Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -துறவு -35

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

எந்த எந்தப் பொருள்களின் மீது ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபடுகிறானோ, அந்த அந்த பொருள்களைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

துன்பமில்லா வாழ்வை விரும்பினால் ஆசைகளை விட வேண்டும்; அவ்வாறு விட்டபின் அடையக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

ஈண்டு -இப்பிறப்பில்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். அப்புலன்கள் அனுபவிப்பதற்காகப் படைத்த பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும். ஆசை உளதானால் அது மீண்டும் உலக மயக்கத்துக்கு ஏதுவாகும்.

மயலாகும் -மயக்கத்துக்கு ஏதுவாகும்

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

பிறவியாகிய துன்பத்தை நீக்க முயல்வோர்க்கு உடம்பே மிகையான பொருளாகும். ஆகவே மற்றைய ஆசைகள் எதற்காக?

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை ஒழித்தவனுக்கு, வானோர்க்கும் மேலான உலகம் கிட்டும்.

செருக்கு -மயக்கம்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பொருள்களின் மீதான பற்றுக்களை இறுகப் பற்றி விடாதவரை, துன்பங்களும் இறுகப் பற்றி விடாமலிருக்கும்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

முற்றுந்துறந்தவர்களே முக்தியை அடைந்தவராவர். மற்றையோர் மயங்கி பிறப்பாகிய வலையில் அகப்பட்டவராவர்.

தலைப்பட்டார் -முக்தியடைந்தவர்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பற்றுகள் அறுந்து போன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும். அவை அறாதபொழுது நிலையாமையானது அறியப்படும்.

மற்று -பற்றுகள் அறாதபொழுது

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

உலக பற்றுகளை விடுவதற்காக பற்றில்லாதவனான இறைவனது பற்றினையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்.

No comments: