Thursday, October 11, 2007

அறத்துப்பால்- இல்லறவியல்- ஈகை- 23

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

சுவர்க்கம் கிடைக்கும் என்றாலம் ஏற்றுக்கொள்ளுதல்(பிச்சை எடுத்தல், இருக்கும் போது ஏற்றுக்கொள்ளல்) தீதானது. சுவர்க்கம் கிடைக்காது எனினும் ஈய வேண்டும்.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

இல்லை என்னும் துன்பதை உரைக்காமல் இருப்பது ஈதல் என்னும் பெரும் பண்பையுள்ள குலத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே இருக்கும்.
எவ்வம் - துன்பம்

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

இரக்கப்படுதல் இனிமையானது இல்லை. இரந்தவர் இன்முகம் எப்போது அடைகிராறோ அப்போதே இரத்தல்போல இரக்கப்படுதலும் இனிமையானதாகும்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவம் செய்பவர்களுக்கு பெரும் ஆற்றல் பசி இல்லாமல் போதல் அல்லது பசி பொறுத்தல் ஆனால் அந்த ஆற்றலையும் விட சிறந்தது கொடையினால் மாற்றுவார் ஆற்றலே.

ஆற்றுவார்- தவம் செய்பவர்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

வறியவறின் பசி தீர்த்தலே பொருளை பெற்றவன் பொருளை வைக்குமிடம். அதாவது தான் பெற்ற செல்வத்தை வைக்கும் இடம் எவ்விடமென்றால்
அடுத்தவர் பசி தீர்க்கும் இடமே.

அற்றார் - வறியவர்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

பகுத்து உண்ணுதல் என்னும் பழக்கம் உடையவனை பசி என்னும் தீப்பிணி என்றும் தீண்டாது.
பாத்தூண் - பகுத்துண்
மரீஇயவன்- பழகியவன்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

ஈந்து உவக்கும் இன்பத்தை அறியாதவர்கள் யாரென்றால் தன் உடைமையை தானே வைத்துக்கொண்டு பின்பு அதை இழந்துவிடும் அருளில்லாதவர்களே
வன்கணவர்- அருளில்லாதவர்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

இரத்தல்(பிச்சை எடுத்தல்) இனிமையானது கிடையாது. அதையும் விட துன்பம் தரக்கூடியது நிச்சாயமாக எதுவென்றால் இது தன் செல்வம் போதாது என்று அடுத்தவர்க்கு கொடுக்காமல் தானே சேர்த்துவைத்து உண்ணுதல்.
மன்ற - நிச்சயமாக

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
சாதலே கொடுமையாது ஆனால் அதுவே இனிமை தரக்கூடியது அடுத்தவருக்கு கொடுக்க முடியவில்லை யென்றால்.

No comments: