Tuesday, October 30, 2007

பொருட்பால் - அரசியல்- குற்றம் - கடிதல் - 44

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

அகந்தையும், சினமும், சிறுமை குணமும் இல்லாதவர்கள் செல்வம் பெருகும் தன்மையுடையது.

பெருக்கம் - செல்வம்
பெருமிதம் - பெருகும்
நீர்த்து - தன்மை

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பேராசையும், மாண்பு இல்லாத மானமும் (இழிவு நிலை), அளவற்ற மகிழ்ச்சியும் கொண்டாடுவது அரசனுக்கு ஒவ்வாதது.

இவறல் - பேராசை
மாணா - அளவில்லா
ஏதம் - குற்றம்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

சிறிதளவே குற்றம் நேர்ந்தாலும் பெரிய (பனை உயர) அளவு குற்றம் செய்யததாக வருந்துவர், அதனால் வரும் பழிச்சொல்லுக்கு அஞ்சுபவர்கள்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

குற்றம் அழிவு தரும் பகையாகும் ஆதலால் குற்றம் வராத வாழ்க்கை வாழ்வதைப் பொருளாகக் கொள்ள வேண்டும்.

அற்றம் - அழிவு

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் வருமுன்னர் அதிலிருந்து தன்னை கத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை எரியும் கொள்ளி முன்னர் வைக்கப் பட்ட வைக்கோல் போல அழியும்.

வைத்தூறு - வைக்கோல்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?

தன்னுடைய குற்றம் நீக்கி பின்னர் பிறர் குற்றத்தை ஆராயும் அரசனை யார் குற்றம் சொல்ல முடியும்.

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

பெற்ற செல்வத்தால் செய்யக்கூடிய நல்லனவற்றைச் செய்யாமல் இன்னும் பேராசை கொள்பவனின் செல்வம் தங்காமல் அழியும்.

உயல் - இருத்தல்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

பற்று கொண்ட உள்ளம் என்னும் பேராசை மற்ற குற்றங்களுள் வைத்து எண்ணப்படும் குற்றம் இல்லை, தனிப்பெரும் குற்றம் ஆகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

தன்னைத் தானே வியக்காதிருத்தலும், நன்மை பயக்காத செயல்களைச் செய்யாதிருத்தலும் வேண்டும்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

தான் விரும்பிய பொருளை பிறர் அறியா வண்ணம் நுகரக் கூடியவனின் பகைவர் கருதும் சூழ்ச்சி பலிக்காது.

காதல் - விருப்பம்
ஏதில - பழுது
ஏதிலார் - பகைவர்
நூல் - சூழ்ச்சி செய்தல்

No comments: