையாக மழைப் பொழிந்து வருவதால்தான் இவ்வுலக உயிர்கள் நிலைபெற்று வாழ்ந்து வருகின்றன. ஆதலால் அது உலக உயிர்களுக்கு சாவாமருந்தான, அமிழ்தம் என்றறிவதற்கு உரியதாகிறது.

அருஞ்சொற்பொருள்
அமிழ்தம் -சாவாமருந்து
பாற்று - உரித்தானது



துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூஉம் மழை.

மழையானது, உண்ணும் உயிர்களுக்குச் சத்துள்ள நல்ல உணவை உருவாக்கித் தருவதோடு மட்டுமல்லாமல் அவ்வுயிர்களுக்குத் தானே உணவாகவும் அமைகிறது.

அருஞ்சொற்பொருள்
து -(துஞ்சுதல்) உண்ணுதல்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

வான்மழைப் பொழியாமல் போனால், கடல் சூழ்ந்த இப்பரந்த உலகத்தைப் பசி என்னும் கொடிய நோய் உள்ளிருந்து வருத்தும். மனித உடலுக்குள்ளே இருந்து வருத்தும் துன்பங்களில் கொடியது பசியாகும்.

அருஞ்சொற்பொருள்
விரிநீர் -கடல் நீர்
உடற்றும் - வருத்தும்.


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழையாகிய பெரிய வளம் இல்லாவிடில், நீர் நிலைகளும் நிரம்பாது. உழவர்கள் ஏர் பிடித்து உழமாட்டார். உலக உயிர்களைக் காக்கும் உழவுத்தொழிலும் நிகழாது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் நின்று உயிர்களை வருத்துவதும், வருந்திய உயிர்களைப் பெய்து வாழ்விப்பதும் ஆகிய எல்லா நன்மை தீமைகளையும் செய்ய வல்லது மழை.

அருஞ்சொற்பொருள்
சார்வாய் -ஆதரவாய்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைக்காண்ப தரிது.

வானின் மழைத் துளி பூமியில் விழுந்தாலன்றி, இவ்வுலகில் சிறுபுல்லும் வளர இயலாது.

அருஞ்சொற்பொருள்
விசும்பு -வானம்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பெருங்கடலிலிருந்து நீரை எடுத்துக்கொள்ளும் மேகம், மீண்டும் அந்நீரை மழையாகப் பொழிந்து, பூமிக்கு இறங்கிவராவிடில் நெடுங்கடலும் வற்றி விடும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வான் மழை வாராது போனால், தேவர்களுக்காக, அவர்களை சிறப்பிப்பதற்காக இப்பூமியில் நடைபெறும் பூசையும், திருவிழாவும் மற்றும் எந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறாது. மேலுலகத்திலுள்ள தேவர்களுக்கும் வறுமை வந்துவிடும்.

அருஞ்சொற்பொருள்
வானோர் -தேவர்கள்
வறக்கு - வறுமை

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

இல்லறத்தார் செய்யும் தான தர்மங்களும், துறவறத்தாரின் தூய தவங்களும் இவ்வுலகில் தங்கு தடையின்றி நடைபெற வான்மழையே ஆதாரம் ஆகும்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

வான் மழை இல்லையானால் இவ்வுலகமும், உலக உயிர்களும் நிலைப்பெற்று வாழ இயலாததோடு, உயர்ந்த பண்புடைய மக்களின் ஒழுக்க நெறியும் நிலைபெறாது.

Thursday, September 13, 2007

அறத்துப்பால்-பாயிரவியல்-கடவுள் வாழ்த்து-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துகளெல்லாம் 'அ' கரத்தை அடிப்படையாகக்கொண்டுள்ளதைப்போல், இவ்வுலகமானது பரம்பொருளான கடவுளை அடிப்படையாகக்கொண்டது. (இறைவன் ஒருவனே! அவனே உலகத்தின் தலைவன்)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய ஞானத்தின் வடிவாக விளங்குபவனின் தூய்மையான பாதங்களைத் தொட்டு வணங்காதவர்கள், கற்றவர்களாயினும், அவர்கள் கற்றதனால் பயன் என்ன? (இறைவன் தூய ஞானத்தின் வடிவானவன்)

அருஞ்சொற்பொருள்:

வாலறிவன் - கடவுள்; வால் - மிகுதி, பெரிய;
வாலறிவன் - பேரறிவுடையவன், மிகுந்த ஞானமுடையவன்
நற்றாள் - இறைவனின் திருவடி

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

தன்னை நினைப்பவர்களின் மனமாகிய மலர் மீது வீற்றிருக்கும் கடவுளை வழிபடுபவர்கள், இறைவனடி சேர்ந்தாலும், இந்நிலவுலகில் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். (இறைவன் அடியவர்களின் மனங்களில் எல்லாம் பாரபட்சமின்றி எளியனுக்கு எளியனாய், அடியனுக்கு அடியவனாய் இருப்பவன்)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு, வெறுப்பில்லாத கடவுளின் திருவடிகளில் சரணடைபவர்களுக்கு, எந்நாளும் துன்பம் இல்லை. (இறைவன் விருப்பு வெறுப்புகளற்றவன்)

அருஞ்சொற்பொருள்:

இடும்பை- துன்பம்
யாண்டும்- எந்த நாளும்



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

நாம் செய்யும் நல்வினையும், தீவினையும் இரண்டுமே பிறவி என்னும் துன்பத்தைத் தரவல்லன. எனவே எவ்வினையாலும் பாதிக்கப்படாத இறைவனின் புகழைப்போற்றிப் பாடுபவர்களுக்கு, அவன் திருவடிகளைச் சரணடைபவர்களுக்கு எவ்விதத்துன்பங்களும் நேராது. நமது வினைகள் எதுவாயினும் அவற்றை இறைவன் திருவடிக்கே சமர்ப்பித்துவிட வேண்டும். (இறைவன் நல்வினை, தீவினைகளால் பாதிக்கப்படாதவன்)

அருஞ்சொற்பொருள்:

இருவினை - நல்வினை, தீவினை

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்புலன்களினால் வரக்கூடிய ஆசைகளற்ற இறைவனின் மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர்கள், இவ்வுலகில் நீண்ட நாள் வாழ்வார்கள். (இறைவன் புலன்களை எல்லாம் வென்றவன்)

அருஞ்சொற்பொருள்:

ஐம்பொறி-ஐம்புலன்கள் : மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தன்னிகரில்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தாரைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும். (இறைவன் தனக்கென்ற ஒப்புமை ஏதும் அற்றவன்)

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளில் சரண்டைந்தவர்களைத்தவிர, ஏனையோர்க்கு பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பது அரிதானதாகும். (இறைவன் அறவழியைப் போதிக்கும் சான்றோனாவான்)

அருஞ்சொற்பொருள்:

ஆழி - பெருங்கடல்

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எட்டு குணங்களையுடைய கடவுளை வணங்காதார், உணர்ச்சியற்ற உறுப்புகளைப்போல பயனற்றவர்கள். (எண்குணங்களின் வடிவாய் விளங்குபவன் இறைவன்)

அருஞ்சொற்பொருள்:

எண்குணம் - தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலா இன்பம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனின் திருவடிகளை வழிபடுபவர்கள் பிறவி எனும் பெருங்கடலை எளிதில் கடப்பர்.