Wednesday, October 10, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - ஒப்புரவு அறிதல் -22

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.

மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.

கடப்பாடு இங்கு ஒப்புரவு, ஒற்றுமை என்னும் பொருளில் வந்துள்ளது. கடமை என்ற பொருளும் உண்டு.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

முயன்று திரட்டிய பொருள் எல்லாம் தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே.

வேளாண்மை - உதவி

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

ஒற்றுமையைப் போல் வேறொன்றை கடவுளர் உலகம் சென்றாலும் பெற இயலாது.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.

ஒற்றுமை போற்றுவர் தவிர மற்றவர்கள் இறந்தவர்களாகக் கருதப் படுவர்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

நீர் நிறைந்த குளம் போல், பரந்த மனம் உடையவனின் செல்வம் அனைவருக்கும் பயன்படும்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

நல்லவனின் செல்வம், மரத்தில் பழுத்த கனியைப் போல் எவருக்கும் இனிமையானது.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பெருந்தகையானவரின் செல்வம், மரம் மருந்தானது போல் முழுதும் பயன் வழங்க தவறாது.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

தம் கடமையை அறிந்தவர்கள் துன்பப் படும் காலத்திலும், ஒற்றுமையில் குறையாதவர்களாய் இருப்பர்.

இடன் - இடைஞ்சல்
ஒல்குதல் - சுருங்குதல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பிறருக்கு உதவ முடியாத நிலையே நல்லவனுக்கு வறுமையாகக் கொள்ளப் படும்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

ஒற்றுமையால் வரும் கேடு எனின் ஒருவன் தன்னை விற்றும் பெற்றுக் கொள்ளலாம்.

No comments: