Monday, October 08, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - அழுக்காறாமை -17

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

ஒருவரிடம் பொறாமை குணம் இல்லை எனில், அவரிடம் அதை விட சிறப்பு வேறு இல்லை.

விழுப்பு - சிறப்பு
அன்மை - இல்லாமை

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பிறரிடம் பொறாமை பேணுபவன் அறத்தினால் ஆன செயல்களை வேண்டாம் என தள்ளி விடுவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொறாமையினால் விளையும் தீமைகளை அறிந்தோர், அதனால் தூண்டப்பட்டு தீமைகளைச் செய்ய மாட்டார்கள்.

ஏதம் - துன்பம்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

பொறாமை உடையோருக்கு அதுவே கேடு விளைவிக்கும் பகையாய் விளங்கும்.

சால் - நிறைந்தஒன்னார் - பகை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பிறன் கொடுப்பதில் கூட பொறாமை கொள்ளும் ஒருவன், தன் சுற்றத்தாருடன் உண்ணவும், உடுக்கவும் இல்லாத நிலையை அடைவான்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை உடையவனை திருமகள் வெறுத்து மூத்தவளுக்குக் காட்டுவாள்.

செய்யவள் - திருமகள்
தவ்வை - மூத்தவள், மூதேவி

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொறாமை உடையவனின் செல்வம் அழிந்து, தீயில் வாட்டும் கொடுமையில் விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொறாமை கொண்டவனால் நற்செயலும், நல்லவனால் கேடு விளைவதும் அரிது.

அவ்வியம் - பொறாமை
செவ்வியம் - அழகு, இல் வாழ்வு

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை, பொறாமை தவிர்த்ததால் ஒருவர் வீழ்ந்ததும் இல்லை.

No comments: