Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -இன்னாசெய்யாமை -32

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

சிறப்புத் தரக்கூடிய பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற பெரியோரின் கொள்கையாகும்.

இன்னா -துன்பம்
கோள் -கொள்கை

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், மீண்டும் அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளர்களின் கொள்கையாகும்.

மறுத்து -மீண்டு

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

துன்பம் ஏதும் செய்யாத போதும் தீங்கு செய்தவர்க்கு, பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால் அதுவே பின்பு மீளா துன்பத்தைக் கொடுக்கும்.

உய்யா -மீளா
விழுமம் -துன்பம்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர், தாமே நாணும்படி அவருக்கு நன்மைகளைச் செய்தலாகும்.

ஒறுத்தல் -தண்டித்தல்

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

பிற உயிரின் துன்பத்தைத் தமது போல் எண்ணாதவிடத்து அறிவினாற் ஆகும் பயன்தான் என்ன?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

துன்பம் தருபவையென்றுத் தானறிந்தவைகளை ஒருபோதும் மற்றவர்க்கு செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

யாதொரு காலத்தும், எவர்க்கும், எவ்வளவு சிறிதாயினும் துன்பம் தருவனவற்றை செய்யாதிருத்தலே முதன்மையான அறம்.


தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

தனதுயிர்க்குத் துன்பம் தருபவைகளை அறிபவன், பிற உயிர்களுக்கு அவற்றைச் செய்தல், எந்த அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

முற்பகலில் பிறர்க்குத் துன்பம் செய்தால், பிற்பகலில் துன்பங்கள் தமக்குத் தானாகவே வந்து சேரும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

துன்பம் தருவன எல்லாம், துன்பம் செய்தவரையே சென்று சேர்வன. ஆகவே, துன்பப்படாமல் வாழ விரும்புகிறவர் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருப்பர்.

No comments: