Tuesday, October 30, 2007

பொருட்பால்-அரசியல்-கல்லாமை-41

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

முறையான அரங்கம் இன்றி சூதாடுபவன் நிலை கற்ற அறிவின்றி அவையில் பேசுபவனுக்கு நேரும்.

அரங்கம் - ஆடுமிடம்
வட்டாடுதல் - சூதாடுதல்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள்
பெண்காமுற் றற்று.

கல்லாதவன் அவையில் பேச விழைவது முலை இரண்டுமின்றி (பெண் அடையாளமின்றி)பெண்மையை வேண்டுபவளைப் போன்றது.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர் இருக்கும் போது முந்திக் கொண்டு பேசாதிருக்கும் கல்லாதவரும் நல்லவரே.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதவனின் அறிவு (சில நேரங்களில்) சிறந்ததாகப் பட்டாலும் அதை அறிவுடையவர் கருத்தில் கொள்ள மாட்டார்.

ஒட்பம் - அறிவு
கழிய - மிகவும்

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாதவன் தன்னைக் கற்றவரைப் போல் கொண்டாடும் உயர்வு, கற்றவருடன் பேசத் துவங்கியதும் கெடும்.

தகைமை - உயர்வு

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவரை களரைப் போல் பயனின்றி வெறுமனே 'இருக்கிறார்' எனக் கொள்ளலாம்.

மாத்திரையார் - அளவுடன் இருப்பவர்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நூல் ஆய்ந்து பெறும் கூர்மையான அறிவற்றவன் எழுச்சி மண்ணாலான பொம்மையின் எழுச்சியைப் போன்றது.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கல்லாதவர்களுக்கு கிடைக்கும் செல்வம், நல்லவர்களுக்கு ஏற்படும் வறுமையைக் காட்டிலும் துன்பமானது.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

பிறப்பால் உயரந்த குடி ஆனாலும் கல்லாதவர், கீழ்குடி பிறந்த கற்றவரின் பெருமையை அடைய முடியாது.

பாடு - பெருமை

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

விலங்குகளை, மக்களோடு ஒப்பிட்டு வேறுபாடறிவது போல் கல்லாதவரை, நூல்களை விளங்கக் கற்றவரோடு ஒப்பிட்டு அறியலாம்.

அனையர் - ஒப்பர்
இலங்க - விளங்க

No comments: