Monday, October 29, 2007

பொருட்பால்-அரசியல்-கல்வி-40

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பிழையின்றி கற்று, பின் கல்வி தந்த அறிவின் வழி செல்லல் வேண்டும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

மொழியின் கூறுகளாகிய எண், எழுத்து தொடர்ந்த அறிவு வாழ்க்கையில் கண்கள் போல் வழிகாட்டுபவை.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கல்வி கண்களைப் போல் வாழ்வில் வழி காட்டும். அத்தகைய கல்வி அறிவில்லாதவர் கண்கள் இருந்தும் குருடர்களாவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

கற்றறிந்தவர் மகிழ்வுடன் கூடி (பிரிவதை எண்ணி) வருத்தத்துடன் பிரிவர்.

உள்ள - மன வருத்தம்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

உள்ளவர் முன் பொருள் வேண்டி நிற்பவர் போல் ஏக்கத்துடன் விரும்பி கற்பவர் உயர்வடைவர். அவ்வாறு பணிவு காட்ட மறுத்துக் கல்லாதவர்கள் கடை நிலை எய்துவர்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

கேணி நீர் தோண்ட ஊறும்; அது போல் கற்கப் பெருகும் அறிவு.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்பவனுக்கு எந்த நாடும், ஊரும் சொந்தமெனத் தெரிவதால், இறப்பு வரையிலும் ஒருவன் தொடர்ந்து கற்காமல் நாளைக் கழிப்பது எப்படி?

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒருமுறை கற்ற கல்வி, ஏழுபிறப்பிற்கும் ஒருவருக்கு துணை இருக்கும்.

ஏமாப்பு - காவல், துணை

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கற்றதால் தாம் இன்புறுவது அல்லாமல் உலகமும் இன்புறுவது கண்டு மேலும் கற்க விரும்புவர் கற்றவர்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

அழிவில்லாத சிறப்புடைய செல்வம் கல்வி. ஆதலால் கல்வி தவிர மற்றவை செலவமாகாது.

No comments: