Monday, October 29, 2007

பொருட்பால்-அரசியல்-இறைமாட்சி-39

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

வலிமையான படையும், நல்ல குடிமக்கள், தேவையான செல்வம் (பொன் மற்றும் தானியம்) , சிறந்த அமைச்சரவை, உறுதியான நட்பு, வலுவான அரண் ஆகிய ஆறு வகையான சிறப்புக்களும் உடையவன் அரசர்களுக்குத் தலைவன் போன்றவன்.

கூழ் - பொன், உணவு

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

பகைக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் முதலிய குணங்களை குறையாமல் இருப்பது அரசருக்கு இயல்பானது.

எஞ்சாமை - குறைவின்றி

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

நிலம் ஆளும் அரசர்களுக்கு விழிப்போடிருக்கும் நிர்வாகம், அவ்வாறு நடப்பதை அறிவதற்கான கல்வி, பகையை துணிவுடன் எதிர்கொள்ளுதல் ஆகிய திறன்கள் நீங்காதிருக்கும்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

அறன் ஒவ்வாதவற்றை விலக்கலும், தன் வீரத்திற்கு இழுக்கு ஏற்படாமல் காத்தலுமே ஒரு அரசுக்கு மானமாக கருதப்படும்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

ஒரு நல்ல அரசானது தகுந்த விதிகளின் மூலம் கருவூலம் சேர்த்து, அதனைக் காத்து, பின்னர்த் திட்டமிட்டு பயன் நிறைந்த வழியிற் செலவிட வேண்டும்.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

புகழ் வாய்ந்த மன்னன் மக்கள் அணுகும் வண்ணம் எளிமையாகவும், அவர்கள் குறையை அன்போடும் கேட்பவனாகவும் திகழ்வான்.

மீக்கூறுதல் - உயர்த்திச் சொல்லல்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

இனிய சொல்லால் வரவேற்று தேவைகேற்ற படி வழங்கும் மன்னன், இவ்வுலகம் வேண்டாம் என்று அவனாக சொன்னால் தான் உண்டு. அதாவது, உலகமே அவன் வசப்படும்.

கண்டனை - (வேண்டாமெனத்) தள்ளுதல்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

மக்களின் பல்வேறு தேவைகளை காலத்திற்கேற்ப அறிந்து செயலாற்றும் மன்னன் இறைவனை ஒத்தவனாக்க் கருதப் படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

செவிக்கு அலங்காரமான சொற்களைப் (அரசின் நலன் நாடி இடித்துரைப்பதாயினும்) பொறுக்கி (தேர்ந்தெடுத்து) ஏற்கும் பண்புடைய மன்னன் குடையின் கீழ் இந்த உலகம் விரும்பி வரும்.

கைப்ப - அலங்காரமான

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

வாழ்வுக்கு தேவையானதை வழங்கல், இன்முகம் காட்டல், நீதி வழுவாத ஆட்சி, தளர்ந்த குடிமக்களைப் பேணுதல் முதலியவற்றை பேணும் அரசன் பிற அரசர்களுக்கு வழிகாட்டி ஆவான்.

No comments: