Tuesday, October 30, 2007

பொருட்பால் - அரசியல் - பெரியோரைத் - துணைக்கோடல் - 45

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அரசன் அறம் பற்றிய அறிவுடன் தன்னில் சிறந்த அறிவுடையோரின் நட்பின் திறன் குறித்து ஆய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

அரசன் நாட்டில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி, துன்பம் வரும் முன் காக்கும் தன்மை உடையவரை உடன் பெற்றிரித்தல் வேண்டும்.

பெற்றியார் - தன்மையுடையவர்

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

போற்றக்கூடிய குணங்கள் வாய்ந்த பெரியவர்களைத் துணைக் கொள்வது அரசனது சிறப்புகள் எல்லாவற்றிலும் சிறந்ததது.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

அருங்குணத்தால் தன்னைவிடப் பெரியவர்களைத் துணைக்கொள்வது அரசனுக்கு மிகுந்த வலிமையைத் தரும்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

ஆய்ந்து கூறும் அமைச்சர்களை கண் போல் போற்றும் மன்னன், அத்தகையோரை அவர் திறம் ஆய்ந்து துணைக்கொள்ள வேண்டும்.

சூழ்வார் - ஆய்ந்து கூறுவோர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

தக்க பெரியோரைத் துணையாகக் கொண்ட மன்னனுக்க் பகைவரால் வரும் தீது ஏதும் இல்லை.

செற்றார் - பகைவர்

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

தவறுகளைச் சுட்டி மன்னன் நலம் நாடி கடிந்து கூறத்தக்கப் பெரியவர்களைத் துணையாகக் கொண்ட மன்னனுக்கு கேடு விளைவிக்க வல்லவர் யார்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

மேற்கண்டவாறு இடித்துக் கூறும் துணையோரின் காவல் இல்லாத மன்னன் அழிவதற்கு பகைவர் எவரும் தேவை இல்லை.

ஏமரா - காவலற்ற

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

முதல் இல்லாத வணிகருக்கு வருமானம் இல்லை. அது போல் தாங்கும் துணையற்ற அரசனுக்கு நிலைத்த தன்மை வாய்க்காது.

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்ல பெருமக்களின் தொடர்பைக் கைவிடுதல் அரசனுக்கு பலரின் பகையை தனியே கொள்வதைப் போல் பத்து மடங்கு தீமையைத் தரும்.

No comments: