Tuesday, October 30, 2007

பொருட்பால்-அரசியல்-கேள்வி-42

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

ஒருவர் பெறக்கூடிய செலவங்களுல் எல்லாம் தலையானது செவி வழி கேட்டுப் பெறும் அறிவு ஆகும்.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவி வழி கேட்கும் கல்வி இல்லாத போது வயிற்றுப் பசி போக்க முனைய வேண்டும்.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

செவிவழி பெற்ற அறிவுடையவர் நிலத்தில் வாழும் கடவுளை ஒத்தவர்.

அவி உணவு - வேள்வியில் இறைவனுக்கு அளிக்கப்படும் உணவு, அவிர் பாகம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

முறையான கல்வி பயிலாவிட்டாலும் கேள்வி அறிவு ஒருவன் தளர்ந்த, வறுமை அடைந்த பொழுது கை கொடுக்கும்.

ஒற்கம் - தளரந்த, வறுமை
ஊன்று, ஊற்று எனத் திரிந்தது.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

ஒழுக்கம் நிறைந்தவரின் அறிவுரை கேட்பது வழுக்கும் இடத்தில் ஊன்று கோல் போல் உதவும்.

இழுக்கல் உடைய உழி - வழுக்கல் உடைய நிலம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

சிறிய அளவினது ஆயினும் நல்லதைக் கேட்டு அறிதல், நிறைந்த பெருமையைத் தரும்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

செறிந்த அறிவுடையவர் பிழையாகக் கூட அறியாமை நிறைந்த சொல்லைக் கூற மாட்டார்கள்.

ஈண்டிய - செறிந்த

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

அறிவார்ந்த சொற்களைக் கேளாத செவி, கேட்குந் திறனிருந்தாலும் செவிடாகவே கொள்ளப் படும்.

தோட்கப் படாத - துளைக்கப் படாத

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

நுட்பமான அறிவில்லாதவர்கள் பணிந்த சொற்களை உடையவராய் இருத்தல் அரிது.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?

செவியினால் அறிவினைப் பெறாமல், வாயினால் சுவை உணரந்து நன்கு புசிப்பவர்கள் இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?

அவிதல் - ஒழிதல்

No comments: