Tuesday, October 09, 2007

அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை-20

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.

பயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல், நல்லன அல்லாததை நமக்கு உற்றவருக்கு செய்வதை விட தீங்கானது.

நயன் - நன்மை
நட்டார் - உறவினர்

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

ஒருவன் பயனின்றி நிறைய பேசினால், அவனால் ஆகும் நன்மை ஏதும் இல்லை.

பாரித்தல் - நிறைய

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனில்லாத, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் இருக்கும் நன்மையும் நீங்கி விடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சிறப்பு மிக்கவராயினும் பயனில்லாத சொற்களை கூறினால், அச்சிறப்பு அவரிடம் இருந்து நீங்கி விடும்.

நீர்மை - சிறப்பு

பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பயனில்லாது பேசுபவனை மக்களுள் அற்பன் என்பது சரி.

பதடி - அற்பன், பதர், ஒன்றுமில்லாத

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

சான்றோர் நன்மை பயக்கக் கூடியதை சொல்லா விட்டாலும், பயன்னற்றதை சொல்ல மாட்டார்கள்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

சிறந்தது எது என ஆய்ந்து உணர்ந்த அறிவுடையோர், பயனில்லாததை பேச மாட்டார்கள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

அப்பழுக்கற்ற அறிவுடையவர் பொருளற்ற, குறை உள்ள சொல் கூற மாட்டார்கள்.

பொச்சம் - குறை

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

சொல்லில் பயனில்லாததைத் தவிர்த்து, பயனுள்ளதைப் பேச வேண்டும்.

No comments: