வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையை, உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற ஐம்பூதங்களும் கண்டு தமக்குள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.
அருஞ்சொற்பொருள்
படிற்றொழுக்கம் -மறைந்த ஒழுக்கம் (பொய்யான நடத்தை)
அகம் -உள்ளம்
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
குற்றமென்று அறிந்தும், ஒருவனது மனம் அக்குற்றத்தில் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மனத்தைத் தன்வழிப்படுத்தும் வல்லமையில்லாதவனது வலிய தவத்தோற்றமானது, பசுவானது புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்ததை ஒத்ததாகும்.
அருஞ்சொற்பொருள்
நிலைமையான் -இயல்புடையவன்
பெற்றம் -பசு
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தவக்கோலத்தில் மறைந்துக் கொண்டு அல்லவைகளைச் செய்தல், வேடுவன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பதைப் போன்றதாகும்.
அருஞ்சொற்பொருள்
புள் -பறவை
சிமிழ்த்தல் -பிடித்தல்
அற்று -உவம உருபு (போன்றது, ஒத்தது)
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
பிறர் தம்மை மதித்தர் பொருட்டுபற்றுகளை விட்டோமென்று கூறுவாரது பொய்யான ஒழுக்கம், அப்பொழுது இனியது போல் தோன்றினாலும், பின்னர் தாம் என்ன செய்தோம்? என்று எண்ணுமளவுக்கு துன்பங்களை அளித்துவிடும்.
அருஞ்சொற்பொருள்
எற்றெற்றென்று -(எற்று+எற்று+என்று) என்ன செய்தோம், என்ன செய்தோமென்று
ஏதம் -துன்பம்
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
மனத்திலே ஆசையை விடாதாராகி, வெளியே ஆசையற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரை விடக் கொடியவர் யாருமிலர்.
அருஞ்சொற்பொருள்
வன்கணார் -கொடியவர் (இரக்கமில்லாதவர்)
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
வெளித்தோற்றத்தில் குன்றிமணியைப் போல் செம்மையான தோற்றம் கொண்டவர் என்றாலும், உள்ளத்தே குன்றிமணியினுடைய மூக்கைப் போலக் கரியவரும் இவ்வுலகில் உள்ளனர்.
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மனத்தின்கண் இருப்பது குற்றமாகவும், வெளித்தோற்றத்தில் மாண்புடையவர் போல் நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மக்கள் இவ்வுலகில் பலர் உள்ளனர்.
மாசு -குற்றம்
மாந்தர் -மக்கள்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
வடிவத்தால் செவ்வியதாயிருந்தாலும் அம்பு கொடுமை செய்வது, வளைந்திருந்தாலும் யாழ் இன்னிசைத் தருவது. அதுபோல் மனிதரையும் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடாது, அவரவர் செயல்தன்மைக் கொண்டே அறிய வேண்டும்.
கணை -அம்பு
செவ்விது -செம்மையானது
ஆங்கு -அவ்வகையே
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
உலகில் உயர்ந்தோரால் குற்றஞ்சொல்லப்பட்ட ஒழுக்கத்தை நீக்கிவிட்டாலேப் போதும். உயர்வுக் கருதி தலைமயிரை வளர்த்தலும், மழித்துக் கொள்ளுதலும் வேண்டுவன அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment