Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -கொல்லாமை -33

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்.

கோறல் -கொல்லுதல்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

பசித்த உயிர்களுக்கு உணவைப் பங்கிட்டு, தானும் உண்டு, உயிர்களைக் காத்தலே அறநூலோர் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையானது.

ஓம்புதல் -காப்பாற்றுதல்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாதிருத்தலே; அதற்கு அடுத்ததாகக் கருதப்படுவது பொய்யாமை.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

முக்தியடைய நல்லவழியென்று கருதப்படுவது எதுவென்றால், எந்த ஓர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினை நினைத்தலே ஆகும்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

நிலையாமைக்கு அஞ்சி, பிறவாமைப் பொருட்டு துறவறம் மேற்கொண்டவர்களை விட, கொலைப்பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவர்களே சிறந்தவர்கள்.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லாது உயிருண்ணும் கூற்று.

கொல்லாமையை மேற்கொள்பவனின் வாழ்நாளில், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒருபோதும் செல்லாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

தனது உயிரையே விடுவதற்கு நேர்ந்தாலும், பிற உயிரைக் கொல்லும் பாவச் செயலை ஒருபோதும் செய்யக் கூடாது.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

கொலை செய்வதனால் வரும் செல்வம் பெரியதென்றாலும், சான்றோர்கள் அதை இழிவானதாகவேக் கருதுவர்

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

கொலைத்தொழிலையுடைய மக்கள், அத்தொழிலின் இழிவை அறிந்தவர்களது மனத்தில் இழித்தொழிலராய்த் தோன்றுவர்.

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோய் மிகுந்த உடலோடு உயிரும் நீங்காமல் துன்புறுகிறவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து நீக்கியவராவர்.

செயிருடம்பு -நோயுடம்பு

No comments: