Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -அவாஅறுத்தல் -37

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

எல்லா உயிருக்கும், எக்காலத்திலும் பிறவி என்னும் பெருந்துன்பத்தைத் தருவது 'அவா'.

அவா -ஆசை

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

ஒருவன் எதையேனும் விரும்புவதானால் பிறவாமையை விரும்ப வேண்டும்; அந்த நிலை அவாவற்ற நிலையை விரும்பினால் வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.

அவாவற்ற தன்மை போன்ற இணையற்ற சிறந்த செல்வம் இவ்வுலகிலும் வேறு எவ்வுலகிலுமில்லை.

ஈண்டு -இவ்வுலகம்
ஆண்டு -மேலுலகம்


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

அவாவற்ற நிலையே தூய நிலை; அந்நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானே வந்து சேரும்.

அற்றவர் என்பர் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பிறவியற்றவர் என்போர் அவாவற்றவரே; மற்றையவர் அவர்போல் அவ்வளவாகப் பிறவியற்றவர் இலர்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே அறமாகும். இல்லையேல் அந்த அவாவே அவனை வஞ்சித்துவிடும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

அவாவினை முழுவதும் அறுத்துவிட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பிய படியே வந்து வாய்க்கும்.

தவாவினை -நல்வினை

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

அவாவற்றவர்க்குத் துன்பம் என்பதும் இல்லை; அவா உண்டெனில் துன்பங்களும் முடிவில்லாமல் மென்மேலும் வளரும்.

தவாது -முடிவில்லாமல்

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

அவா என்னும் துன்பத்துள் கொடிய துன்பம் கெடுமானால், இம்மை வாழ்விலும் இன்பம் இடையறாது வாய்த்துக் கொண்டிருக்கும்.

ஈண்டு -இம்மை

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

ஒருபோதும் நிறைவுறாத இயல்புடைய அவாவினை ஒருவன் கைவிட்ட அக்கணமே பெரிதான இன்ப வாழ்வை அந்நிலைமை தந்துவிடும்.

ஆரா -நிறைவுறாத
பேரா -நிலையான

No comments: