Saturday, October 27, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -தவம் -27

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலுமே தவத்திற்கு வடிவமாகும்.

நோன்றல் -பொறுத்தல்
உறுகண் -துன்பம்
அற்றே -அவ்வளவினதே


தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே அத்தவம் கைகூடும். தவப்பயன் இல்லாதவர்கள் தாமும் அதனை மேற்கொள்வது வீணான முயற்சியாகும்.

அவம் -வீண்


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறவியர்க்கு உணவும், உடையும், உறையுளும் தந்து உதவுதலின் பொருட்டாகவே இல்லறத்தார்கள் துறவறநெறியை மேற்கொள்ள மறந்தனர் போலும்.

துப்புரவு -உணவு, உடை, உறையுள்
மற்றையவர்கள் -இல்லறத்தார்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

தம்மறத்திற்குப் பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாகக் கைகூடும்.

ஒன்னார் -பகைவர்
தெறல் -கெடச்செய்தல்
உவந்தார் -விரும்பினவர்
ஆக்கல் -உயரச்செய்தல்


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பெறவேண்டிய பயன்களை வேண்டியபடியே (மறுமையில்) பெறலாமாதலால் தவமானது இம்மையிலேயே செய்யப்படுகிறது.

ஈண்டு -இம்மை

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

தவஞ்செய்பவரே உயிர்க்கு நன்மை செய்பவர் ஆவார், மற்றையவர்கள் ஆசைக்குட்பட்டு தம் உயிர்க்குத் தீமை செய்பவர் ஆவார்.

அவம் -கேடு

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல தவஞ்செய்வாருக்கு அதனால் வரும் துன்பம் வருத்த வருத்த ஞானொளி மிகும்.

நோற்கிற்பவர் -தவஞ்செய்ய வல்லவர்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

தான் என்னும் செருக்கு தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமைப் பெற்றவனை, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் வணங்கும்.


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவநெறியால் ஆத்ம வலிமைப் பெற்றவர்க்குத் தம்மிடத்தே வருகின்ற எமனையும் எதிராக நின்று வெற்றிக் கொள்ள முடியும்.

கூற்றம் -எமன்


இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

உலகில் மெய்யறிவு இல்லாதவர் பலர் ஆனதன் காரணம், தவஞ்செய்வார் சிலராகவும் செய்யாதார் பலராகவும் இருப்பதே ஆகும்.

நோற்பார் -தவஞ்செய்வார்

No comments: