Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -வாய்மை -30

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
'வாய்மை' என்பது யாதென்றால், பிறருக்குத் தீமையில்லாத சொற்களை எப்போதும் சொல்லுதல் ஆகும்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

குற்றமில்லாத நன்மை தருவதென்றால், பொய்யான சொற்கள் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதப்படும்.

புரைதீர்ந்த -குற்றமில்லாத

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசினால் அவன் நெஞ்சே அவனைச் சுடும்.

உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

ஒருவன் தன் மனத்தால் பொய்யாது நடப்பானாயின், அவன் உயர்ந்தோரது உள்ளங்களில் எல்லாம் இருப்பான்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்வானாயின், அவன் தவத்தோடு தானமும் செய்வாரினும் சிறப்புடையவனாவான்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதுமில்லை; அதில் தளராமல் உறுதியாய் இருத்தலே எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன், பொய்யாமை என்னும் அறம் பொய்யாகாமல் நடப்பானாயின், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாமலேயே அது அவனுக்கு மிகுந்த நன்மை தரும்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

புறஉடலின் தூய்மை நீரால் ஏற்படும்; மனத்தின் தூய்மை வாய்மைச் சொற்களால் அறியப்படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

சான்றோர்களுக்கு, புறத்திருளைப் போக்குகின்ற விளக்குகள் எல்லாம் சிறந்த விளக்காகா; அகத்திருளைப் போக்குகின்ற பொய்மையாகிய விளக்கே அவற்றினும் சிறந்ததாகும்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள், வாய்மையினும் சிறப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.

No comments: