Monday, December 30, 2019

தொழில் முனைவோர் - இராம்குமார்

ஏன் தொழில் தொடங்குற எண்ணம் அல்லது உந்துதல் ஏற்பட்டது
- பெற்றோரைக் கூட இருந்து பாத்துக்கணும்
- திறன் மழுங்கும் வயசுல வேலைல இருந்து தூக்கி எறியப் படலாம்
- நாளை அலுவலகப் பணிச்சூழல் இன்னும் மோசமாகும். பசங்க ஓடுனது போதும்ன்னு முடிவு பண்ணா வந்து நிக்க ஒரு இளைப்பாறுதல் கூடம்.

ஏன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தீங்க
- பாதுகாப்பான, கலப்படமில்லாத உணவு
- எனக்கு இருக்கும் பிற ஆர்வங்களுக்குப் போதுமான நேரம் ஒதுக்க முடியும்
- 2.5 ஏக்கர்ல ஒரு குடும்பம் தன்னிறைவு அடைய முடியுமான்ற பரிசோதனை
- என்னால ரொம்பக் கவனத்தோட எந்த வேலையையும் தொடர்ந்து செய்ய முடியாது. உற்பத்தி மற்றும் விற்பனைத்துறைகள்ல விலகவே முடியாத படி தொடர்ந்து கண்காணிப்போட செயல்படணும். வேளாண்மைல எந்த ஒரு நாளிலும் ஆண்டுக்கணக்காக் கூட வேலைகளை ஒத்தி வைச்சுட்டு மத்த வேலைகளைப் பாத்துட்டு திரும்பவும் விட்ட இடத்துல இருந்து தொடங்கலாம்.
- ஒவ்வொரு நாளும், பருவமும், ஆண்டும் புத்தம் புதுசு
- எவ்வளவு வெறுப்பா இருந்தாலும் கால்நடைகளை ஓட்டிட்டுப் போனாப் போதும். நாலு மணி நேரம் எல்லாத்தையும் மறந்துட்டு அவை புல் மேயுறதைப் பாத்துட்டு இருந்தாலே கவலைகள் காணாமப் போயிரும்.

தொழில் சூழல் - முதலீடு, சந்தை வாய்ப்பு போன்றவை
சில ஆயிரங்களிலும் தொடங்கலாம். இல்லை, என்னைய மாதிரி பல லட்சங்களைக் கொட்டியும் தொடங்கலாம். நிலம், வீடுன்னு வாங்குனதுனால செலவு கூடப் போயிருச்சு. நிலம் கருவை மண்டிக் கிடந்தது. கிணறு தரை மட்டத்தில் தூர்ந்திருந்தது. இதெல்லாம் சரி பண்ணி முடிக்கும் போது 30+ லட்சம் வரை செலவானது. என் பிள்ளைகள் விரும்பினால் செலவே இல்லாமல் தொடரலாம்.

சந்தை வாய்ப்புகள்
பாலை பக்கத்து கூட்டுறவு சங்கத்தில் ஊற்றலாம். ஆடுகளை விற்க தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றான சமயபுரம் சந்தைக்கு ஓட்டிச் செல்லலாம்.7 கிமீ. நெல் போன்றவற்றை வாங்கிக் கொள்ள மண்ணச்சநல்லூரில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. திருச்சி காய்கறி சந்தையில் இருந்து அன்றாடம் காய்கறி கொள்முதல் செய்வார்கள். கால்நடை மருத்துவமனைகள் 5 கிமீ சுற்றளவில் இருக்கின்றன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை 4 கிமீ தொலைவில்.

பணமதிப்பிழப்பு, பொருள்சேவை வரியோட தாக்கம்
பெரும்பாலும் இல்லை.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு
நான் வீட்ல இருந்தா அறவே கிடையாது. வெளியூர் போனா, சில வேலைகளுக்கு ஆள் அமர்த்துவேன். என் முனைவர் மனைவி தன்னோட வண்டில மாடுகளுக்குத் தேவையான அறுத்து வைக்கப் பட்ட சோளப்பயிர் கட்டுகளை கொண்டு வந்து விடுவார். என் பையன் பால் கறக்க வருபவரிடம் கணக்கைக் குறித்துக் கொள்வான். யாரும் மாடுகளை மாற்றிக் கட்ட மாட்டார்கள். அச்சம். அதுக்கு பனிரெண்டு மணியளவில் என் நண்பர் வந்து இரண்டு மணி நேரம் சிறு மேய்ச்சல் காட்டிக் கட்டுவார். சொந்த ஊர் இல்லை என்பதால் சிறு இடர் நிறைய உண்டு. எவ்வளவோ பாத்துட்டோம்ன்னு தேத்திக்குவேன். யாரிடமும் எந்த வம்பு வழக்கும் இல்லாமல் இயன்ற வரை உதவியும், விட்டுக் கொடுத்தும் போவேன். கால்நடைகளை பிறர் காடுகளுக்குள் செல்லாதவாறு கூடுதல் கவனத்தோடு மேய்ப்பேன். பொதுவான நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன்.

அரசின் வேளாண்/கால்நடைத் திட்டங்களை, வறுமை ஒழிப்புத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வேன். சில திட்டங்களை முன் மாதிரியாக நானே செலவுகளை எதிர்கொண்டு செயல்படுத்திப் பார்ப்பேன். எங்கள் ஊராட்சிக்கான நீடித்த நிலையான மானாவாரி இயக்கக் குழு தலைவராக இருக்கிறேன். இருபது பேர் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் தலைவராக இருக்கிறேன். போக வேண்டிய தொலைவு இன்னும் நிறைய. திட்டங்கள் இருக்கின்றன. பார்க்கலாம்.

Sunday, May 24, 2009

திருக்குறள் -அருஞ்சொற்பொருள்

(குறிப்பு- தமிழில் ஒரு சில சொற்கள், ஒரே சொல் பல பொருட்களைத் தரும். ஆனால் இப்பகுதியில் உள்ள சொற்களுக்கான பொருள் அந்தந்த குறளுக்கு என்ன அர்த்தமோ அவற்றை மட்டுமே தந்துள்ளோம்.)

கடவுள் வாழ்த்து 1

வாலறிவன் - கடவுள் வால் - மிகுதி, பெரிய;
வாலறிவன் - பேரறிவுடையவன், மிகுந்த ஞானமுடையவன்

நற்றாள் - நல்ல(தூய) பாதம்; இறைவனின் திருவடி
இடும்பை - துன்பம்
யாண்டும் - எந்த நாளும்
இருவினை - நல்வினை, தீவினை
ஐம்பொறி - ஐம்புலன்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி)
ஆழி - பெருங்கடல்
எண்குணம் - தன்வயம், தூயஉடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் (பற்று) இன்மை, பேரருள், முடிவிலா ஆற்றல், வரம்பில் இன்பம்.

வான் சிறப்பு 2

அமிழ்தம் - சாவா மருந்து
பாற்று - உரித்தானது
து -துஞ்சுதல் (உண்ணுதல்)
விரிநீர் - கடல் நீர்
உடற்றும் - வருத்தும்.
சார்வாய் - ஆதரவாய்
விசும்பு - வானம்
வானோர் -தேவர்கள்
வறக்கு - வறுமை

நீத்தார் பெருமை 3

நீத்தார் - ஆசைகளைத் துறந்தவர்
பனுவல் - நூல்
உரன் - அறிவு
தோட்டி - துறட்டி(அங்குசம்)
கோமான் - அரசன்
வெகுளி - கோபம்

அறன் வலியுறுத்தல் 4

ஆக்கம் - நன்மை
ஓவாது - இடையறாது
பொன்றுங்கால் - இறுதிக்காலம்
பொன்றா - நீங்காத
சிவிகை - பல்லக்கு


இல்வாழ்க்கை 5

துவ்வாதவர் - உணவுக்குத் துப்பில்லாதவர் (வறுமைப் பட்டவர்)
தென்புலத்தார் - பிதிரர்
விருந்தொக்கல் - விருந்தினர், சுற்றத்தார்
பாத்தூண் - பகுத்துண்


வாழ்க்கைத் துணைநலம் 6


கொழுநன் - கணவன்
புத்தேளிர் - கடவுளர்
ஏறு - ஆண்சிங்கம்
பீடு - பெருமை

அன்புடைமை 8

பூசல் - பலரும் அறிய (வெளிப்படையாக)
வையகம் - உலகம்
மறம் - வீரம்
என்பு - எலும்பு
வன்பாற் - காய்ந்த பாலை நிலம்
வற்றல் மரம் - காய்ந்த மரம்


விருந்தோம்பல் 9

வேளாண்மை - உபகாரம்
சாவா மருந்து - அமிழ்தம்
பருவந்து - வருந்துதல் (வறுமையால்)
செய்யாள் - திருமகள்
இல் - வீடு
வித்து - விதை
மிச்சில் மிசைவான் - மிகுதியை(எஞ்சியதை) உண்பவன்
பரிந்தோம்பி(பரிந்து ஓம்பி)- வருந்திக் காத்து
வேள்வி - ஐம்பெரும் வேள்வி
1. பிரமயாகம் - வேதமோதுதல்
2.
தேவயாகம் - ஓமம் வளர்த்தல்
3. மானுடயாகம் - விருந்தோம்பல்
4. பிதிர்யாகம் - நீர்க்கடனாற்றல்
5. பூதயாகம் - பலியீதல் (பூத உடலைக் காணிக்கையாக்குதல்)


இனியவை கூறல் 10

ஈரம் அளைஇ - அன்போடு கலந்து
படிறு இலஆம் - வஞ்சனை இல்லாத
துவ்வாமை - வறுமை


செய்ந்நன்றி அறிதல் 11

வையகம், ஞாலம் - உலகம்
தூக்கின் - ஆராயின்
தினை - ஒரு வகை தானியம்

நடுவு நிலைமை 12

செப்பம் - சட்டம், ஒழுங்கு
ஆக்கம் - செல்வம்
எச்சம் - சந்ததியார்
(நடுவு இகந்து ஆம்)
நடுவு, செப்பம் - நடுவு நிலைமை
இகந்து - நீங்குதலால்
ஆம் - உண்டாகின்ற
ஒரீஇ - நீங்கி
நடுஆக - நடுவாக
கெடுஆக - வறுமையாக
கோடாமை - சாயாமை
அணி - அழகு
கோட்டம் - கோணுதல்
ஒருதலையா - உறுதியாக


அடக்கமுடைமை 13

ஊங்கு - மேற்பட்ட
ஏமாப்பு - பாதுகாப்பு
கதம் - சினம்
செவ்வி - தகுந்த காலம்


ஒழுக்கமுடைமை 14

விழுப்பம் - சிறப்பு, மேன்மை
ஒல்கார் - குன்றார், சுருங்கார்
ஏதம் - குற்றம்
உரவோர் - மனவலிமையுடையோர்
இடும்பை - துன்பம்
ஒல்லா - இயலாதது


பிறனில் விழையாமை 15

பெட்டு - இச்சித்து
ஒழுகும் - நடக்கும்
பேதைமை - அறியாமை
மன்ற - நிச்சயமாக
விளியாது - அழியாது
இகவாவாம் - நீங்காவாம்
நயவாதவன் - விரும்பாதவன்
நாமநீர் - கடல்(உப்பு) நீர்
வைப்பு - உலகம்
விளிந்தவர் - உயிரற்றவர்


பொறையுடைமை 16

அகழ்வார் - தோண்டுபவர்
ஒறுத்தல் - தண்டித்தல்
பொதிந்து - இடைவிடாது
பொன்று - இறப்பு
நோ - துன்பம்
நொந்து - வருந்தி
நோற்கிற்பவர் - பொறுப்பவர்
பொறை - பொறுமை

அழுக்காறாமை 17

விழுப்பு - சிறப்பு
அன்மை - இல்லாமை
செய்யவள் - திருமகள்
ஏதம் - துன்பம்
தவ்வை - தமக்கை(அக்காள்)
திருச்செற்று - செல்வத்தைக் கெடுத்து (திரு - செல்வம்)

வெஃகாமை 18

வெஃகின் - விரும்பின்
பொன்றி - கெடுத்து
புலம் - ஐம்புலன்(மெய், வாய், கண், மூக்கு, செவி)
புன்மை - குற்றம்
இறல் - அழிவு
விறல் - வெற்றி
செருக்கு - செல்வம்


புறங்கூறாமை 19


தேற்றாதவர் - அறியாதவர்
துன்னியார் - நெருங்கிய நண்பர்
ஏதிலார் - அயலார்
பொறை - பாரம்

பயனில சொல்லாமை 20

பல்லார் - பலர்
முனிய - வெறுக்க
எள்ளப்படும் - இகழப்படும்
நட்டார் - நண்பர்
பாரித்து - விரித்து
பதடி - பதர்
மருள் - மயக்கம்
மாசு - குற்றம்
பொச்சாந்தும் - மறந்தும்

தீவினையச்சம் 21

விழுமியார் - மேலோர்
பயத்தல் - தருதல் (பயக்கும் - அளிக்கும்)
செறுவார் - வருத்துவோர்
சூழற்க - எண்ணாதிருக்க (சூழும் - எண்ணும்)
வீயாது - நீங்காமல்
அடும் - கொல்லும்
வீயாது - விடாது வந்து
துன்னற்க - செய்யாதிருக்க

ஒப்புரவு அறிதல் 22

கடப்பாடு, ஒப்புரவு - உபகாரம்
கைம்மாறு - பிரதியுபகாரம்
தாளாற்றி - முயற்சி செய்து
புத்தேள் உலகம் - தேவருலகம்
ஊருணி - ஊர் மக்கள் நீரருந்தும் குளம்
ஒல்கார் - தளரார்

ஈகை 23


வைப்புழி - வைக்குமிடம்
மரீஇயவனை - பழகியவனை
வன்கணவர் - அருளிலாதவர்
தமியர் - தனித்தவர்
இயையா - இயலாத

புகழ் 24

பொன்றாது - அழியாது
சாக்காடு - மரணம்
நத்தம் - பெருக்கம்
யாக்கை - தேகம், உடல்
இசை - புகழ்
வசை - பழிச் சொல்

அருள் உடைமை 25

பூரியார் - இழிந்தவர்
அல்லல் - துன்பம்
வளி - காற்று
மல்லல் - வளமான
மா - பெரிய
கரி - சான்று
தெருளாதான் - ஞானமில்லாதவன்

புலால் மறுத்தல் 26

ஊண் - உடல்
கோறல் - கொல்லுதல்
அளறு - நரகம்
அண்ணாத்தல் - வாய் திறத்தல்
தலைப்பிரிந்த - நீங்கிய
வேட்டல் - யாகஞ்செய்தல்

தவம் 27

நோன்றல் - பொறுத்தல்
உறுகண் - துன்பம்
அவம் - வீண்,கேடு
துப்புரவு - உணவு, மருந்து, உறைவிடம்
ஒன்னார் - பகைவர்
தெறல் - கெடச்செய்தல்
கூற்றம் - யமன்

கூடாவொழுக்கம் 28

படிற்றொழுக்கம் - மறைந்த ஒழுக்கம்( பொய்யான நடத்தை)
அகம் - உள்ளம்
நிலைமையான் - இயல்புடையவன்
பெற்றம் - பசு
புள் - பறவை
சிமிழ்த்தல் - பிடித்தல்
அற்று - உவமஉருபு(போன்றது, ஒத்தது)
எற்றெற்றென்று - (எற்று +எற்று+என்று) என்ன செய்தோம், என்ன செய்தோமென்று
வன்கணார் - கொடியவர்(இரக்கமில்லாதவர்)
மாசு - குற்றம்
மாந்தர் - மக்கள்
கணை - அம்பு
செவ்விது - செம்மையானது
ஆங்கு - அவ்வகையே

கள்ளாமை 29

எனைத்தொன்றும் - எத்தகைய பொருளையும்
உள்ளல் - எண்ணுதல்
விழுமம் - துன்பம்
பொச்சாப்பு - சோர்வு
கார் - இருள்
கரவு - வஞ்சனை
வீவர் - கெடுவர்
தேற்றாதவர் - அறியாதவர்
தள்ளும் - தவறிப்போகும்
புத்தேள் உலகு - தேவருலகம்

வாய்மை 30

புரைதீர்ந்த - குற்றமில்லாத

வெகுளாமை 31

வெகுளி - சினம் (கோபம்)
ஏமம் - பாதுகாவல்
புணை - தெப்பம்
இணர் - பல சுடர்களையுடைய
தோய்வன்ன - தழுவினாற் போன்ற
புணரின் - கூடுமாயின்
உள்ளான் - நினையான்

இன்னா செய்யாமை 32

இன்னா - துன்பம்
கோள் - கொள்கை
மறுத்து - மீண்டு
உய்யா - மீளா
விழுமம் - துன்பம்
ஒறுத்தல் - தண்டித்தல்

கொல்லாமை 33

கோறல் - கொல்லுதல்
ஓம்புதல் - காப்பாற்றுதல்
புலைவினையர் - இழிதொழிலார்
செயிருடம்பு - நோயுடம்பு

நிலையாமை 34

புல்லறிவு - அற்ப அறிவு
கடை - இழிவு
குழாத்து - கூட்டம் கூடுதல்
விளிந்தது - கலைந்து போகுதல்
அற்கா - நிலையில்லாத
ஈரும் - அறுக்கும்
நாச்செற்று - நாவை அடக்கி
விக்குள் - விக்கல்
நெருநல் - நேற்று
குடம்பை - கூடு
சாக்காடு - மரணம்
புக்கில் - நிலையான இருப்பிடம்
துச்சில் - ஒதுக்கிடம்

துறவு 35

ஈண்டு - இப்பிறப்பில்
மயலாகும் - மயக்கத்துக்கு ஏதுவாகும்
செருக்கு - மயக்கம்
தலைப்பட்டார் - முக்தியடைந்தவர்
மற்று - பற்றுகள் அறாதபொழுது

மெய் உணர்தல் 36

மருளான் - அறிவு மயக்கம்
மாணா - மாட்சிமையற்ற
பயம் - பயன்
ஈண்டு - இம்மை
பேதைமை -அறியாமை

அவா அறுத்தல் 37

அவா - ஆசை
ஆண்டு - மேலுலகம்
தவாவினை - நல்வினை
தவாது - முடிவில்லாமல்
ஆரா - நிறைவுறாது
பேரா - நிலையான

ஊழ் 38

அசைவின்மை - முயற்சி
ஊழ் - பழவினை
அகற்றும் - விசாலப்படுத்தும்
திரு - செல்வம்
தெள்ளியர் - அறிவுடையோர்
பரியினும் - வருந்திக் காப்பாற்றினாலும்
பால் - ஊழ்

இறைமாட்சி 39

கூழ் - பொன், உணவு
எஞ்சாமை - குறைவின்றி
மீக்கூறுதல் - உயர்த்திச்சொல்லல்
கண்டனை - (வேண்டாமெனத்) தள்ளுதல்
கைப்ப - அலங்காரமான

கல்லாமை 41

அரங்கம் - ஆடுமிடம்
வட்டாடுதல் - சூதாடுதல்
ஒட்பம் - அறிவு
கழிய - மிகவும்
தகைமை - உயர்வு
மாத்திரையார் - அளவுடன் இருப்பவர்
பாடு - பெருமை
அனையர் - ஒப்பர்
இலங்க - விளங்க

கேள்வி 42

அவி உணவு - வேள்வியில் இறைவனுக்கு அளிக்கப்படும் உணவு, அவிர்பாகம

ஒற்கம் - தளர்ந்த, வறுமை
இழுக்கல் - வழுக்கல்
உழி - நிலம்
ஈண்டிய - செறிந்த
தோட்கப்படாத - துளைக்கப்படாத
நுணங்கிய - நுட்பமாகிய
இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆய்ந்தறிந்து
அவிதல் - ஒழிதல்

அறிவுடைமை 43

அற்றம் - அழிவு
ஒரீஇ - விலக்கி
தழீஇ - தழுவுதல்
ஒட்பம் - அறிவு
கூம்பல் - சுருங்குதல்

குற்றம் கடிதல் 44

பெருக்கம் - செல்வம்
பெருமிதம் - பெருகும்
நீர்த்து - தன்மை
இவறல் - பேராசை
மாணா - அளவில்லா
இறை - அரசன்
அற்றம் - அழிவு
வைத்தூறு - வைக்கோல்
உயல் - இருத்தல்
வியவற்க - மதியாதிருக்க
நயவற்க - விரும்பாதிருக்க
காதல் - விருப்பம்
ஏதில - பழுது
ஏதிலார் - பகைவர்
நூல் - சூழ்ச்சி செய்தல்

பெரியோரைத் துணைக்கோடல் 45

கேண்மை - நட்பு
பெற்றியார் - தன்மையுடையவர்
சூழ்வார் - ஆய்ந்து கூறுவோர்
செற்றார் - பகைவர்
ஏமரா - காவலற்ற
பெற்றியார் - தன்மையுடையவர்
உறாமை - வாராதபடி

சிற்றினம் சேராமை 46

தூவா - பற்றுக்கோடு, சார்பு

தெரிந்து செயல்வகை 47

இளி - பரிகசிப்பு
ஏதம் - குற்றம்
வருத்தம் - முயற்சி
போற்று - காப்பு
பொத்துப்படும் - தவறாக முடியும்

வலியறிதல் 48

ஒல்வது - இயன்றது
முரிந்தார் - முடியாது நின்றார்
ஆங்கு - அயலார்
பெய் - ஏற்றுதல்
சாகாடு - வண்டி
சால - மிகவும்
இட்டிது - சிறியது
வல்லை - விரைந்து

காலமறிதல் 49

ஆர்க்குங் கயிறு - கட்டும் கயிறு
கருவி - காரணம்
தகர் - செம்மறி ஆட்டுக் கிடா
பொள்ளென - விரைவுக்குறிச் சொல் (எ-கா பொள்ளென விடிந்து விட்டது)
வேர் - சினம்
ஒள்ளியவர் - அறிவுடையவர்
சீர்த்த - வாய்த்த

இடனறிதல் 50

மொய்ம்பு - வலிமை
ஆற்றார் - அறிவில்லாதவர்
அடுப - வெற்றி
போற்றி - காத்து
துன்னியார் - சேர்ந்தவர்
துன்னி - அடைதல், சேர்தல்
அடும் - கொல்லும்

தெரிந்து தெளிதல் 51

ஆசு - குற்றம்
வெளிறு - அறியாமை
ஓம்புக - தவிர்த்திடுக (ஓம்பல் - காத்தல்)
காதன்மை - அன்புடைமை
கந்தா - வழியாக, அடிப்படையாக

தெரிந்து வினையாடல் 52

உற்றவை - தடைகள்

சுற்றம் தழால் 53

மருங்கு - நெருங்கிய, உடன் இருத்தல்

பொச்சாவாமை 54

இறந்த - அடங்காத
பொச்சாப்பு - மறதி
நிச்ச - நாள்தோறும்
நிரப்பு - இரந்து
இழுக்கு - மறதி
மைந்து - வலிமை
உள்ளியது - எண்ணியது, குறிக்கோள்

செங்கோன்மை 55

கண்ணோடாது - இரக்கப்படாமல்
இறைபுரிந்து - அனைவருக்கும் பொதுவாக, நடுநிலையாக
உளி - விதிமுறை
தொக்கு - சேர்ந்து, கூடி
முட்டா - முட்டாது, தடை இல்லாமல்

கொடுங்கோன்மை 56

சூழாது - எண்ணாது
கூழ் - செல்வம்
எற்று - எவ்வாறு
அற்று - அவ்வாறு
உறை - பருவ மழை
ஒல்லாது - பொருந்தாது
ஆ - பசு
அறுதொழிலோர் - ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈட்டல் ஆகிய ஆறுவகையான தொழில் செய்வோர்

வெருவந்த செய்யாமை 57

வருவந்த - அஞ்சத்தக்க
ஒருவந்தம் - உறுதியாக
செவ்வி - காலம்
செரு - பகை
சிறை - காவல்
பொறை - சுமை

கண்ணோட்டம் 58

கண்ணோட்டம் - இரக்கம்

ஒற்றாடல் 59

இறந்த - புக இயலாத

ஊக்கமுடைமை 60

ஒல்கார் - தளராதவர்
உரவோர் - ஊக்கமுடையோர்
பரியது - பெரியது
கோட்டு - கொம்பு
வெரூஉம் - வெருளும்
வெறுக்கை - மிகுதி

மடியின்மை 61

மடி - சோம்பல்
மாசூர - மாசு ஊர
மாசு - இருள்
ஊர - அடர
மாண்ட - சிறந்த

ஆள்வினையுடைமை 62

அசாவாமை - அசராமல்
ஓம்பல் - ஒழித்தல்
தாள் - முயற்சி

அமைச்சு 64

ஆன்ற - நிறைந்த
தெவ்வோர் - பகைவர்
திறப்பாடு - செயல்திறன்

சொல்வன்மை 65

ஞாலம் - உலகம்
இணர் - கொத்து
ஊழ்த்தும் - மலர்ந்திருந்தும்

வினைத்தூய்மை 66

ஒருவுதல் - ஒழித்தல்
ஆதும் - மென்மேலும் உயர்தல், மேலாகக் கடவோம்
மாழ்கும் - கெடுதற்குக் காரணமாகும்
ஓதல் - ஒழித்தல்
இளி - இழிவு
கழிநல்குரவு - மிகுந்த வறுமை
கடிந்த - நீக்கிய
கடிந்து ஓரார் - விலக்கார்
பீழை - துன்பம்
இரீஇ - காத்தல்

வினைத்திட்பம் 67

கொட்கின் - வெளிப்படுமாயின்
ஏற்றா - தீராத
வீறு - சிறப்பு
உறவரினும் - மிகவரினும்

வினைசெயல்வகை 68

தெறும் - கெடுக்கும்
நனைகவுள் - நனைந்த கன்னமுடைய யானை


தூது 69

தொகச்சொல்லி - தொகுத்துச்சொல்லி
தூவாத - இன்னாத
நகச்சொல்லி, செலச்சொல்லி - மனமகிழச்சொல்லி
வடுமாற்றம் - தாழ்வான வார்த்தை
வன்கணவன் - வலிமையுடையவன்
இறைவன் - மன்னன்

மன்னரைச்சேர்ந்தொழுகல் 70

இகல் - மாறுபடும் இயல்புடைய
மன்னிய - நிலைப்பெற்ற
போற்றல் - காத்தல்
கடுத்தபின் - சந்தேகித்த பின்
தேற்றல் - தெளிவித்தல்
அவித்து - நீக்கி
ஆன்ற - நிறைந்த
ஓரார் - கேளாமல்
மறை - ரகசியம்
வேட்பன - விரும்புவன
எஞ்ஞான்றும் - எந்த நாளும்
இனையர் - இளையவர்
இனமுறையர் - இன்ன முறையினர்
துளக்கற்ற - அசைவற்ற
கெழுதகைமை - உரிமை

குறிப்பறிதல் 71

கடுத்தது - சினந்தது
முதுக்குறைந்தது - அறிவுமிகுந்தது
உவப்பு - மகிழ்ச்சி

அவை அறிதல் 72

முந்து - முற்பட்டு
கிளவா - சொல்லாத
செறிவு - அடக்கம்
வியன்புலம் - விரிந்த நூற்பொருள்
பொச்சாந்தும் - மறந்தும்
செல - மனங்கொள்ள
அங்கணம் - முற்றம்
உக்க - வீழ்ந்த
கோட்டிக் கொளல் - சொல்லாதிருத்தல்

அவை அஞ்சாமை 73

என் - என்ன
ஒள்வாள் - கூரிய வாள்( ஒளிபொருந்திய வாள்)
களன் - சபை
செல - ஏற்க

நாடு 74

பெள் - விருப்பம்
பெட்டக்க - விரும்பத்தக்க( பெள்+தக்க)
இறை - வரி

பொருள் செயல் வகை 76

இருள் - துன்பம்
தேயம் - இடம்
ஒன்னார், புல்லார் - பகைவர்
உல்கு - தீர்வை
தெறு - திறை, வரி
ஒள்பொருள் - நல்வழியில் வந்த சிறந்த பொருள்
காழ்ப்ப - மிகுதியாக

படைமாட்சி 77

உவரி - கடல்
தானை - சேனை
அடல் - போர்க்குணம்

படைச்செருக்கு 78

என்னை - (என்+ஐ) என் தலைவன்
ஐ - தலைவன்
தெவ்விர் - பகைவர்
எஃகு - கூர்மை, நுண்ணிய, சிறப்பு
ஒட்டு - அற்பம்
யாப்பு - கட்டுதல், அணிதல்
காரிகை - பெண், அழகு

நட்பு 79

நவில் - கற்றல்
கிழமை - உரிமை
அவை - உலக நடைமுறைக்கு மாறாக, தீய வழி
உழப்பது - படுவது, துய்ப்பது
கொட்பு - வேறுபாடு, எல்லை
ஒல்லும் வாய் - எல்லைவரை, இயன்ற வரை

நட்பு ஆராய்தல் 80

இனன் - சுற்றம்
ஊதியம் - பேறு
அடு - அழிதல்
காலை - பொழுது
மருவு - தழுவு
ஒருவு - தவிர்

பழைமை 81

கீழ்ந்திடா - சிதைந்திடாத

தீ நட்பு 82

அமரகத்து - போர்க்களத்து
கல்லாமா - கல்லா+மா - கல்லாத விலங்கு
ஏதின்மை - பகைமை
குறுகுதல் - குறைதல்
ஓம்பல் - தவிர்த்தல்

கூடா நட்பு 83

நேரா - கூடாமல், நிகழாமல்
நிரந்தவர் - கூடியவர்
மாணார் - சிறப்பில்லாத பகைவர்
ஒட்டார் - பகைவர்
ஒல்லை - விரைவில்

பேதைமை 84

பேதைமை - அறிவிலி, அறியாமை
காதன்மை - ஆசை
நார் - அன்பு
புனை - தளை, கால் விலங்கு
மையல் - மனநிலை தவறியவன், பித்தன்
பீழை - துன்பம், வருத்தம்
கழாஅ - கழுவாத
பள்ளி - படுக்கை

இகல் 86

பாரிக்கும் - வளர்க்கும்
இகல் - மாறுபாடு
தவல் - அழிவு
தாவில் விளக்கம் - கெடுதலில்லா புகழ்
மிகல் ஊக்கும் - வெல்ல நினைக்கும்
நகலான் - நட்பில்

பகைமாட்சி 87

செறு - வெற்றி
இகவா - நீங்கா
சேண் - உயர்வுள்ள
வெகுளும் - பகைக்கும்

பகைத்திறம் தெரிதல் 88

ஏமுற்றவர் - பித்துப் பிடித்தவர், பித்தன்
தமியன் - தனித்தவன்
காழ்த்த - முதிர்ந்த

உட்பகை 89

தமர் நீர - தழுவ வேண்டிய சுற்றத்தாரின் இயல்புகள்
பொன்றாமை - இறவாமை
பொருத - தேய்க்கப்பட்ட
பகவு - பிளவு
குடங்கருள் - குடிசைக்குள்

பெண்வழிச்சேறல் 91

இமையார் - தேவர்
பாடிலர் - ஆண்மையற்றவர்
நட்டார் - நண்பர்

வரைவில் மகளிர் 92

தகை - ஆடல் பாடல்
செருக்கி - களித்து, மகிழ்ந்து
பூரியார் - கீழ்மக்கள்
கவறு - சூது

கள்ளுண்ணாமை 93

உட்கம் - அச்சம்

சூது 94

ஆறு - வழி
ஆயம் - ஆதாயம்
ஓவாது - இடைவிடாது
சீர் - புகழ்
கழகம் - களம்(ஆடுமிடம்)
தருக்கி - மேற்கொண்டு
இவறியார் - கைவிடாதவர்
அகடு - வயிறு
ஆரார் - நிறைவுபெறார்
அல்லல் - துன்பம்
முகடி - மூதேவி
ஆயம் - சூது

- இவ்வதிகாரத்தில் 'ஆயம்' என்னும் ஒரே சொல் இருவேறு அர்த்தங்களைக் கொண்டு வருவதைப் பாருங்கள். அதன் அருகிலுள்ள மற்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மருந்து 95

வளி முதலா மூன்று - வாதம், பித்தம், சிலேத்துமம்
அற்றல் - சீரணித்தல்

குடிமை 96

இழுக்கு - தவறுதல்
சலம் - வஞ்சனை
சால்பு - மேன்மை
விசும்பு - வானம்
மறு - களங்கம்
நார் - அன்பு

மானம் 97

பேராண்மை - மானம்
குன்று - சிறிய மலை
குன்றுதல் - குறைதல்
குன்றி - குன்றி மணி (குண்டு மணி), நுண்ணிய அளவு
பீடு - வலிமை, பெருமை

பெருமை 98

ஒளி - புகழ்
ஆற்றுதல் - செய்தல்
ஆறு - வழி
இறப்பு - மிகுதி
அற்றம் - கெடுதல், குறைகள்

சான்றாண்மை 99

கடன் - கடமை
துலையார் - தமக்கு ஒப்பில்லாதவர், தம்மிலும் தாழ்ந்தவர்
ஊழி - உலகம் நீரில் அமிழ்தல்
ஆழி - கடல்

பண்புடைமை 100

எண்பதம் - எளியவராய் இருத்தல்
வெறுத்தக்க - நெருங்கத்தக்க
நயன் - நீதி

நன்றியில் செல்வம் 101

ஈட்டம் - பொருளீட்டல்
இவறி - ஆசைப்பட்டு
இசை - புகழ்
ஏதம் - நோய்
தமியள் - தனியாய் இருப்பவள்
துனி - வறுமை

நாணுடைமை 102

திரு நுதல் - அழகிய நெற்றி
மரப்பாவை - மரப்பாச்சி பொம்மை

குடிசெயல் வகை 103

துவ்வுதல் - நீங்குதல் (துவ்வா என்பதன் எதிர்ப்பதம்)
மடி - ஆடை
அமரகம் - போர்க்களம்
வன்கண்ணார் - வலிமை மிகுந்தவர்

உழவு 104

உழந்து - வருந்தி
அலகு - கருவி, ஆயுதம்
கரவாது - மறைக்காது
மாலை - இயல்பு
தொடிப்புழுதி - ஒரு வகை அளவு முறை
உணக்கல் - உலர்த்துதல்
கிழவன் - உரிமையாளன்
புலந்து - வெறுத்து

நல்குரவு 105

தொல்வரவு - பழைய உறவு
தோல் - சொல்
நசை - ஆசை
நல்கூர்ந்தார் - வறியவர்
நெருநல் - நேற்று
நிரப்பு - வறுமை
கண்பாடு - தூக்கம்
துவற - முழுமையாக
காடி - கஞ்சி

இரவு 106

கரப்பு - மறைத்தல்
கரி - சான்று

இரவச்சம் 107

அடுபுற்கை - சிறு அரிசிக் கஞ்சி
ஏமாப்பு இல் - காவலற்ற
பக்கு - பிளந்து

கயமை 108

அகப்பட்டி - உள் அடங்குவர், தம்மினும் கீழோர்
கொடிறு - கன்னம், கதுப்பு

தகையணங்குறுத்தல் 109

அணங்கு - பெண்
கொல் - தெய்வம்
மாதர் - மானுடப்பெண்
மாலும் - மயங்கும்
தானை - சேனை
பண்டு - கண்டு
கூற்று - எமன்
தகையால் - குணங்கள்
பேரமர் - பெரிய வாய்
கட்டு - கண்கள்
அமர்த்தன - மாறுபட்டிருந்தன
கோடம் - வளைவு; கோடா - வளையாமல்
அஞர் - துயர்
கடாக்களிறு - மத யானை
கட்படாம் - முகப்படாம்
துகில் - ஆடை
ஒண்ணுதற் - ஒளி பொருந்திய நெற்றி(ஒள்+நுதல்)
ஞாட்பு - போர்க்களம்
நண்ணார் - எதிர்த்தவர்
உட்கும் - அஞ்சுவதற்கு ஏதுவாகும்
அடு நறவு - காய்ச்சப்பட்ட மது

குறிப்பறிதல் 110

செம்பாகம் - சரிபாதி
இறைஞ்சினாள் - நாணித் தலை குனிந்தாள்
அட்டிய - வார்த்த
உறாதவர் - அயலார்
செறார் - பகையாதவர்
ஒல்லை - விரைந்து
அசையியற்கு -மெல்லிய சாயலையுடையவளுக்கு
ஏர் - அழகு
பசையினள் -இரங்கினள்


புணர்ச்சி மகிழ்தல் 111

தெறும் - சுடும்
குறுகும் - நெருங்கும்
யாண்டு - எவ்வுலகில்
வேட்ட - விரும்பிய
தோடு - மலர்
கதுப்பினாள் - கூந்தலையுடையவள்
போழப்படா - இடையறுக்கப்படாத
முயக்கு - புணர்ச்சி
செறிதோறும் - புணரப்புணர
சேயிழை - செம்பொன் ஆபரணம்
மாட்டு - பெண்

நலம் புனைந்துரைத்தல் 112

மையாத்தி - மயங்குகின்றாய்
முறி - தளிர் வண்ணம்
முறுவல் - பல்
முத்தம் - முத்து
வெறிநாற்றம் - இனிய மணம்
வேய் - மூங்கில்
மாண் - மாட்சிமை
பெய்தாள் - சூடினாள்
நுசுப்பு - இடை
படாஅ - ஒலியா

காதல் சிறப்புரைத்தல் 113

வீழும் - விரும்பும்
கரப்பாக்கு - மறைதல்
ஏதிலர் - அன்பற்றவர்

நாணுத்துறவுரைத்தல் 114

மடலேறுதல் - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை
பண்டு - முன்பு
படல் - உறக்கம்
மறுகில் - வீதியில்
மருண்டு - மயங்கி
மறுகும் - சுற்றுகின்றது(திரிகின்றது)

அலர் அறிவுறுத்தல் 115

அலர், கவ்வை, கௌவை - பழிச்சொல்
தவ்வென்னும் - சுருங்கிப் போகும்

பிரிவாற்றாமை 116

பார்வல் - பார்வை
ஓம்பு - காப்பாற்று
நசை - ஆசை
துறைவன் - தலைவன்
தூற்றாகொல் - அறிவியாவோ
இறவா - கழலா நின்ற
இனன் - தோழியர்

படர் மெலிந்து இரங்கல் 117

காவா - காவடித் தண்டு
துப்பு - துன்பஞ்செய்தற்குரிய பகைமை

கண் விதுப்பு அழிதல் 118

அஞர் - துன்பம்

பசப்புறு பருவரல் 119

கொண்கன் - தலைவன்

தனிப்படர் மிகுதி 120

காழ் - வித்து
கா - காவடி
பருவரல் - நோய்
பைதல் - துன்பம்

பொழுதுகண்டு இரங்கல் 123

அழல் - நெருப்பு
பைதல் - நோய்

உறுப்பு நலன் அழிதல் 124

சேண் - தூரம்
பசந்து - நிறம் வேறுபட்டு
தணந்தமை - பிரிந்தமை
தொல்கவின் - பழைய அழகு
பணை - பெருமை
பைந்தொடி - வளையல்
போழ - நுழைந்த
பருவரல் - துன்பம்

நெஞ்சோடு கிளத்தல் 125

சேறி - செல்
செற்றார் - வெறுத்தவர்
உற்று - விரும்பி
உழை - இடம்

நிறையழிதல் 126

கணிச்சி - உளி
யாமம் - இரவு
மன்று - பொதுவில்
செற்றார் - விலகியவர்
எற்று - எத்தகையது
பெட்ப - விரும்பியவை
புலப்பல் - பிணங்குதல்
பில்லினேன் - தழுவுதல்
நிணம் - நெய், கொழுப்பு

அவர்வயின் விதும்பல் 127

சேண் - தொலைவு
இலங்கிழாய் - ஒளிவீசும் அணி
கலன் - தோளில் அணியும் நகை
காரிகை - பெண், அழகு
கொண்கன் - தலைவன்
பசப்பு - பசலை நோய்(பிரிவுக் காலத்தில் மகளிரின் அழகைக் குன்றச் செய்யும் நோய்)

குறிப்பு அறிவுறுத்தல் 128

கரத்தல் - மறைத்தல்
கையிகந்து - கைமீறி
ஒல்லா - உடன்படாமல்
உண்கண் - மை எழுதிய கண்கள்
காம்பு - மூங்கில்
ஏர் - ஒத்த
முகை - அரும்பு
தொடி - வளையல்
நெருநல் - நேற்று

புணர்ச்சி விதும்பல் 129

பேணல் - மதித்தல்
பெட்பு - விருப்பம்
துனிதல் - வெறுத்தல்
புல்லுதல் - புணர்தல்
விதுப்பு - விரைதல்

நெஞ்சோடு புலத்தல் 130

உறாதவர் - விரும்பாதவர்
செறு - சினம்
சேறி - போகிறாய்
சூழ்வார் - கலந்து பேசுபவர்
துனி - வெறுத்து
துவ்வாய் - துய்க்க மாட்டாய்
உறா - நீங்காத
தஞ்சம் - எளிது
ஏதிலார் - அந்நியர்

புலவி 131


அலந்தார் - அழிந்தவர்
ஏர் - அழகு
வீழுநர் - அன்புடையவர்
உணங்க - வாட

புலவி நுணுக்கம் 132

கோட்டுப் பூ - வளைந்த மாலை
செறுப்ப - அடக்குதல்

ஊடல் உவகை 133

முயங்க - வியர்க்க

Monday, August 25, 2008

மீண்டும் பொன்னியின் செல்வன்

நான் எதோ பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எழுத போறதா நினைத்து தலைப்பை பாத்து வந்தா தயவு செய்து வேற பக்கம் போய்டுங்க... இல்லை நேரம் போகலை எந்த கர்மத்தையாவது வாசிக்கலாம்னு நினைச்ச இந்த கர்மத்தை வாசிங்க

(ராஜாதி ராஜா வான ராஜ ராஜ சோழனும் அவரது மகனும் ராஜேந்திர சோழனும் தங்களுடைய சந்ததிகள் எப்படி நாட்டை வழி நடத்துகிறார்கள் என்று பார்வை இட இப் பூமிக்கு மறுபடி வருக்கிறார்கள்

அவர்கள் தம் முப்பாட்டனார் கரிகால சோழன் கட்டிய உலகில மிக பழமையான கல் அணைக்கு வருகிறார்கள், வந்தவர்கள் தங்கள் சம்பாசனைகளை இவ்வித மாக தொடக்குகிறார்கள்)

அப்பா நம் பாட்டனார் கட்டிய அணை எவ்வளவு கம்பிராமாக துளி அளவும் சேதம் இல்லாமல் இருக்கிறது

ம்ம்ம்.. நானும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்

அப்பா இடை பட்ட கால சுழற்சியில் எவளோவோ மாற்றங்கள் இன்றும் நம் புகழ் பறை சாற்றி கொண்டு இருக்கிறது.நம் மக்களின் வாழ்கை தரம் எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது

ஏதும் வியப்பாக இல்லை ராஜேந்திரா...நாம் இருந்த காலத்திலேயே இந்த பூங்கா அடர்ந்த காடுபோல இருக்கும், ஆனால் இன்று பூங்கா என்ற பெயரில் ஒரு சில மரங்களை தான் பார்க்க முடிகிறது.இந்த அணையின் நீர்மட்டம் ஒரு நாளும் குறைந்ததில்லை, இப்பொது தண்ணிர் இருபதே தெரிய வில்லை.நாம் குதிரை படைகள்,காலால் படைகள் மற்றும் யானை படைகள் நடந்து செல்ல அமைத்த சாலைகள் அப்படியே இருக்கிறது.மக்களின் நடை உடை பாவனைகளில் இருகின்ற மாற்றம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இல்லை

நானும் கவனித்தேன் அப்பா, ஆனால் உங்களுக்கு நம் மண்ணை குறை பற்றி கூறினால் பிடிகாது எனவே தான் அவைகளை பற்றி பேச வில்லை

ராஜேந்திரா நானும் நீயும் போன பிறகு நம் தாய் மண்ணை தமிழனை விட அயல் நாட்டினரே அதிகமாக ஆட்சி புரிந்துள்ளனர்

அதன் பின் மன்னர் ஆட்சி முடிவுற்று மக்கள் ஆட்சி வந்ததாக கேள்வி

ஆம், இன்று நடப்பது மக்கள் ஆட்சி தான்.சேர, சோழ, பாண்டியர், சாளுக்கியர், கலிங்கர்,கங்கபாடி,நோலம்பவடி மற்றும் எல்லோரும் சேர்ந்து இந்தியா என்ற நாட்டின் கீழ் இருக்கிறார்கள்

ஒற்றுமையை இருகிறார்களா?

இனம்,மொழி,மதம்,நீர் மற்றும் நிலம் இவைகளை தவிர

ஒற்றுமையில் அங்கம் வகிக்க வேண்டியவைகளே இவைகள் தானே...!!!

மகனே, அணையின் நீர்மட்டம் பற்றி சொன்னேன் அல்லவா, அதற்கு காரணம் இங்கு நடக்கும் இரு மாநில அரசுகளின் உரிமை பிரச்சனை தான்

அப்பா.. நீங்கள் ஆட்சி செய்யும் போதும் கூட இந்த காவிரி நதிக்காக சாளுக்கியர்கள் மீது படை எடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினோம்.அதற்கு சான்றாக நந்தி மலையில் இன்றும் நாம் நிர்மாணித்த கோவில்கள் மற்றும் சிலைகள் உள்ளன. (Nandi ஹில்ல்ஸ் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

ம்ம்ம்.. அது பழைய கதை அப்போது அவர்கள் எதிரிகள், இப்போதோ ஒரு எல்லோரும் தாயின் பிள்ளைகள்

அப்படியானால் அவர்கள் சகோதர்கள், சகோதர பாசத்திற்கு முன்னுதாரணமாக தாங்கள் செய்த தியாகத்தை யாரும் எண்ணி பார்க்கவில்லையா?(தனக்கு கொடுத்த அரியணையை தன் பெரியப்பா மகன் உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்து.மேலும் விவரங்களுக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ளளவும்) சகோதர்களுக்குள் ஏன் இந்த பிரச்னை?

சகோதர்களாக தங்களை வெளி காட்டி கொண்டாலும் உண்மைகள் அவர்கள் சகோதரர்களா என்பது யாருக்கு தெரியும்.இதை இவர்களால் மட்டும் மல்ல இவர்களின் தாயினால் கூட தீர்க்க முடிய வில்லை.இவர்களின் பிரச்சனைகளை வருண பகவானும் என்னை சிறு வயதில் காப்பாற்றிய இந்த காவேரி தாயும் தான் தற்காலிகமாக தீர்த்து வைக்கிறார்கள்.

சகோதர்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்பு தன்மையும் இல்லாத வரையில் இப் பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடையாது.

சரியாக சொன்னாய் ராஜேந்திரா.அப்படி இல்லாத பட்சத்தில் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து வந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும்

அப்பா இதை பற்றி இன்னும் பேசினால் ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று "வாட்லாறு நாகராஜ்" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு இல்ல நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம் வாருங்கள் நாம் நீங்கள் கட்டிய தஞ்சை கோவிலுக்கு போவோம்

Wednesday, August 20, 2008

காதல் கடிதம்

அன்புள்ள தமிழ்வாணனுக்கு,


கல்லுரியின் இறுதி நாளில் நிற்கும் நாம் இந்த முன்று வருடங்கள் உதட்டில் இருந்து ஆயிரம் வார்த்தைகள் பேசிஇருக்கலாம், ஆனால் நாம் உள்ளம் பேசிய வார்த்தைகளை விரிவாக எழுத முன்று யுகங்கள் போதாது என்பதை நான் அறிவேன்.

எதற்கும் பிந்துகிற நான் இந்த மடல் விசயத்தில் முந்த வேண்டும் என்பதகாகவும், என் உள்ளத்தில் மொட்டாய் மூடியிர்ந்த உணர்ச்சி வெள்ளம் மலராய் மலர்ந்து விட்டது என்பதை வெளிபடுத்தவும் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்த விரும்பினேன்.

நாம் உலகிற்கு நட்புரிமை பாராட்டினாலும் நாம் உள்ளத்தின் உரிமையை நாமே அறிவோம். சில சமயம் அந்த அகத்தின் உணர்வை தெரிந்து கொண்ட நம் நண்பர்கள் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் போதும் அதை நான் ரசித்ததை விட இந்த உலகத்திலே மேலான காரியம் ஒன்றும் இல்லை.

இந்த கல் நெஞ்சில் கள்வனாய் நுழைந்து காதல் என்னும் மந்திரம் ஓதி கலை கரைத்து பால் ஆகினாய். கடுகு போல நுழைந்த நீ கடல் போல் விஸ்வருபம் ஆனாய்.

நீ எனக்குள் இருக்கும் ஆனந்தத்தில் என்மனமும் பஞ்சு போல மிதந்து வானம் சென்று அங்கு உள்ள நச்த்திரங்களை அழைத்து வந்து மனதிற்குள் பறக்க விட்டது.

காதல் ஒரு கானல் நீர் என்று பலமுறை பெரியவர்கள் குறும் போது இது அவர்களின் இயலாமை என் நினைத்த நான் அதை மறு பரிசிலனை செய்யும் போது நான் அறிந்த உண்மையை உங்களுக்கும் உணர்த்த வேண்டும்..

கானல் நீர் அழகானது அதை பார்த்து ரசிக்கலாம், ஆனால் அதை பருகி நாம் தாகம் தீர்க்க முடியாது என்பதை மறுக்க முடியாது.அதை போல் இந்த கல்லுரி காதல் நம் வாழ்கை தாகத்தை தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.

கல்லூரி காதலை நடமுறைக்கு ஒப்பிட்டால் அது எட்டு சுரக்காய் போன்றது அது கறிக்கு உதவாததை போல இந்த காதலும் வாழ்கைக்கு உதவாது என்பதையும் புரிந்து கொண்டேன்.

கல்லூரியில் பயிலும் பொது காதல் செய்வதை பெருமையாக நினைக்கும் இளைஞர்களுக்கு நாமும் விதி விலக்குஅல்ல. அதுவே நாம் தலை விதியும் அல்ல என்பது உண்மை.காதல் ஒரு அத்தியாயம் வாழ்கையில் என்பது எனக்கு தெரிந்து விட்டது


வாழ்கையின் உண்மையை வெளிச்சம் இட்டு காட்டியது எனக்கு கிடைக்க போகும் எதிர்கால மண வாழ்க்கை. அதுவே இது நாள்வரையில் உண்மை என நம்பி கனவுலகில் சந்சரித்து இருப்பதை அடி கோடிட்டு காட்டியது.ஆம் ... எனக்கு திருமணம் நிச்சைக்க பட்டு விட்டது அமெரிக்க மணமகன் என் கணவன் ஆக போகிறார், திருமணம் முடிந்து அவருடம் அமெரிக்க செல்ல இருக்கிறேன்.


இந்த மடலின் ஆரம்பத்திலே தங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களை கூறிய நான் இந்த உண்மையும் சொல்லவேண்டிய கட்டாயம், இது உங்களுக்கு கசப்பை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





நாம் காதல் அத்தியாத்தின் முடிவில் எனக்கு ஒரு நல் வாழ்வு ஆரம்பமாகிறது.இதே ஆரம்பம் வரைவில் நீங்களும் அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.


அன்புடன்,

தாமரை செல்வி.



முக்கிய குறிப்பு: பின் புறத்தில்....தயவு செய்து வாசிக்கவும்.


பின் புறத்தில்: இந்த மடல் முலம் என் மனதை திரையிட்டு கட்டியதால், என் வரிகளால் என் எதிர் கால வாழ்க்கைக்கு எந்த வித பாதிப்பும் வரகூடாது என்பதற்க்காக, இதை படித்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தி அதிலே ஒரு செட்டு இந்த மடலின் விழுந்தாலும் இதில் உள்ள அத்தனை எழுத்துகள் அழிந்து விடும்.

ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்...



(கடிதம் முழுவதும் எரிந்து சாம்பலானது, அது எரியும் பொது தமிழ் வாணன் கையும் சுட்டது. சாம்பலானது கடிதம் மட்டுமல்ல அவன் இதய கோட்டையும் தான். சுட்டது அவன் கைமட்டு மில்லாமல் அவன் மனதும் தான்.)

Tuesday, August 19, 2008

கதாநாயகன்

கதை எழுத வேண்டும் நீண்ட நாள் ஆவல். அந்த முயற்சியின் பலன் தன் இந்த சிறுகதை. இது கதையா இல்லை நேரத்தை விரயம் செய்யயப்பட்ட கிறுக்கலா என்பது வாசிபவர்களுகே வெளிசம். முன்னுரையை கடந்து நேராக கதைக்குள் செல்வோம்.

அந்த மார்கழி மாதத்திலே நாம் கதையின் நாயகன் எனபடுகிற ராம் பேருந்து நிலையத்திலே தான் அலுவலகம் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றான். அவன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது, அதில் வழக்கம்போல கட்டுகடங்கா கூட்டம், ஆனால் எப்படியும் இவன் போகவேண்டும். கூட்டதிலெ முண்டி அடித்து அவனுக்கு இடம் கிடைத்தது படியில், அது ஒன்றும் புதிது இல்லை அவனுக்கு கல்லுரி நாள்களில் நிறைய அனுபவம். பேருந்து கிளம்பியதும் அவன் முகத்தில் சில்லென்று பனிகாற்று வீச, அவன் முகத்தை பேருந்துக்கு உள்பக்கமாக திருப்பினான்.


பேருந்து உள்ளே இருப்பவர்களை ஒரு நோட்டம் விட்டான், ஒரு இடம் வந்தும் அவன் கண் அசைய மறுத்து. அதற்கு இடையூரால நடத்துனர் குரல் "யார் எல்லாம் டிக்கெட் எடுக்கலை, சீக்கிரம் எடுங்க" என்றார். அவர்க்கு வேகமாக சில்லறை கொடுத்து விட்டு. மீண்டும் தன் பார்வை சென்ற பழைய இடத்திற்கு சென்றான்.அங்கு ஒரு நல்ல அழகு உள்ள பெண் நின்று கொண்டு இருந்தாள்.அவள் அழகை வர்ணித்து கதையின் போக்கை மாற்ற கதை ஆசிரியருக்கு விருப்பம் இல்லாததால் நீங்கள்(யாராவது வாசித்தல்) யூகித்து கொள்ளுங்கள். அவள் நின்ற இடத்தின் அருகில் சுழன்ற ராம்மின் கண்கள், அவளை சுற்ற ஆரமித்தது, நொடியில் அவளை கண்கள் முலம் மனதிகுள் பதித்தான்.

மீண்டும் அவள் நோக்க ஆரம்பித்தான், இம்முறை அவள் முகத்தை, பார்த்த அவனுக்கு ஆச்சர்யம் அவளும் இவனையே பார்ப்பது போன்று, சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் அவளை பார்பதாக தெரியவில்லை, அதை உறுதி படுத்தி கொண்டு மீண்டும் அவளை நோக்கினான், அவள் பார்வை அவனை விட்டு அகன்றதாக தெரியவில்லை. அந்த நிகழ்வை ஒரு உலக அதிசயமாகவே எண்ணினான்.ஏனெனில் கல்லுரி நாள்களில் எவளவோ கடுமையாக முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனதால் பெண்களிடமே ஒரு வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பு எல்லாம் மறைந்து விருப்பாய் அவளை பார்த்தான், அவளும் இவனையே பார்க்கிறாள் என்று மீண்டும் உறுதி படுத்திகொண்டான்


பார்வையிலே நேரம் கடத்தாமல் அவளை நோக்கி புனைகை பூவை உதிர்த்தான். அவளும் மறுமொழியாக புனகையை பதிலாய் தந்தாள். இந்த ரம்யமான சுழலுக்கு இடையுரலாக ராம் இறங்கும் இடம் வந்தது. வேறு ஒரு நாளாக இருந்தால் அவளுடனே கூட போய் இருப்பான், அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதால் வேண்ட வெறுப்பாக பேருந்தில் இருந்து இறங்கினான். இறங்குவதக்கு முன் அவள் இவனை நோக்கி கண்களால் விடை பெற்றாள். அன்று பகல் முழுவதும் அவன் நனைவுகள் அவளை சுற்றியே வந்தது.


இன்று நடத்த சம்பவம் அவனுக்கு ஜோசியத்தின் மீது ஒரு அபார நம்பிக்கை வந்தது, ஏனெனில் ஜோசியதிலே அவனுக்கு காதல் கல்யாணமே நடக்கும் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்று ஜோசியகர்கள் சொல்லும் பொது அதை நம்பவில்லை இப்போது அதை நம்பினான். அதை பரிச்சை பண்ணவே தனக்கு திருமணம் செயவேண்டும் என்று ராம் அம்மா சொல்லும்போது இதை மனதில் வைத்துக்கொண்டு நாள்களை கடத்தினான்.

அவன் எதிர் பார்த்த அந்த தருணம் இவ்வளவு சீக்கிரம் நடந்ததால் அவனுக்கு வானளாவிய மகிழ்ச்சி, அன்று பகலும் இரவும் ஆமை போல செல்வதாய் உணர்ந்தான். அடுத்த நாள் எப்போது வரும் என்று நொடிகளை எண்ணிக்கொண்டு இருந்தான். பொழுதை கழித்தான், இரவும் கடந்தது அதி காலையிலே எழுந்து குளித்து நேற்று வாங்கிய புது உடைகளை மாட்டி கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றான் இன்று அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தவனாய் காத்து இருந்தான்.

பேருந்தும் வந்தது அதிகம் கூட்டம் இல்லை ஏறிய உடனே அவன் கண்கள் அவளை தேடின அவளும் அகப்பட்டாள், ஆனால் அவள் இவனை பார்த்தும் அவள் முகத்தில் எந்த அசைவையும் காணமுடியவில்லை. மாறாக மிகவும் சோகமாக காணப்பட்டாள்.எதிர் பார்க்காத இந்த ஏமாற்டத்தை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். பேருந்து கிளம்பு முன் வேறு சிலர் ஏறினார்கள்.


"என்ன கொடுமை சார்" என மனசுக்குள்ள நினைத்தாலும்,மறுபடியும் ஒரு கல் எறிவோம் என்று அவளை பார்த்தால் இம்முறை அவனுக்கு கை மேல் கனியே கிடைத்தது.அவள் இவனை சந்தோசமாக பார்த்து குறுநகை புரிந்தாள். அவன் வேதனை பகலவனை கண்ட பனி போல மறைந்து மலர்ந்த செந்தாமரை முகத்தை போல் ஆனது.


அவளை பார்த்து அவனும் சிரித்தான். யாரோ உறவுகாரகள் இருந்திருப்பார்கள் அதனால் தான் அவளிடம் தன்னிடம் அப்படி நடந்து கொண்டதாக எண்ணினான். அதை புரிந்து கொள்ளாமல் அவளை தவறை நினைததற்காய் அவளின் பேசும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணினான்.

இவ்வாறாக ராம் யோசித்து கொண்டு இருக்கையில் அவன் எதிர் பாரவகையிலாக அடுத்து வந்த பேருந்து நிறுத்ததிலே அவள் இறங்கினாள். முன் அறிவிப்பு இன்றி நடந்த காரியத்தில் செய்வது அறியாமல் ஒரு கணம் யோசித்தான் பின் சுதாரித்து கொண்டு அவனும் இறங்கினான் அவனுடன் அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களும் இறங்கினார்கள். இறங்கியதும் அவள் போகும் திசையிலே நடந்து சென்றான். அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஆவலை வேகமாக நடந்து பின் தொடர்ந்தான். அவளுக்கு கூப்பிட்டால் கேட்கும் தொலைவில் நின்று அவன் "ஹலோ கொஞ்சம் நில்லுங்கள்" என்றான். அவள் அவனை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரமித்தாள்.


அவனும் விடவில்லை தொடர்ந்து சென்றான். மீண்டும் ஒரு முறை ஹலோ என்று சொல்ல வாய் எடுத்தான். இவன் "ஹலோ" என்று ஒரு குரல் தன் பின்புறம் இருந்து வருவதை கேட்டான். ராம் திரும்பி என்ன என்று கேட்பதற்குள் அவனை கூப்பிட்ட குரலுக்கு சொந்தக்காரன் ராம் முகத்தில் ஒரு குத்து விட்டான். குத்து விழுந்த வேகத்தில் அவன் மூர்ச்சை அடைந்தான்.
மூர்ச்சை தெளிந்து பார்கையில் அவன் ஒரு மருத்துவமையில் இருப்பதாய் உணர்ந்தான்.தனக்கு என்ன நடந்தது என்பதை நினைத்து பார்க்க அவனால் முடியவில்லை. காதல் கதைக்கு எப்போதும் வில்லனின் ஆரம்பம் குறைத்த பச்சம் ஒரு கனவு டூயட் பாட்டு முடிஞ்சவுடனே தானே வரும். ஆனால் எனக்கு இன்னும் காதலே ஆரமிக்கலை அதுக்குள்ளே வில்லனா? என நினைத்து கொண்டு எழுந்திரிக்க முயன்றான்.

அதற்குள் "என்னை மனிக்கவும்" என்ற குரலை கேட்டு தன் பார்வையை திருப்பினான்.அவனை பார்த்தும் அவனால் நம்பமுடிய வில்லை அவன் வேறு யாருமல்ல. ராம் மருத்துவமனை வர காரணமாக இருந்தவன். அவன் பின்னால் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். அவள் யாருமல்ல ராமின் காதலி என்று நினைத்து கொன்று இருக்கும் அந்த பைங்கிளி. அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்து அவன் குழப்பம் மேலும் அதிகமானது.

ராமின் எண்ணத்திற்கு இடையுரலாக அவன் இடை மறித்தான் "என் பெயர் சுந்தர், நடந்த சம்பபதிற்காக நான் மிகவும் வருத்தபடுகிறேன். தயவு செய்து மனதில் ஒன்றும் வைத்து கொள்ளவேண்டாம்". அவன் சொல்லி முடித்தவுடனே அவள் ராமிடம் "இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு" என்றாள். அவள் குரலை கேட்டு ஆகா என்ன ஒரு அருமையான தெய்விக குரல் என்று நினைத்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள். " என் பெயர் பல்லவி, நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை. உங்களால நான் இன்றைக்கு புது வாழ்வு பெற்றேன்"

இந்த வார்த்தைகளை கேட்டவுடனே ராம் மனம் ஒரு புள்ளி மானை போல துள்ளி குதித்தது என்று சொன்னால் அது உண்மை. இவள் என் மீது வைத்திருக்கும் காதலுக்கு என்ன மரியாதை, இப்படி ஒரு பெண்ணை அடைய நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என எண்ணினான்.

இப்போது சுந்தர் இடைமறித்து " ஆமாங்க நானும் உங்களுக்கு நன்றி சொல்லணும் நீங்க இல்லேன்னா நாங்க ரெண்டு பெரும் சேரமுடியாமல் போய் இருக்கும்". இதை கேட்ட ராம் சுந்தரை உற்று பார்த்தான், அவன் பேசியதின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறானா என்று நினைத்தான்.

மீண்டும் பல்லவி தன் பல்லவியை தொடர்ந்தாள், " ஆமா இவர் சொல்லுறது உண்மை, நானும் இவரும் காதலர்கள்,எங்களுக்குள் ஒரு சின்ன மனஸ்தாபம், அதை சரி செய்ய பலமுறை முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை. உங்களை பேருந்து சந்திப்பிலே பார்த்தவுடனே எனக்கு இந்த யோசனை வந்தது. அதின் பலனாக எனக்கு நான் தொலைத்து திருப்ப கிடைத்தது. என்னை மனிசுடுங்க அண்ணா".அதன் பின் அவள் பேசிய ஏதும் அவன் காதில் விழவில்லை.

"ஐயோ யாராவது என்னை காப்பாற்றுங்கள், இங்கு என்ன நடக்கிறது,நான் இருப்பது கனவு உலகிலையா இல்லை நினவு உலகிலா ஏன் எல்லோரும் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்கள்" என்று சப்தமிட்டான்.


அப்போது அந்த வழியாக வந்த மருத்துவர் அவனிடம் வந்து "ராம் நீங்க வீட்டுக்கு போகலாம், நீங்கள் பரிபுரணமாய் இருகிறார்கள், நான் தரும் மாத்திரைகளை ஒரு வாரம் சாபிடுங்கள்" என்றதும் தன்னை சுற்றிலும் பார்த்தான், மருத்துவர் தவிர யாரும் அங்கு இல்லை, அவன் மருத்துவரிடம் எல்லா விவரங்களையும் கேட்டறிந்தான்.அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய வந்தது.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம்மாக தெரிந்தது அவன் கனவு காணவில்லை என்று, மருத்துவமனையை விட்டு ஒரு தெளிந்த சிந்தையுடன் ராம் வெளியே வந்தான். நினைவுகளை பினோக்கினான், பல்லவி கூறியதை கேட்டு அதிக உணர்ச்சி வசத்தால் தான் மீண்டும் நினவு இழந்துருக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் கழித்து சென்று இருக்க வேண்டும்.

இன்று காலையில் தன்னை பார்த்து அவள் எந்த சலானம் இல்லாமல் இருந்ததற்கும் இப்பொது விடை கிடைத்தது, பல்லவி சுந்தரை எதிர் பார்த்து காத்து இருந்திருப்பாள், அவன் வராததால் அவள் சோகமாக இருந்திருப்பாள். சுந்தர் பேருந்திலே அடுத்த நிறுத்ததிலே ஏறி இருப்பான். அவன் ஏறியதும் அவள் தன் காதல் சோதனையை தொடர்ந்து இருப்பாள்.

முதலில் அம்மாவிடம் சொல்ல வேண்டும் தனக்கு ஒரு நல்ல பெண் பாருங்கள் என்று மனதில் நினைத்தான். அது மட்டுமில்லாமல் இந்த கதையில் தன்னை கதைநாயகனாக சித்தரித்த கதை ஆசிரியரை தன் மனதிற்குள் வசை பாடிகொண்டே சென்றான்.

Tuesday, June 17, 2008

வெண்பா - துவக்கப்படி

முன்பு கல்லூரி நண்பர்கள் குழுமத்தில் இட்ட மின்னஞ்சல் கீழே தருகிறேன்.

வெண்பா இலக்கணம் எளிதான ஒன்று. நீ சொன்ன 'rhythamic' அந்த இலக்கணத்தின் படி எழுதுனா தன்னால வந்துரும், பெரும்பாலும். அதை செப்பலோசைன்னு சொல்றாங்க.

இப்ப முதல் பாடமா ஒரு செய்யுளின் அடிப்படையை பாக்கலாம். அசை என்னும் உறுப்புதான் அந்த அடிப்படை. (எங்கயாவது தப்பு விட்டுருந்தேன்னா, தெரிஞ்சவங்க குட்டுங்க)

இரண்டு அசைகள் உண்டு. நேரசை, நிரையசை.
தனிக்குறில், தனி நெடில் நேரசை எனப்படும். அடுத்தடுத்து வரும் குறில், குறில் தொடர்ந்த நெடில் நிரையசை. புள்ளி வைத்த எழுத்துக்களுக்கு அசை மதிப்பு கிடையாது.

இப்ப சில காட்டுகளைப் பாக்கலாம்.
நேர், பார், ஏ, நீ - நேரசை - தனிநெடில், புள்ளியைத் தவிர்க்கலாம்.
குறில், அவர், இடு, அணல் - நிரையசை - குறில் தொடர்ந்து வருகிறது
நிரை, இசை, (கூ)வுமே - நிரையசை - குறில் தொடர்ந்த நெடில் (ஐகாரக்குறுக்கம்? எடுத்துக் காட்டுறதுக்குள்ள கண்ணைக் கட்டுது ;-)

அசைகள் தனித்தோ, சேர்ந்தோ வந்தால் சீர் எனப்படும். பெரும்பாலும் ஒரு சொல்லை ஒரு சீராகக் கொள்ளலாம்.

சுங்கம் தவிர்க்கவா சுட்டினேன்? இந்தத் தொடரில் மூன்று சீர்கள் உள்ளன. அவற்றை கீழ்வருமாறு அசை பிரிக்கலாம்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்?
நேர்/நேர் நிரை/நிரை நேர்/நிரை

இந்த சீர்களை நினைவில் வைத்துக் கொள்ள இன்னொரு உத்தி உண்டு.
நேர்நேர் - தேமா (தே/மா)
நேர்நிரை - கூவிளம்(கூ/விளம்)
நிரைநேர் - புளிமா(புளி/மா)
நிரைநிரை - கருவிளம்(கரு/விளம்)
நேர்நேர்நேர் - தேமாங்காய்(தே/மாங்/காய்)
நிரைநேர்நேர் - புளிமாங்காய்(புளி/மாங்/காய்)
நிரைநிரைநேர் - கருவிளங்காய்(கரு/விளங்/காய்)
நிரைநேர்நேர் - கூவிளங்காய்(கூ/விளங்/காய்)

குறிப்பு - வெண்பாவில் கனிச் சீர் (தேமாங்கனி முதலியவை) மற்றும் நாலசைச் சீர்கள் வராது. எனவே தவிர்த்திருக்கிறேன்.

தேமாவும், புளிமாவும் பொருளற்ற குறிச்சொற்கள். ஒரு சீரை அடையாளம் காண உதவும், அவ்வளவே. எப்படி அடையாளம் காட்டுகிறது?

தேமாவைப் பிரித்தால் தே/மா, நேர் நேர் - அவ்வளவு தான். அதுபோலவே மற்ற சீர்ப் பெயர்களும். முழுப்பாடலையும் கீழே இவ்வாறு அசை/சீர் பிரித்திருக்கிறேன், சரி பாருங்கள்.

சுங்/கம் தவிர்க்/கவா சுட்/டினேன்? அன்/பர்/கள்
நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர்
தேமா கருவிளம் கூவிளம் தேமாங்காய்

சங்/கம் கவ/னிக்/கத் தான்/தந்/தேன் - வெண்/பா
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
தேமா புளிமாங்காய் தேமாங்காய் தேமா

விளை/யா/டி ஒன்/றிட/வே, நண்/பா/வுன் அஞ்/சல்
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா

விதை/யா/கக் கொண்/டேன் நான்.
நிரைநேர்நேர் நேர்நேர் நேர்

இப்ப அசை பிரிச்சாச்சா? இனி வெண்பா வாய்ப்பாடு பாத்தோம்னா எளிதா இருக்கும்.

மா முன் நிரை - மாவில் முடியும் சீருக்கு அடுத்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

தேமா, புளிமாவைத் தொடர்ந்து வரும் சீர் நிரையசையில் தொடங்க வேண்டும்.

விளம் முன் நேர் - விளத்தில் முடியம் சீருக்கு அடுத்து வரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

கருவிளம், கூவிளத்தை தொடரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

காய் முன் நேர் - காய்ச்சீருக்கு அடுத்த சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் சீர்களைத் தொடரும் சீர்

இதுதான் அந்த வாய்ப்பாடு. இப்படி எளிதாக நினைவில் வைக்கத்தான் தேமா, புளிமான்னு குறிச்சொற்கள்.

இந்த வாய்ப்பாடு பொருந்தும் படி நான்கு சீர் கொண்ட மூன்றடிகளும், நாலாவது அடியில் மூன்று சீரும் அமைய எழுதினால் வெண்பா எழும்.

ஈற்றடி, ஈற்றுச்ச்சீருக்கு தனி வாய்ப்பாடு உண்டு. (இறுதி அடி, இறுதிச் சொல்)
ஒரசையில் முடிய வேண்டும்.

கீழ்க்கண்ட அசைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நேரசை - நாள், நான், தேன், தா, நீ
நிரையசை - மலர், அவன், அது
நேர்பு - காசு, அன்பு, பண்பு, (உகரம் தொடர்ந்து வரும் நேரசை)
நிரைபு - பிறப்பு, உறுப்பு, தவிப்பு, தொடர்பு, உவந்து, அறிவு (உகரம் தொடர்ந்து வரும் நிரையசை)

அடிப்படை அவ்வளவுதான். இன்னும் சில நுண்குறிப்புகள் உண்டு.

அடிதோறும் எதுகை, முற்சீர், மூன்றாம் சீரில் மோனை (முதல் எழுத்து ஒன்றுதல்) , இரண்டாம் அடி ஈற்றுச்சீர்(தனிச்சொல்) முதற் சீருக்கு எதுகையாக அமைதல் (மேற்கண்ட பாடலில் உள்ளது போல - நேரிசை வெண்பா)
நேரிசை வெண்பா (இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்று வரும் மேலே உள்ள பாடல்), இன்னிசை வெண்பா பிரிவுகள் உண்டு.

குறள் வெண்பா (இரண்டடி), சிந்தியல் வெண்பா (மூன்றடி), பஃறொடை வெண்பா (நான்கடிக்கும் அதிகமாக) வகைகள் உண்டு. ஆனால் அனைத்திற்கும் மேலே சொன்ன அடிப்படை பொருந்தும்.

வெண்பாவில் பெரும்பாலும் தனிப் பாடல்கள் தாம் இயற்றப் பட்டுள்ளன. முழுவதும் வெண்பாவிலேயே பாடப் பட்ட காவியம் புகழேந்திப் புலவரின் நளவெண்பா. 'வெண்பாவிற்கோர் புகழேந்தி' என்றே அவரது பெயர்!

என்பால் இயன்ற(து) எடுத்தே இயம்பினன்
வெண்பா எழுதவே ஆவலர் யார்உளர்
உன்பால் எழுந்திடும் ஐயம் இருந்திடில்
பண்பாய் அவையில் மொழி.

* இதுதாங்க இன்னிசை வெண்பா! இரண்டாவது அடியில் தனிச்சொல் பெறாமல் எதுகை அமைந்து வருவது.

* என்பால் இயன்ற தெடுத்தே இயம்பினன் - அப்படின்னு தான் இருக்கணும். படிக்க வசதியா இது மாதிரி அடைப்புக்குள் பிரிச்சு எழுதுவாங்க.

நண்பர்களுக்கான குறிப்பை இடுகையாப் போட அச்சமாத்தான் இருக்கு. தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பதால் துணிகிறேன்.

Thursday, May 08, 2008

அலையின் காதல்

அலைகளுக்கு ஏன் இந்த காதல் மோகம்
நில மகளை அணைக்க துடிக்கிறது
அவளும் ஒரு பெண் என்றும்
தான் தங்கி இருப்பது நிலமகள் மடி என்று அறியாமல்
அலைகளின் காதல் மோகம் தணிக்க
நில மகள் மடி சரிக்க
வந்ததோ சுனாமி
அழிந்ததோ இப்பூவுலகின் மக்களும் மாக்களும்
தணிந்தது நிலமகள் கோபம்
தணியவில்லை அலைகளின் காதல் மோகம்