Wednesday, October 31, 2007

பொருட்பால் - அரசியல் - இடனறிதல் - 50

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

பகைவரை முற்றுகையிடும் இடம் பார்த்த பின்னரே அதற்கான எந்த வேலையையும் தொடங்க வேண்டும். அது வரை அவனை இகழ்வதும் கூடாது.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

பகையை எதிர்க்கும் வலிமை இருந்த போதும் தகுந்த காப்பு இருக்குமெனின் மிகுந்த பலன் கிடைக்கும்.

மொய்ம்பு - வலிமை

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பகைவருக்கு காவல் இல்லாத இடம் அறிந்து தன்னைக் காத்தவாறு மோதினால் வலிமை இல்லாதவரும் வலிவுற்று வெல்ல இயலும்.

ஆற்றார் - வலிவில்லாதவர்
அடுப - வெற்றி
போற்றி - காத்து

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பகையை எதிர்கொள்ள ஏற்ற இடம் அறிந்து செல்லும் அரசனை வெல்ல நினைத்தவரின் எண்ணம் ஈடேறாது.

துன்னியார் - சேர்ந்தவர்
துன்னி - அடைதல், சேர்தல்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமான நீரினுள் முதலை வென்று விடும்; ஆனால் நீரை நீங்கினால் முதலை வெல்ல இயலாது.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

கடலில் தேர் செலுத்த இயலாது, நிலத்தில் கப்பல் ஓடாது.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

ஆழ சிந்தித்து ஏற்ற இடத்தில் செயல்படுவோருக்கு துணிவைத் தவிர வேறு துணை வேண்டிந்தில்லை.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

சிறு படையாக இருந்த போதும் தனக்கேற்ற இடத்தை அடைந்து விட்டால் அதனை வெல்ல நினைத்த பெரும்படையின் ஊக்கம் அழிந்து விடும்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

காவலுடைய கோட்டையும், பெரும் வலிவும் இல்லாதவர் எனினும் அவருடைய இடத்தில் சென்று தாக்குதல் அரிது.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

போர்களத்தில் வேல் கொண்ட வீர்ர்களை பயமற்று முகந்து தூக்கும் யானைகள் ஆனாலும் சேற்று நிலத்தில் கால் சிக்கிக் கொள்ளும் எனில் நரிகளும் கொன்று விடும்.

அடும் - கொல்லும்

No comments: