Tuesday, October 30, 2007

அறிவுடமை-அரசியல்-அறிவுடமை-43

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அறிவு அழிவிலிருந்து ஒருவனைக் காக்கக் கூடியது. அது ஒருவனுக்குப் பகைவராலும் வெல்ல முடியாத பாதுகாவலாகும்.

அற்றம் - அழிவு

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

செல்லக்கூடிய வழிகளிலெல்லாம் செல்ல விடாமல் தீமையை விலக்கி, நன்மையை அடையச் செய்வது அறிவு

-- மனம் போகின்ற போக்கிலெல்லாம் அதனைப் போகவிடாமல் தடுத்து, (அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து) தீமைகளிலிருந்து விலக்கி( தீது ஒரீஇ), நல்லனவற்றை நோக்கி மனதினைச் செலுத்துவது அறிவு ஆகும்.

ஒரீஇ - விலக்கி

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எந்த செய்தியையும், எவர் சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை ஆராய்ந்து காணச் செய்வது அறிவு.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

தான் சொல்வது அரிய பொருளாயினும், பிறர்க்கு எளிதாகப் புரியும்படி சொல்வதற்கும்; பிறர் சொல்வதின் நுட்பமான பொருளை உணரவும் உதவுவது அறிவு.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

உலகத்தை நட்பாக்கும் அறிவு, முன்னர் விரிதலும், பின் சுருங்குதலும் இன்றி ஓர் நிலையில் நிற்பதாகும்.

-- ஒருவன், இருக்கும் இடத்தின் சூழலுக்கேற்ப உலக வழக்கைத் தழுவி நடப்பது அறிவான செயல்தான். ஆனால், உலகத்தார் மகிழ்வதற்கெல்லாம் மகிழ்வதும், வருத்தப்படுவதற்கெல்லாம் வருந்தாமலும் இருக்கச் செய்வது அறிவாகும்.

தழீஇ - தழுவுதல்
ஒட்பம் - அறிவு
கூம்பல் - சுருங்குதல்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

உலகத்தோடு ஒத்து வாழச் செய்வது அறிவு.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

அறிவுடையவர் வரவதை முன்பே ஊகித்து அறிவர்; அறிவிலார் வந்த பின்னே அறிவர்.

-- அறிவுடையோர், பின்னால் வரக்கூடிய நன்மை, தீமைகளை முன்னமே ஆராய்ந்து அறிந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர்; அறிவிலாதவர்களால் அங்ஙனம் அறிய இயலாது.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்ச வேண்டிய தீயவற்றிற்கு அஞ்சுபவர் அறிவுடையோர்; அவ்வாறின்றி, அஞ்சாமல் அணுகுபவர் அறிவில்லாதவர்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

எதிர் வருவதை அறியக்கூடிய அறிவுடையவர்க்கு, நடுங்க வைக்கும் துன்பம் வருவதில்லை.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

எப்பொருளும் இல்லையாயினும், அறிவுடையவர்கள் அனைத்தும் உடையவர்களாவர்; அறிவில்லாதவர்கள் எவை பெற்று இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர்களாவர்.

No comments: