Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -மெய் உணர்தல் -36

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

மெய்ப் பொருளல்லாதவைகளை மெய்யானவையென்று அறிகின்ற மயக்கத்தினால் மாட்சிமைப்படாத பிறவிகள் உண்டாகும்.

மருளானாம் -அறிவு மயக்கம்
மாணா -மாட்சிமையற்ற

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வறிவானது பிறவியாகிய இருளை நீங்கச்செய்து முத்தியாகிய இன்பத்தைக் கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.

ஐயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு, வையகத்தினும் வானுலகம் அண்மையானதும், அடையக்கூடியதுமாகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

மெய்யுணர்வற்றவர்களுக்கு ஐம்புலன்களின் உணர்வுகளைப் பெற்றபோதும் அதனால் பயன் ஏதுமில்லை.

பயம் -பயன்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் எத்தகையத் தன்மையாய்த் தோன்றினாலும் அதன் மெய்யான இயல்பைக் காண்பதே அறிவாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

கற்க வேண்டியவற்றைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர் மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையை அடைவார்கள்.

ஈண்டு -இம்மை

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

என்றும் நிலையான மெய்ப்பொருளை உள்ளம் நிச்சயப்பட அறிந்துவிட்டதானால், மீண்டும் பிறவியுள்ளதாக ஒருவன் எண்ணவேண்டியதில்லை.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குத் துணையான செம்பொருளை அறிவதே மெய்யறிவு ஆகும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

எல்லா பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வாரா.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றன் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.

No comments: