Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -நிலையாமை -34

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற அறிவுடைமை மிகவும் இழிவானதாகும்.

புல்லறிவு -அற்ப அறிவு
கடை -இழிவு


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

ஒருவரிடத்து மிகுந்த செல்வம் வருதல், கூத்தாடுமிடத்தில் சேரும் கூட்டத்தைப் போன்றது. அச்செல்வம் போவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றது.

குழாத்து -கூட்டம் கூடுதல்
விளிந்தது -கலைந்து போகுதல்


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

செல்வம் நிலையில்லாத் தன்மையுடையது; அதனைப் பெற்றால் அது நிலைப்பதற்கான அறங்களை அப்பொழுதே செய்ய வேண்டும்.

அற்கா -நிலையில்லாத

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், உயிரானது நாளென்று அளவு செய்யப்படுவதாகிய ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி அறுக்கும் வாளினது வாயிடத்தது.

ஈரும் -அறுக்கும்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பேசாதிருக்கும்படி நாவை அடக்கி, விக்கலானது எழுவதற்கு முன்னே அறச்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நாச்செற்று -நாவை அடக்கி
விக்குள் -விக்கல்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.

இந்த உலகம் 'நேற்று உள்ளவன், இன்று இல்லை' என்று சொல்லக்கூடிய நிலையாமையாகிய பெருமையை உடையது.

நெருநல் -நேற்று

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

அடுத்த பொழுது உயிர் வாழுமோ? வாழாதோ? என்று அறியாதவர்கள் நினைப்பது கோடியும் அல்ல; அதனினும் அளவற்றது.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

தான் இருந்த கூட்டைத் தனியே விட்டு வெளியேறுதலைப் போன்றது, உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு.

குடம்பை -கூடு

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

மரணம் என்பது தூக்கத்தைப் போன்றது; உறங்கி விழித்துக் கொள்ளுவதைப் போன்றது பிறப்பு.

சாக்காடு -மரணம்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

உடம்பில் ஒரு மூலையில் குடியிருக்கும் உயிருக்கு, நிலையாகத் தங்குவதற்கு ஏற்ற இடம் அமையவில்லை போலும்.

புக்கில் -நிலையான இருப்பிடம்
துச்சில் -ஒதுக்கிடம்

No comments: