Monday, November 19, 2007

காமத்துப்பால்-கற்பியல்-ஊடல் உவகை-133

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

அவர் மேல் தவறு இல்லை ஆயினும் அவருடன் ஊடுதல் நம்மை ஆறுதல் படுத்த வல்லது.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

ஊடலில் தோன்றும் சிறு துன்பமும் அதனைப் போக்க அவர் அளிக்கும் ஆறுதலால், குறைந்த அளவினதாயினும், பெருமை உடையது.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

நிலத்தோடு நீர் இயைந்தது போல் என்னுடன் கலந்திருக்கும் காதலருடன் நான் பிணக்கம் கொள்வதைப் போல் இன்பம் கடவுளர் உலகிலும் உண்டா?

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

காதலரை விடாது தழுவும் படி இருக்க நான் பிணங்கினால், என் உள்ள உறுதியை உடைக்கும் படைக்கலனாகவும் அது இருக்கிறதே!

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

தவறு செய்யாத போதும் தான் விரும்பிய பெண்ணின் ஊடலுக்கு ஆளாகி அவளின் மெல்லிய தோள்களை விட்டு விலகியிருப்பதில் இன்பம் உண்டு.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

உண்பதை விட ஏற்கெனவே உண்ட உணவு செரித்தல் இனிது. அது போல் காமத்தில் புணர்தலினும் அதற்கு முந்தைய ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

ஊடலில் தோற்றவர் வென்றவராவார். இந்த உண்மை அதன் பின்னர் வரும் கூடலில் புலப்படும்.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

கூடலில் தோன்றிய நெற்றி வியர்வையின் இனிமையை இன்னும் ஒருமுறை பிணங்கிப் பெறுவோமா?

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

ஒளி பொருந்திய அழகினை உடையவள் என்னுடன் பிணங்கட்டும். அப்பிணக்கைத் தீர்க்க நான் இரந்து நிற்க ஏதுவாக இந்த இரவு நீண்டதாக இருக்கட்டும்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம். அந்த ஊடலுக்கு இன்பம் இருவரும் காய்தல் நீங்கி கூடி வியர்த்தலே ஆகும்.

முயங்க - வியர்க்க

காமத்துப்பால் - கற்பியல் - புலவி நுணுக்கம் - 132

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பெண் இயல்பை உடையவர்கள் பொதுவில் உன் மார்பை கண்ணால் உண்டதால் பரத்தன் ஆன உன் மார்பை நான் விரும்பேன்.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

காதலருடன் நான் ஊடிப் பேசாது இருந்த போது தும்மினார் 'நான் நீடு வாழ்வீர்' என வாழ்த்திடுவேன் என்றெண்ணி.

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

வளைந்த பூமாலையை அணிந்திருந்தாலும் வேறு ஒருத்திக்கு இந்த வடிவைக் காட்டுவதற்காகத் தான் சூடியதாகப் பிணங்குவாள்.

கோட்டுப் பூ - வளைந்த மாலை

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

அனைவரிலும் நாம் இருவரும் சிறந்த காதலர்கள் என்று கூறியதற்கு வேறு பெண்கள் யாரினும் எல்லாம் என்று கேட்டுப் பிணங்குவாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

இப்பிறப்பில் பிரியேன் என்று காதலால் கூறியதற்கு மறுமையில் பிரிவேன் என்று பொருள் கொண்டு கண்களில் நீர் கொண்டாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பிரிவிலும் உன்னை நினைத்திருந்தேன் என்று கூறியதற்கு 'ஏன் மறந்தீர், மீண்டும் நினைப்பதற்கு' என்று என்னைத் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

நான் தும்மிய பொழுது முதலில் வாழ்த்தியவள் பின் நிறுத்தி, 'நான் இங்கிருக்க யார் நினைத்து தும்மினீர்' என்று பிணங்கி அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

ஊடலை அஞ்சி தும்மலை அடக்கினால் 'உனக்குப் பிடித்தவர் நினைப்பதை எனக்கு மறைக்க நினைத்தீரோ' என்றுப் பிணங்கி அழுதாள்.

செறுப்ப - அடக்குதல்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

பிணங்கியவளை ஆற்றி மகிழ்வித்தாலும் 'பிற மகளிரிடமும் இப்படித் தான் பழகிவீரோ' என்று மீண்டும் பிணங்கினாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

அவள் அழகை எண்ணி இமை கொட்டாமல் பார்த்திருந்த போதும் 'யாருடன் ஒப்பிட்டு என்னை நோக்கினீர்' என்று பிணங்குவாள்.

காமத்துப்பால் - கற்பியல் - புலவி - 131

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பிணங்கியதால் அவர் அடையும் துன்பத்தை சிறிது நேரம் காணலாம், ஆதலால் பிணங்கித் தழுவாதிரு.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

உணவிற்கு உப்பு போலவே பிணக்கமும். அது சிறிது நீண்டுவிட்டால் உணவில் உப்பு மிகுந்தது போலாகி விடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

தம்முடன் ஊடல் கொண்டவரை ஊடல் நீக்கித் தழுவாது விடல் ஏற்கெனவே துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவது போலாகும்.

அலந்தார் - அழிந்தவர்

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடிய மகளிரை உணர்ந்து பிணக்குத் தீர்க்காதிருப்பது வாடிய கொடி துளிர்க்க உதவாமல் அறுப்பது போலாகும்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

மலர் ஒத்த கண்ணினை உடைய மகளிர் ஊடலைத் தணிப்பதே பண்பு மிக்க காதலருக்கு அழகாகும்.

ஏர் - அழகு

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

நீண்ட பிணக்கும், ஊடலும் இல்லையெனில் காமம் முதிர்ந்த கனியும், இளம் பிஞ்சையும் போல நுகர இனிமையாய் இருக்காது.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

கூடி இருந்து பெறும் மகிழ்ச்சி நீடிக்குமோ, இல்லையோ என அஞ்சுவதால் ஊடலிலும் ஒரு துன்பம் இருக்கத்தான் செய்கிறது.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

தாம் தான் இவள் துன்பத்திற்கு காரணம் என்று உணராத காதலர் பொருட்டு நொந்து தான் என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

நிழலின் கீழ் உள்ள நீர் குளிர்ந்து இனிதாக இருக்கும். அதுபோலவே அன்புடையவரிடம் பிணங்குதல் இனிதாகும்.

வீழுநர் - அன்புடையவர்

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

ஊடலைத் தணிக்காமல் வாட விடுபவரிடம் கூடுவதற்கு என் நெஞ்சம் ஆசை கொள்கிறது.

உணங்க - வாட

காமத்துப்பால் -கற்பியல் - நெஞ்சோடு புலத்தல் -130

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

அவருடைய நெஞ்சு (நம்மை நினையாமல்) அவருக்கு உகந்ததாக இருக்கும் போது, நீ மட்டும் எனக்காக இல்லாமல் அவரை நினைத்திருப்பது ஏன்?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

நம்மை விரும்பாதவர் என்று அறிந்தும், அங்கே சென்றால் சினம் கொள்ள மாட்டார் என அவரிடம் செல்கிறாயே, நேஞ்சே!

உறாதவர் - விரும்பாதவர்
செறு - சினம்
சேறி - போகிறாய்


கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

என்னைப் போல் துன்பத்தில் கெட்டவருக்கு நட்புடையவர் இல்லை என்பதால் தான் அவரிடம் விரும்பிச் செல்கிறாயே, நெஞ்சே.

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே, முதலில் பிணங்கி பின் இணங்குவோம் என்று சொன்னாலும் நீ கேட்பதில்லை. ஆதலால் இனி யார் அவ்வாறு உன்னுடன் பேசுவார்கள்? (நான் மாட்டேன்!)

சூழ்வார் - கலந்து பேசுபவர்
துனி - வெறுத்து
துவ்வாய் - துய்க்க மாட்டாய்


பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

தலைவன் இல்லை என்பதற்காக துன்பத்திற்கு அஞ்சும்; இருந்தாலோ பிரிவாரே என துன்பத்திற்கு அஞ்சும். இவ்வாறு நீங்காத துன்பத்தைத் தரும் என் நெஞ்சு.

உறா - நீங்காத

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

தனிமையில் இருந்த போது அவரை நினைத்தால், என்னைத் தின்பது போல் இருந்து துன்புறுத்தும் என் நெஞ்சு.

தினிய - தின்பது

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அவரை மறக்க இயலாமல் என் பெண்மையின் மாண்பை இழந்த மனத்தோடு சேர்ந்து என் நாணத்தையும் மறந்தேன்.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

அவரை இகழ்வது நமக்கே இழிவு என்ற எண்ணி அவருடைய பெருமையையே நினைத்துக் கொண்டிருக்கிறது உயிரனைய காதல் நெஞ்சம்.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

பிரிவின் துன்பத்தில் என்னை விட்டு அவரிடம் என் நெஞ்சே சென்ற பிறகு எனக்கு யார் தான் துணை?

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

நம்முடைய நெஞ்சமே நமக்கு உறவாக இல்லாத போது பிறர் நம்மவராக இல்லாதிருப்பது எளிதானதே!

தஞ்சம் - எளிது
ஏதிலார் - அந்நியர்

காமத்துப்பால் - கற்பியல் - புணர்ச்சி விதும்பல் - 129

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

நினைத்த உடன் களிப்பும், கண்டால் மகிழ்வும் கள்ளுண்டவருக்கு இல்லை; காமம் கொண்டவருக்கு உண்டு.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

மிகுந்த அளவு காமம் உண்டானால், தினை அளவும் ஊடல் கொள்ள வேண்டாம்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அவமதித்து, தான் விரும்பினவற்றையே செய்தாலும் என் தலைவனைக் காணாமல் கண்கள் அமைதி கொள்வதில்லை.

பேணல் - மதித்தல்
பெட்பு - விருப்பம்

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

தோழியே, ஊடல் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தான் தலைவனைக் காணச் சென்றேன். நெஞ்சோ, அதனை மறந்து கூடலை விரும்பி நின்றது.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை எழுதும் போது எழுதும் குச்சியைக் காண இயலாது. அது போலவே, தலைவனைக் கண்டதும் அவன் எனக்குச் செய்த குற்றங்களை மறந்து விடுகிறேன்.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும் பொழுது அவர் செய்த தவறைக் கூட பொருட்படுத்துவது இல்லை. காணாத போது அவர் செய்த தவறுகள் மட்டுமே தெரிகின்றன.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

இழுத்துக் கொண்டு செல்லும் வெள்ளம் என அறிந்தும் நீரில் பாய்பவரைப் போல பயனில்லை என அறிந்தும் பிணங்குவது ஏன்?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

கள்வனே, கள் உண்டு களித்தவர் மீண்டும் கள்ளையே விரும்புதல் போல இழிவு வரும்படி துன்பம் தந்த போதும் விரும்புவர் உன் மார்பு.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

காமம் என்னும் உணர்வு மலரை விட மென்மையானது. சிலரே அதன் தன்மை அறிந்து துய்க்க நினைப்பவர்கள்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

கண்ணில் வெறுப்பினைக் காட்டியவள் தன் நிலையை மறந்து புணர்தலில் என்னை விட விரைவாக இயன்றாள்.

துனிதல் - வெறுத்தல்
புல்லுதல் - புணர்தல்
விதுப்பு - விரைதல்

காமத்துப்பால் - கற்பியல் - குறிப்பு அறிவுறுத்தல் - 128

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

நீ மறைக்க நினைத்தாலும் அதற்கு உடன்படாமல் உன்னையும் மீறி மையெழுதிய உன் கண்கள் சொல்லும் செய்தி ஒன்று உண்டு.

கரத்தல் - மறைத்தல்
கையிகந்து - கைமீறி
ஒல்லா - உடன்பாடமல்
உண்கண் - மை எழுதிய கண்கள்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

மூங்கிலை ஒத்தத் தோள்களை உடைய, என் கண்ணில் நிறைந்த அழகிய பேதைக்கு பெண்மைக்குரிய பண்புகள் மிகுந்தள்ளன.

காம்பு - மூங்கில்
ஏர் - ஒத்த


மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

மணிகளை கோர்த்திருக்கும் நூல் போல இவள் அழகிய ஒப்பனைத் தோற்றத்திற்கு காரணம் ஒன்று உண்டு.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

அரும்பிய மலர் மொட்டின் புது மனம் போல் அவள் காதல் சிரிப்பிற்கு காரணம் ஒன்று உள்ளது.

முகை - அரும்பு

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

நெருங்கிய வளையல்கள் அணிந்த என் காதலி தந்து சென்ற கள்ளக் குறிப்பில் என் துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது.

தொடி - வளையல்

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

என் துயரைப் பெரிதும் ஆற்றி விரும்பிக் கலந்திருப்பது என்னை அரிதாகப் பிரிந்து அவர் அன்பு இல்லாத நிலை வருவதை உணரத்துவது போல் உள்ளதே!

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

நெய்தல் நிலத் தலைவனான என் காதலன் என்னைப் பிரியப் போவதை எனக்கும் முன்பே உணரந்தனவே இந்த வளையல்கள்!

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத் தான் என் காதலர் என்னைப் பிரிந்து சென்றார். அதற்குள் ஏழுநாளானது போல் என் உடல் பசலை நிறம் கொண்டதே!

நெருநல் - நேற்று

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

அவள் செய்த குறிப்பு பிரிவால் கழன்று விழக்கூடிய வளையல்களையும், மெலியக் கூடிய தோள்களையும், அதைத் தவிர்ப்பதற்காக உடன் வரத் துணிந்த அடிகளையும் உணர்த்தியது.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

தன் கண்களால் தான் கொண்ட காம நோயைப் பற்றிக் கூறி உடன் வருவதாக இரந்து நிற்பது பெண்மைக்கு பெண்மை சேர்த்தது போல் என்பர்.

காமத்துப்பால் - கற்பியல் - அவர்வயின் - விதும்பல் - 127

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

நாளை சுவரில் ஒற்றி கணக்கிட்டு விரல் தேய்ந்தது; ஒளி இழந்து, நலிவுற்று விட்டேன். இன்னும் அவர் வரவில்லை.

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

ஒளிவீசும் அணிகலன் போன்றவளே, பிரிவின் துயர் வாட்டாதிருக்க இன்று அவரை மறந்தால் என் தோள் அழகு இழந்து மெலிந்து வளையல் கழன்று விழும்படி ஆகுமே.

இலங்கிழாய் - ஒளிவீசும் அணி
கலன் - தோளில் அணியும் நகை
காரிகை - அழகு

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

தன் தொழில் காரணமாக ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் வருவார் என்ற ஆசையில் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

காமத்தில் கூடிப் பிரிந்தவர் வரவினை எண்ணும் போதெல்லாம் என் உள்ளம் மேலும் கூடிய உவகை கொள்கிறது.

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

என் தலைவனை நான் கண்ணார கண்டபின் என் தோள்களில் ஏற்பட்ட பசலை தானே நீங்கும்.

கொண்கன் - தலைவன்
பசப்பு - பிரிவில் மகளிர் அழகு குன்றச்செய்யும் நோய்

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

என் தலைவன் வரும் நாளில் எனக்குத் துன்பம் தரும் நோய் தீர்க்கும் மருந்தை அவனால் அருந்துவேன்.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்.

என் கண்களை ஒத்த அன்பர் வரும் போது அவருடன் பிணங்குவேனா? இல்லை, தாள இயலாமல் தழுவுவேனா? இல்லை, இரண்டையும் கலந்தே துய்த்து மகிழ்வேனா? (ஆவலில் ஒன்றும் புரிபட வில்லை)

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

வேந்தன் மேற்கொண்ட செயலில் வெற்றி அடையும் பொழுது நானும் என் மனைவியுடன் மாலை விருந்தில் துய்ப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

தொலைவு சென்றவர் திரும்பி வரும் நாள் பார்த்து ஏங்குபவருக்கு ஒரு நாள் ஏழு நாள் அளவு நீண்டதாகத் துன்பம் தரும்.

சேண் - தொலைவு

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

பிரிவின் துயர் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்தபின் அவர் அன்பைப் பெறுவதாக இருந்தால் அவ்வன்பை பெற்றதால் பயன் என்ன? இல்லை, மெய்யுறக் கலந்து தான் ஆவதென்ன?

காமத்துப்பால் - கற்பியல் - நிறையழிதல் - 126

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

காமம் என்னும் உளி, நாணம் என்னும் தாழ் அடைத்த நிறை என்னும் கதவை உடைத்து விடும்.

கணிச்சி - உளி

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

காமம் இரக்கமே இல்லாதது. இரவான போதும் விலகாது இருந்து என் நெஞ்சை ஆட்டுவிக்கிறது.

யாமம் - இரவு

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

தம்மை அறியாமல் வெளிப்படும் தும்மல் போல் வெளிப்படும் காமத்தை நான் எவ்வாறு மறைப்பேன்?

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

நான் நிறையுடையவள் என்று கருதுவேன். ஆனால் காமமோ என்னையும் மீறி பொதுவில் வெளிப்பட்டு விடுகிறது.

மன்று - பொதுவில்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

ஊடலால் என்னை நீங்கி சென்றவர் பின் செல்லாத கண்ணியம் காம நோய் தோற்றியவர்களுக்கு கிடையாது.

செற்றார் - விலகியவர்

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

ஊடலால் நீங்கியவர் பின் செல்ல வேண்டி ஏற்பட்ட காம நோயின் தன்மை தான் என்ன?

எற்று - எத்தன்மையது

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

என் காமத்துக்குக் காரணமானவர், நான் அக்காமத்தால் விரும்பியவற்றை செய்யும் போது வெட்கம் என்ற ஒன்றை அறியாதிருந்தேன்.

பெட்ப - விரும்பியவை

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

விந்தைகள் பல காட்டி என் மனங்கவர்ந்தவன், பணிவிடை செய்பவன் போல் பேசிய பணிவான மொழிகள் அல்லவா நம் பெண்மைக்குரிய குணங்களை விலகச் செய்கின்றன!

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

அவருடன் பிணங்குவேன் என்று சென்றேன். ஆனால் என் நெஞ்சம் அவருடன் கலந்து விட்டதைக் கண்டு அவரைத் தழுவினேன்.

புலப்பல் - பிணங்குதல்
புல்லினேன் - தழுவுதல்

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

தீயில் இட்ட கணமே உருகும் நெய் போன்ற மனம் உடையவர்களுக்கு புணரும் போது ஊடல் நிலையில் இருப்பது இயலாது.

நிணம் - நெய், கொழுப்பு

காமத்துப்பால் - கற்பியல் - நெஞ்சோடு - கிளத்தல் - 125

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே, என் தீராத நோய் குணமாக ஏதாவது ஒரு மருந்தை எண்ணிப் பார்த்து சொல்லேன்?

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

வாழ்க என் நெஞ்சே! அவரிடத்து உன்னை குறித்து காதல் இல்லை. ஆதலால் அது குறித்து நீ வருந்துவது பேதைமை.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே, இன்னும் இருந்து அவரை நினைத்து வருந்துவது ஏன்? இத்துன்ப நோய்க்கு காரணமானவர் உன்னைப் பரிந்து நினைப்பது இல்லை.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே, அவரைக் காணச் செல்லும் போது இக்கண்களையும் உடன் அழைத்துச் செல். இல்லை எனில் அவரைக் காண வேண்டி என்னைத் தின்பது போல் தொல்லை செய்யும்.

சேறி - செல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே, நான் விரும்பியும் என்னை விரும்பாதவரை 'வெறுக்கிறார்' என்று எண்ணிக் கைவிட வழி இருக்கிறதா?

செற்றார் - வெறுத்தவர்
உற்று - விரும்பி

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

என்னுடன் கலந்து ஊடல் நீக்க வல்லவரான காதலரிடம் ஒருமுறையும் பிணங்காத நெஞ்சே, நீ இப்போது அவர் மீது பொய்க்கோபம் கொண்டு வாட்டுவதேன்.

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

நன்னெஞ்சே, ஒன்று காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; என்னால் இரண்டையும் ஒரு சேர தாங்க முடியவில்லை.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

எனக்காகப் பரிந்து என் துன்பத்தைப் போக்குவார் என்று நம்பி என்னைப் பிரிந்தவர் பின் செல்லும் நெஞ்சே, நீ ஒரு பேதை.

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே, காதலர் உள்ளத்தில் இருப்பதை அறிந்திருந்தும் வேறு யாரிடம் தேடிச் செல்கிறாய்.

உழை - இடம்

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்

நெருங்காது நீங்கிச் சென்றவரை நெஞ்சத்தால் நினைத்து வருந்துவதால் மேலும் அழகை இழப்போம்.

Sunday, November 18, 2007

காமத்துப்பால்- கற்பியல்- உறுப்பு நலனழிதல்-124

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

சிறுமை நம்மிடம் கொண்டு நிற்க நெடுந்தூரம் சென்று விட்ட தலைவனை எண்ணி நறுமலரை காண நாணி நிற்கின்றனதைப்போன்று அழுதழது ஒளியிழந்து விட்டன என் கண்கள்
சேண் - தூரம்

-- முன்னம் 112 அதிகாரத்தில்
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

தலைவியின் கருங்குவளைக் கண்கள் அளவினுக்குத் தாம் அழகாய் இல்லையே என்று வெக்கி குவளை மலர்கள் அனைத்தும் தலைகுனிந்தன, அப்படின்னு தலைவனால் வருணிக்கப்பட்ட அழகிய கண்களைக் கொண்ட தலைவி, இன்று தலைவனைப் பிரிந்திருப்பதால், அவனையே நினைத்து நினைத்து, அழுதழுது கண்கள் ஒளி இழந்து அழகிழந்து போனதால், இப்போது தலைவியின் கண்கள் மலர்களைக் கண்டு நாணுகின்றன.

-- ஒளிமிகுந்த அழகிய கண்கள் மணம் வீசும் அழகிய மலர்களுக்கு நாணுகின்ற சிறுமையை எனக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டார், என் தலைவர்.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

கண்கள் நிறமிழந்து ஒளியிழந்து நீர் சொரிவது என்னை விரும்பியவரின் அருளில்லாமையை சொல்கின்றன போலும்.
பசந்து- நிறம் வேறுபட்டு

--என் கண்கள், என் காதலரின் அருளில்லாத தன்மையை மற்றவர்க்குத் தெரிவிப்பதைப் போல் பசலைத் தன்மையடைந்து, நீர் ததும்பி நிற்கின்றன.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

மணந்த அன்று பூரிப்பால் வீங்கிய தோள்கள் தலைவனின் பிரிவை அறிவிக்கின்றன போல் இன்று வாடுகின்றன
தணந்தமை - பிரிந்தமை

-- தலைவன் என்னுடன் இருந்த காலத்தில் பருத்து பொலிவுடன் இருந்த என் மென்தோள்கள், தலைவர் என்னைப் பிரிந்திருக்கிறார் என்பதை ஊருக்கு வெட்டவெளிச்சமாகக் காட்டும் வண்ணம், இப்போது மெலிந்து போய் இருக்கின்றன .

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

செயற்கையழகு மட்டுமின்றி பழைய இயற்கை அழகும் நீங்கி பெருமையிழந்து வளையல்கள் கழலும் வகையில் சோர்ந்து போகின்றன என் துணையை நீங்கி நான் வாழ்வதால்
தொல்கவின்- பழைய அழகு - மிக அழகிய தமிழ்வார்த்தை என்பதால் குறிப்பிடுகிறேன்.
பணை- பெருமை
பைந்தொடி - வளையல்

-- அன்புநாதனே! அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்;
அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்---
சங்கமம் திரைப்படத்தில் "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா... " என்ற பாடலில் வரும் கருத்தும் இதனை ஒத்தது தான்.

-- என் துணைவனைப் பிரிந்து நான் வாடுவதால், பருத்து, மிகுந்த பொலிவுடன் விளங்கிய என் தோள்கள், அதன் பெருமையை இழந்து, கையில் அணிந்துள்ள வளையல்களெல்லாம் கழன்று விழும் அளவினுக்கு சோர்ந்து மெலிந்துவிட்டனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

கொடியவரின்(காதலரின்) கொடுமையை(பிரிவை) உரைக்கும் வண்ணம் பழைய அழகையிழந்து வளையலும் கழலும் வண்ணம் வாடிவிட்டன என் தோள்கள்.

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

என் வளையல் கழலும் வண்ணம் நெகிழந்த தோள்களைக் கண்டு என் காதலரைக் கொடியர் எனக்கூறல் என்னை நோகச்செய்கிறது

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

என் நெஞ்சே! நீ சென்று என் காதலரிடம், என் தோள்களின் ஆரவாரத்தைக்(பூசலை) கண்ட (தோழி) , கொடியார் என்று உரைக்கின்ற நிலையை அடைந்தது என்று உரைத்து ஒரு மேம்பாட்டை அடையவல்லையோ?

-- நெஞ்சே! என்னைத் தனிமையில் துன்புறச் செய்துவிட்டுப் பிரிந்து சென்றதால் கொடியவரான என் காதலரிடம் சென்று, வாடுகின்ற என் தோள்களின் ஆரவாரத்தை எடுத்துக்கூறி, நீ புகழ் பெறுவாயாக!

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

முயங்கிய போது ( இறுக அணைத்த போது) வலிக்குமோ என்று ஒரு கணம் தளர்த்தினேன் அப்போது, அதைப்பொறாமல் வளையல்களை அணிந்த என் தலைவியின் நெற்றியானது அதற்கே பசந்தது( நிறம் வேறுபட்டது).(அப்படியாயின் இந்தப் பிரிவை அவள் எங்கனம் தாங்குவாள்)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

முயங்கிக்கிடக்கையில் குளிர்ந்த காற்றானது இடைபுக கண்ட பேதையினது பெரிய குளிர்ந்த கண்கள் பசந்தது(அவ்வாறாயின் இப்போது பெரும் இடைவெளியை எவ்வாறு பொறுப்பாள்)
போழ - நுழைந்த

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

நெற்றியில் விளைந்த பசப்பைக் கண்டு கண்ணின் பசப்பு மேலும் துன்பமடைந்தது.
பருவரல்- துன்பம்

காமத்துப்பால்-கற்பியல்-பொழுது கண்டிரங்கல்-123

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

மாலைப்பொழுதே நீ வாழி! நீ முன்பு வரும் மாலைக்காலமில்லை மணந்த மகளிரின் உயிரை உண்ணும் வேளையாயிருக்கிறாய்

-- மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக! தலைவனுடன் கூடியிருந்த காலத்தில் இருந்தது போல், இன்பமூட்டும் இனிய மாலைப்பொழுதாக அல்லாமல், கணவனைப் பிரிந்து தவிக்கும் மகளிரின் உயிரை உண்ணும் பொழுதாய் இருக்கின்றாய்.

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

மாலைப்பொழுதே நீ வாழி. உன் துணையும் என் துணைபோல் வன்மனத்தானோ? அதனாலே நீயும் என்னைப்போல் வருந்தி ஒளியிழந்து நிற்கின்றாய்.

-- மயங்கும் மாலைப் பொழுதே நீ வாழ்க! நீயும் ஏன், என்னைப் போல் ஒளி குன்றுகிறாய்? உன் துணையும், என் கணவரைப் போல் கல் மனங்கொண்டதோ??
புன்கண் - பொலிவு இழத்தல், ஒளி மங்குதல்
மருள் - மயங்குதல்


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பனியரும்பி பசந்து வந்த மாலை முன்போலில்லாமல் உயிர்வாழ்தலில் வெறுப்புண்டாகும் வண்ணம் துன்பம் வளர தினமும் வருகின்றது.

-- மாலைப் பொழுதில், மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். அந்த பனிப்பொழிவானது, தலைவனைப் பிரிந்த தலைவியின் மேனியில் படர்கின்ற பசலையினைப் போல் இருக்கும். (மேனியில் வெளிரிய நிறம் தோன்றுதல் - பசலை)

பனி அரும்பி - கதிரவனின் ஒளிக் கற்றை மறைய மறைய, பனித்துளியானது மெல்ல மெல்ல அரும்பி
பைதல் கொள் மாலை - இதமான குளிரினை உடைய மாலைப் பொழுது (பைதல் - குளிர்)
துனி அரும்பி - உயிர் வாழ்தலின் மேல் வெறுப்பினை உருவாக்கும் வண்ணம் (துனி - வெறுப்பு)
துன்பம் வளர வரும் - பிரிவுத் துன்பத்தை மேன்மேலும் வளர்ப்பதற்காக வருகிறது.


முன்பெல்லாம், பனிப்பொழிவினால் பசந்து இன்ப உணர்வு பொங்கும்
வண்ணம், சில்லென்னும் குளிர்ந்த காற்றுடன் மாலைப் பொழுது வந்தது. ஆனால், இப்பொழுதோ தலைவனைப் பிரிந்து தவிக்கும் எனக்கு, துன்ப நோயை மேன்மேலும் வளர்த்து, உயிர் வாழ்தலின் மேல் வெறுப்பினை உண்டாக்கும் வண்ணம் நிதமும் வருகின்றது.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

தலைவன் உள்ளவிடத்து என்னுயிர் தளிர்க்க வந்த மாலை அவரில்லாத பொழுது கொலைக்களத்துக்கு வரும் கொலைஞன் போல் வருகின்றது.

-- என் தலைவனைப் பிரிந்திருக்கின்ற நாட்களில், மாலைப்பொழுதானது, கொலைக்களத்திற்கு வரும் கொலைஞனைப் போல் வருகிறது.
ஏதிலர் - பகைவர், அன்பற்றவர், கொலைஞர்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?

(என்னை வருத்தாது விட்டுவிடும்) காலைக்குச் செய்த நன்மை யாது (என்னை வருத்தும்)மாலைக்குச்செய்த பகைதான் என்ன?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்று, என் தலைவர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த காலை (காலத்தில்) நான் அறியவே இல்லை.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

காலையில் அரும்பாகி, பகலெல்லாம் பெரிய அரும்பாகி, முதிர்ந்து, மாலையில் மலரும் இந்த நோய்.

-- காலை வேளையில் மொட்டுவிட்டு, பகல் முழுதும் வளர்ந்து போது ஆகி(முதிர்ந்த மொட்டாகி), மாலையில் மலர்கின்றது இந்த காதல் நோய்.
போது - மலரும் தருவாயில் உள்ள அரும்பு

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

முன்னர் இனிமையாயிருந்த ஆயனின் குழலிசை, இப்பொழுதெல்லாம், நெருப்புப் போலச் சுட்டெரிக்கும் மாலைப்பொழுதை வருவிக்க வேண்டித் தூதாக செல்வதால், அது என்னைக் கொல்லும் படைக்கலமுமாயிற்று.

அழல் -நெருப்பு

-- தீயாய் என்னைச் சுட்டெரிக்கின்ற மாலைப் பொழுதினை வரவேற்கும் தூதாக ஆயனின் குழலோசை இருப்பதால், அவ்வோசையானது, என்னைக் கொல்லவரும் படைக்கலத்தின் ஓசைபோல் வந்து என்னை அச்சுறுத்துகிறது.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

மதிமருளும் வகை மாலை படரும் பொழுது இவ்வூரெல்லாம் மயங்கி நோயை அனுபவிக்கும்

பைதல் - நோய்

--மாலை பொழுது வந்தால், என் அறிவு மயங்கி, எனக்குப் பிரிவுத் துனபத்தை தந்து வருத்துகின்றது, அவ்வேளையில் இந்த ஊரும் மயங்கி துன்பத்தில் உழல்வது போலவே தோன்றுகிறது.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

இத்தனை காலமும் பிரிவைப்பொறுத்து இறவாதிருந்த என்னுயிர் பொருளியல்பே தன்இயல்பா கொண்ட காதலனை நினைத்து இந்த கொடுமையான மாலை வேளையில் மாய்கின்றது.

-- பொருள்மாலையாளரை உள்ளி - பொருளீட்டுவதற்காகச் சென்ற என் காதலரை நினைத்து,
-- மருள்மாலை மாயும் என் உயிர் - மயங்கும் இந்த மாலை வேளையில் மாய்ந்து போகின்றது.
-- மாயா உயிர்-
அவர் பிரிந்து சென்ற வேளையில் மாய்ந்து போகாது நின்ற என் உயிர்.

பொருளீட்டுவதற்காக என் காதலன் செல்லும் வேளையில் மாய்ந்து போகாமல் நின்ற என் உயிரானது, அவர் சென்ற பின் அவரையே நினைத்து, மயங்கும் மாலை வேளையில் பிரிவுத் துன்பத்தால் மாய்கின்றது.

காமத்துப்பால்-கற்பியல்-கனவு நிலையுரைத்தல்-122

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

என்னை வருத்துகின்றதை அறிந்து அது தீர என் தலைவரின் தூதுவனாய் வந்த கனவினுக்கு விருந்தாக என்ன செய்வேன்.

-- என் பிரிவுத் துயருக்கு மருந்தாக, காதலரின் தூதினைக் கொண்டு வந்து என்னிடம் சேர்த்த கனவுக்கு நான் என்ன விருந்து படைப்பேன்??

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

கயல் போல மையுண்ட கண்கள் என் காதலரின் ஏக்கத்தால் தூங்காமல் இருக்கின்றன. அவை தூங்குமாயின் கனவில் காதலரை காண்பேன் கண்டால் அவரால் ஏற்படும் துன்பத்தை விரியச்சொல்வேன்

-- என் கணவனுடன் இணைந்திருந்த காலத்திலே, மையுண்டு செவ்வையாயிருந்த
என் கண்கள், இன்று என் வேண்டுகோளுக்கிணங்கி உறக்கம் கொள்ளுமாயின், என்னுடன் இணைந்த என் காதல் கணவருக்கு கனவிலே, நான் இன்னும் உயிர் வாழ்கின்ற உண்மையை உரைப்பேன்.
இரப்ப- வேண்டுகோள், யாசித்தல்
துஞ்சில் - துயில் கொள்ளுமாயின்
கலந்தார்க்கு - கணவர்க்கு
உயல் - உயிர்வாழ்தல்


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

நனவில் நேரில் வந்து அருள்செய்யாத தலைவர் கனவில் வந்து காணுதலாலேயே என் உயிர் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

நனவில் நேரில் வந்து அருள்செய்யாத தலைவன் கனவில் வருவதாலே கனவே எனக்கு மிக்க இனித்தாயிற்று

நனவினான் நல்காரை, நாடித் தரற்கு கனவினான் உண்டாகும் காமம்
-- என்னுடைய காதலானது, கனவினாலேயே நிலைப் பெற்றிருக்கிறது. அ-து நிகழ்காலத்தில் என்னுடன் இருந்து என்னை அன்பு செய்யாத காதலரை, கனவுதான் தேடிக் கொணர்ந்து என்னிடத்து சேர்ப்பிக்கின்றது.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

முன்னர் என் காதலனை நேரில் கண்டு நுகர்ந்த பொழுது இன்பம் உண்டாயிற்று. அவ்வின்பம், இன்று கனவினைக் கண்டவுடன் உண்டானது. ஆதலால் எனக்கு இரண்டுமே ஒத்தது

-- முன்பு, நேரில் என் காதலரைக் காணும் பொழுது எத்துனை இன்பமாய் இருந்ததோ, அதே அளவு இன்பம் இப்பொழுது அவரைக் கனவில் காணும் பொழுதும் இருக்கின்றது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

நனவு என்ற கெட்ட ஒன்று இல்லாதாயின் நான் என் காதலனை (கனவினால்) பிரியாமலிருப்பேனே.

நனவு - பகல்

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.

இது என்ன கெட்ட இயல்பு நேரில் வந்து அருள்செய்யாத தலைவன் கனவிலே வந்து துன்புறுத்துவது.

பீழிப்பது - வருத்துவது, துன்புறுத்துவது


துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

நான் தூங்கும்போது என் தோளிலே ஆட்படுகின்ற தலைவன் விரைந்து என் நெஞ்சில் நிறைகின்றான் நான் விழித்தபிறகு

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

கனவிலே, தன் காதலர் வரக்காணாதோரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து மனம் நொந்து கொள்வர்.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

நனவில் என்னை என் காதலன் பிரிந்துவிட்டான் என்று கொடுமை கூறுவர் இவ்வூரின் மகளிர் ஆனால் அவர்கள் அறியார் அவர் என்கனவில் வருவதை.

காமத்துப்பால் - கற்பியல்- நினைத்தவர் புலம்பல்-121

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

முன் அனுபவித்த இன்பத்தை நினைத்தாலும் அப்போது தீரா பெரு மகழ்ச்சியைத்தருவதால் கள்ளைவிட காமமே இன்பத்தை தருவது

-- தேன் என்ற சொல் தித்தித்திடுமா? இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா? ஆனால், காதல் என்பதோ, சொல்லவும் தேவையில்லை, நினைத்தாலே போதும் அது முடிவில்லாத, பெரு மகிழ்ச்சியைத் தரும் தன்மையது.

கள்ளானது, அதை உண்ட சிறிது நேரத்திற்கு மட்டுமே இன்பம் தரும். ஆனால், காதலானது, மெய்யால் அனுபவிக்காவிடினும், நினைத்தாலே போதும், அது அளவில்லா பேரின்பத்தைத் தரவல்லது. அதனால் கள்ளை விட காதலே இன்பம் தருவதில் சிறந்ததாகும்.

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏஇல்.

தம்மால் காதலிக்கப்படுபவரை நினைப்பதுவே இன்பம் ஆகும்.(அ-து) பிரிவுத்துன்பம் இல்லாமல் போகின்றது. ஆதலால், காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

தும்மல் வருவதைப்போன்று தோன்றி மறைந்தது( அதனால் என் காதலர்) என்னை நினைப்பது போன்று தோன்றி நினைக்காது விட்டார் போலும்

-- தும்மல் வருவது போல் வந்து, பாதியிலேயே அடங்கிவிடுகிறதே! அப்படியானால், என் காதலர் என்னை நினைவுகூர்ந்தும் நினையாமல் இருக்கின்றாரோ??

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

எம் நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் உள்ளார் அதைப்போலவே நானும் இருக்கின்றோமோ?

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

தம் நெஞ்சத்தில் என்னை காவல்கொண்ட தலைவர் எமது நெஞ்சத்தில் ஓயாமல் வருவதற்கு நாணாரோ?

-- என் காதலர், அவர் மனதிற்குள் என்னை அனுமதிக்காமல் காவல் காப்பவர், என் மனதிற்குள் மட்டும் ஓயாது வருவதற்கு அவருக்கு நாணமில்லையோ??

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

நான் அவரோடு புணர்ந்த இன்பத்தை நினைப்பதால் (பிரிவுற்ற வேளையில்) இத்துன்பத்தில் உயிர்வாழ்கின்றேன் அது இல்லையாயின் வேறு எதனால் உயிர்வாழ்வேன்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

அவரை மறந்தால் நான் என்ன ஆவேனோ? அவரை மறப்பதற்கு நான் அறியேன்; அவரை நினைத்தாலும், நினைக்கையில் பிரிவானது என் உள்ளத்தைச் சுடுகின்றது.

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

காதலரை எவ்வளவு மிக நினைத்தாலும் கோபிக்கமாட்டார் இதுவன்றோ எனக்கு அவர் செய்யும் சிறப்பு

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

முன்னர் நாமிருவரும் வேறல்ல என்று சொல்லுவாரது அருளில்லாமையை நினைத்து நினைத்து என் இன்னுயிர் கழிகின்றது

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

சந்திரனே, வாழ்வாயாக! என்னெஞ்சை விட்டு நீங்காமலிருந்து, என்னை விட்டுப் போயினாரான என் காதலர், என் கண் பார்வையில் எதிர்ப்படும் வரை மறையாதிருப்பாயாக.

காமத்துப்பால்- கற்பியல்- தனிப்படர் மிகுதி-120

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

தான் காதலில் வீழ்ந்துவிட்ட கணவன் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காமநுகர்ச்சி என்னும் வித்தால்லாத(அதாவது இடறில்லாத,குறைவில்லாத) பழத்தை கொண்டது போலன்றோ?

காழ் - வித்து

-- தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பக் கூடியவராக வாய்க்கப்பெற்றவர்களின் காதல், குற்றமில்லா கனியைப் பெற்றதைப் போன்றது.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

காதலால் வீழ்ந்த மகளிரிர்க்கு அவரிடம் காதலால் வீழ்ந்த கணவரைப்பெற்றவர் மழையினால் நம்பி வாழ்வோர்க்கு காலத்தால் அளவரிந்து பெய்யும் மழையைப்பெற்றது போன்றது

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

தம்மால் விரும்பப்படுகின்ற கணவரால் விரும்பப்படுகின்ற மகளிர்க்கு 'நாம் வாழ்வோம்' என்ற செருக்கு அமையும்
அதாவது தாமிருவரும் இன்புற்று வாழுவோம் என்ற நம்பிக்கை இருக்கும்

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

கற்புடை மகளிராலே நன்குமதிப்படுவாரும் தம்மால் விரும்பப்படுகின்ற கணவரால் விரும்படாராயின் தீவினையுடைவரே

--
கெழி இலர் தாம் வீழ்வார் வீழப்படார் எனின் வீழப்படுவார்.
-- தாம் விரும்புகின்ற காதலர், அன்பில்லாதவராக, தம்மை விரும்பாதவராக அமைந்துவிட்டால், அவர் எவ்வளவுதான் நல்லவராக, நற்குணமுடையவாராக இருப்பினும் நல்வினை அற்றவரே.
கெழி - நட்பு, அன்பு


நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

நம்மிடம் காதல் கொள்ளாதவர் நம்மாலே காதல் கொள்ளப்பட்டரெனினும் நமக்கு என்ன இன்பத்தை தந்துவிட முடியும்

-- நாம் காதல் கொண்டவருக்கு நம் மேல் அன்பு இல்லாவிடின், அவரால் நமக்கு எந்த நன்மையும் இல்லை.

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

காவடிப்பாரம் போல காமமானது ஓரிடத்தில் உண்டாயின் வலிமிகும் இரண்டுபேரிடமும் ஒத்திருக்குமாயின் இன்பஞ்செய்வது
கா- காவடி

-- ஒருதலைக் காதல் மிகவும் துன்பமானது; காதலானது காவடியைப் போல் இருபுறமும் சமமாக இருத்தல் வேண்டும். அதுவே மிகவும் இனிமையானதும் ஆகும்.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

இருவரிடமும் ஒத்து நில்லாமல் காமன் ஒருவரிடம் நின்று போர் செய்யும் காமன் நோயையும் துன்பமிகுவதையும் அறியானோ
பருவரல் - நோய், அருவருப்பு
பைதல் - துன்பம்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

தம்மால் விரும்பப்படுகின்ற காதலிரிடமிருந்து இனிய சொல்லை பெறாது உயிர்வாழக்கூடிய மகளிரைப்போல கல்நெஞ்சை உடையர் இவ்வுலகத்தில் யாருமில்லை

-- தாம் விரும்புகின்றவரிடமிருந்து, ஒரு இனிய சொல்லைக் கூடப் பெறாதவர், இப்பூமியில் வாழ்வார் என்றால், அவரைவிட கல்நெஞ்சம் கொண்டவர் எவருமில்லை.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

என்னால் விரும்பப்பட்ட தலைவர் அருள்செய்யாரெனினும் அவரிடம் எச்சொற்களும் என் செவிகளுக்கு இன்பஞ்செய்வனவாம்.

-- நான் விரும்புகின்றவர் என்னை விரும்பாவதவராக இருப்பினும், அவரைப் பற்றிய எந்த புகழுரையும் என் செவிக்கு இனியனவே.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

உன்னோடு உறவாதவர்க்கு மிகுந்த நோயை சொல்லலுற்ற நெஞ்சே நீ வாழ்க அதைவிட கடலை தூர்க்க முயற்சி செய் அது எளிதானது

-- நெஞ்சே நீ வாழ்வாயாக! உன்னை விரும்பாதவர்க்கு, நீ அனுபவிக்கின்ற துன்பத்தை எடுத்துச் சொல்ல முற்படுவதைவிட, கடலையேத் தூர்த்துவிடலாம். அன்பற்ற காதலர்க்கு, தன் உள்ள நோயை எடுத்துரைக்க முயல்வது கடலைத் தூர்ப்பதை விட கடினமானது.
செறு - தூர்

காமத்துப்பால்- கற்பியல் - பசப்புறு பருவரல்-119

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

விரும்பிய தலைவனை பிரிவை விரும்பி நேர்ந்ததால் ஆட்பட்ட பசப்பை அடைந்த என்னியல்பை எவ்வாறு யாருக்கு உரைப்பேன்

--என் காதலவர் என்னை விட்டு பிரிந்து செல்ல அனுமதித்துவிட்டேன். ஆனால், அவர் பிரிவினால் என் உடலில் படர்ந்த பசலையின் தன்மையினை எவ்வாறு பிறரிடம் சென்று உரைப்பேன்??
பண்பியார்க்கு - பண்பு யார்க்கு - குற்றியலிகரம்


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

தலைவன் கொடுத்ததால் வந்தேன் என்னும் பெருமையால் இந்த பசப்பு நோயானது என் உடலின் மேல் தொடந்து ஊரும்.

-- என் காதலர் உண்டாக்கினார் என்ற பெருமையினால், இந்த பசலையானது என் மேனி மேல் எங்கும் ஊர்ந்து பரவுகின்றது.
தகை - பெருமை
மேனி - உடல்
ஊரும் - பரவும்


சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

என் மேனி அழகயும் நாணத்தையும் எடுத்துக்கொண்டு மாறாக(பிரிவின்போது) இந்தக்காமநோயான பசலை நோயைக்கொடுத்துவிட்டார்

-- என் மேனியழகையும், உள்ளத்தின் நாணத்தையும் அவர் எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றாக, பிரிவுத்துன்பத்தையும், பசலை நோயையும் தந்துவிட்டார்.

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

அவனையே நினைக்கின்றேன், அவனுடைய நல்ல திறன்களையே பேசுகின்றேன் அவ்வாறு செய்யாமல் நிற்கவும் உடனே பசலை வந்து நிற்கின்றது. இது என்ன வஞ்சனையோ?

-- உள்ளத்தால் அவரை நினைக்கிறேன், என் வாய்ச்சொற்களும் அவருடைய வலிமையையும், நல்லியல்பு திறத்தையும் பற்றியேதான் பேசுகிறேன். மனதாலும், சொற்களாலும் அவரைவிட்டுப் பிரியாதிருந்தும், என் மேனியில் இந்த பசப்பு எப்படித்தான் கள்ளத்தனமாய் வந்ததோ?

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

அங்கே அக்காலத்தை பிரிந்து செல்வது என் தலைவன் பசலை நோயோ இங்கேயன்றோ என் உடலில் அன்றோ ஊர்கின்றது.

--என் காதலர் நெடுந்தொலைவு கூட செல்லவில்லை. உப்பக்கம்(உங்கு) சென்றாலே, இப்பக்கம் (இங்கு) என் மேனியில் பசலை வந்துவிடுகிறது.
உவக்காண் - உங்கு, உவ்விடம் (நெடுந்தொலைவிலும் இல்லாமல், மிக அருகிலும் இல்லாமல் இடைப்பட்ட தொலைவு; கூப்பிடுந்தூரம் ன்னும் சொல்லலாம்)

இவக்காண் - இங்கு


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கினது சோர்வைப்பார்த்து நெருங்கி வரும் இருளைப்போல தலைவனது புணர்ச்சியின் சோர்வைப்பார்த்து பசலை நோயானது நெருங்கி வரும்
கொண்கன்- தலைவன்

-- விளக்கினது ஒளி தீர்ந்ததைப் பார்த்து படர்ந்திடும் இருளினைப்போல், தலைவனுடைய தழுவல் அகன்றவுடனேயே படர்கின்றது இப்பசலையும்.
அற்றம் - முடிவு


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

முன்னொரு நாள் காதலனை தழுவிக்கிடந்தேன் அறியாது சற்று விலகிவிட்டேன் அவ்விலகிய வளவிலே பசலைநிறமானது அள்ளிக்கொள்ளப்படும் பொருள் போலே வந்து நிறைந்தது.

-- முந்தைய பாடலில், தலைவனின் தழுவல் கலைந்த உடன் பசலை வந்துவிடுகிறது ன்னு அந்த அம்மா சொன்னாங்கள் ல. இந்த பாட்டுல அத அப்படியே கொஞ்சம் விளக்கமா சொல்றாங்க. ஒன்னுமில்ல,

இருவரும் அணைத்தபடி உறங்கிக்கொண்டிருக்கையில், தூக்கத்துல கொஞ்சம் ஒரு பக்கம் புரண்டு படுத்துருக்காங்க. அவ்வளவுதான். அப்படியே இந்த அம்மாவையே தூக்கி சாப்பிடற அளவுக்கு பசலை அவங்க மேனி முழுதும் பரவிடுச்சாம்.
புல் - புணர்வு
புல்கு - தழுவு
புடை - இடம்; புடைபெயர்ந்தேன் - இடம் பெயர்ந்தேன்


பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

இவள் பசலைநிறத்தை அடைந்தால் என்று என்னை பழிப்பார் உள்ளார் இவளை அவர் துறந்தார் என்று சொல்லுவாரில்லை

-- 'அய்யோ பாவம்! இந்த பெண்ணுக்கு பசலை வந்துவிட்டதே' என்று என்னைத் தான் எல்லோரும் பழிக்கிறார்களே அன்றி. பிரிவைப் பொறுக்க இயலாத இந்தப் பெண்ணைப் போய், அவர் பிரிந்துவிட்டாரே என்று உரைப்பவர்
எவரும் இல்லையே.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

நானை உடன்படும் வகையில் பிரிவைச்சொல்லிய தலைவன் இன்று தன் கருத்தால் நல்ல நிலையை அடைந்திருதந்தால்(அதாவது உண்மையைச்சொல்லி பிரிந்திருப்பாராயின் அவன் நல்ல நிலையை அடைந்திருப்பான்) அவ்வாறாயின்
இந்த உடலானது பசலை நோயின்பாற் படட்டும்

-- தலைவனின் பிரிவுக்கு என்னை சம்மதிக்க வைத்து (உடன்படுத்திச்) சென்றவர், சென்ற இடத்தில் நலமாக இருப்பார் என்றால், என் மேனி பசலையால் வேதனைப்பட்டாலும் படட்டும்.
(பசக்கமன் பட்டாங்கு என் மேனி - என் மேனி பசலையின் பால் படட்டும்)

நயப்பித்தார் - உடன்படுத்தியவர்

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

அன்று என்னை கொண்ட தலைவனை நாட்டோர் குறைகூறாமல் என்னை பசலை கொண்டவள் என்று கூறிடினும் நன்றே

-- நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின், பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே.

காமத்துப்பால்- கற்பியல்- கண்விதுப்பு அழிதல்-118

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

அன்று இந்த காம நோயை உண்டாக்கும் வகையில் தலைவனை காண்பித்தது இந்த கண்களே அவ்வாறிருக்க
இன்று அவனை காட்டச்சொல்லி அழுவது ஏனோ?

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?

மையெழுதிய கண்களானது மேல்விளைவை அறியாது (அன்று தலைவனைப்பார்த்து) இருந்துவிட்டு இன்று தன்பிழை என்று அறியாமல் வருத்ததை அனுபவிப்பது ஏனோ?

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலரை விரைந்து ஆவலால் நோக்கிவிட்டு தாமே இன்று அழுகின்ற அறியாமைச்செயல் நகைக்கத்தக்க இயல்பை உடையது கண்கள்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

உன் மையுண்ட கண்கள் பிழைக்கமுடியாத ஒழிவில்லாத நோயை உண்டாக்கி இன்று என்னால் அழக்கூட முடியாமல் நீர்வற்றி போய்விட்டது

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

கடலும் சிறியது எனும் வண்ணம் காம நோய் செய்த கண்கள் அத்தீவினையினால் தூங்க முடியாமை எனும் துன்பத்தை அனுபவிக்கின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

எனக்கு இந்த காமநோயை கொடுத்த இந்த கண்கள் தூங்காமல் இன்று துன்பமடைவது கண்டு என் மனம் மிகவும் இனிதாயிற்று

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

விழைந்து இழைந்து தலைவனைக்கண்ட இந்த கண்கள் துன்பத்தை அனுபவித்து அனுபவித்து நீர் வற்றிப் போகுக

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

வெறும் சொற்களினால் விரும்பி மனத்தினால் விரும்பாத தலைவரை காணாது ஏங்குகின்ற தன்மை உடையது கண்கள்.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

(தலைவன்)வராத நாட்களில் பிரிவினால் துஞ்சாது, வந்த நாட்களிலோ பிரிந்துவிடுவாரோ என்று ஏக்கத்தில் துஞ்சாது. இரய
இவ்விருவழியும் எனது கண்கள் பொறுக்கமுடியா துன்பத்தை கொள்கின்றது.
அஞர்- துன்பம்.

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

என்னைப்போல பறை அறைதலை போல படபடக்கும் கண்களை உடையவர்களின் அகத்தில் மறைந்த இரகசியத்தை அறிதல் இவ்வூரிலுள்ளவர்க்கு எளிது.

காமத்துப்பால் -கற்பியல் -படர்மெலிந்து இரங்கல் -117

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

என் மனதிற்குள்ளேயே மறைக்க முற்படும் பொழுதெல்லாம், பிரிவுத்துன்பமான இக்கொடிய நோயானது, இறைக்கும் பொழுதெல்லாம் பெருகும் ஊற்றுநீரினைப் போல்பெருகுகின்றது.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

காதல் நோயை என்னால் மறைக்கவும் இயலவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்பவும் என் பெண்மை நாணுகிறதே!
கரத்தல் - மறைத்தல்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

பிரிவுத் துயரை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் துன்புறும் என் உடலினுள்ளே, காமமும், நாணமும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் இருதலையிலும் சம எடையாகத் தொங்குகின்றனவே!
காவா -காவடித் தண்டு
தூங்கும் - தொங்கும்


காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

காமமாகிய நோயானது, கடலைப் போல் பெருகியுள்ளது; ஆனால், அதைக் கடப்பதற்குப் பாதுகாப்பான தோணியாகிய காதலர்தாம் என்னுடன் இல்லாமர் போயினார்.

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

இன்பஞ்செய்யும் எம் காதலினிடத்தே பகைவரைப் போல் துன்பம் செய்யவல்ல என் காதலர், துன்பஞ்செய்தற்குரிய பகைமையிடத்து என்ன செய்வாரோ?
துப்பு -துன்பஞ்செய்தற்குரிய பகைமை

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

காதல், இன்பம் அநுபவிக்கும் போது கடலளவுள்ளது; அது தரும் பிரிவுத் துன்பமோ கடலை விடப் பெரிதாயுள்ளது.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

காமமாகிய கடலை நீந்தி கரை காணாமல் தவிக்கிறேன்; நள்ளிரவிலும் நான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

பாவம் இந்த இரவுப் பொழுது! உலக உயிர்கள் அனைத்தையும் தூங்கச் செய்துவிட்டு தனிமையில் இருக்கின்றது. அதற்கு என்னையன்றி வேறு துணை இல்லை.


கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

அவர் பிரிவைப் பொறுக்க இயலாத இந்நாள்களில் இரவுப் பொழுது கழிவதற்கு நெடுநேரமாவது,அக்கொடியவரது கொடுமைக்குமேல் கொடுமையானதாக இருக்கின்றது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

என் மனதைப் போன்று என் உடலும் அவர் இருக்கும் இடத்திற்கு இப்பொழுதே விரைந்து செல்லவல்லனவாயின், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

காமத்துப்பால் -கற்பியல் -பிரிவாற்றாமை -116

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

'நான் உன்னை விட்டு நீங்கிப் போவதில்லை' என்று சொல்வதானால், அச்செய்தியை என்னிடத்தே சொல். அவ்வாறன்றி, 'விரைந்து வந்துவிடுவேன்' என்று சொல்வதானால், அச்செய்தியை நீ வரும்வரை உயிருடன் இருக்க வல்லவரிடத்தே சென்று உரைப்பாயாக.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புண்கண் உடைத்தாற் புணர்வு.

அவர் அன்பான பார்வைமாத்திரம் கூட முன்னர் இனிதாயிருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவருடன் புணர்தலும் துன்பமாகத் தோன்றுகிறது.
பார்வல் -பார்வை

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

'பிரியேனென்ற தன் சொல்லையும், நம் பிரிவைப் பொறுக்க இயலாதத் தன்மையையும்' அறிந்த காதலரிடத்தும், ஒரு சமயத்தில் பிரிவு உள்ளதால், அவர், 'பிரியேன்' என்று சொன்ன சொல்லை என்னால் நம்ப இயலவில்லை.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

பார்த்த முதல் நாளே, 'உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சாதே', என்று உறுதிபடக் கூறியவர், பின் பிரிவாராயின், அவர் சொல்லை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

என்னுயிரைச் செல்லாமல் காப்பாற்றுவதானால், அதனை ஆளுவதற்கு அமைந்தவரது பிரிவைத் தடுத்துக் காப்பாற்றுவாயாக; அவர் பிரிந்து போய்விட்டால் அவரால் ஆளப்பட்ட உயிரும் போய்விடுமாதலால், பின் அவரைக் கூடுதல் அரிதாகும்.
ஓம்பு -காப்பாற்று

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

தலைவர் தாமே என் முன்னின்று, தம் பிரிவைப் பற்றி அறிவிக்கும் அளவினுக்குக் கொடியவராயின், அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் ஆசையும், பயன் இல்லாததே!
நசை -ஆசை

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

என்னைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, அவன் அறிவிக்காமலே, என் மெலிந்த முன்கையினின்று கழலும் வளையல்களே ஊரார்க்கு அறிவித்துவிடும்.
துறைவன் -தலைவன்
தூற்றாகொல் -அறிவியாவோ
இறவா -கழலா நின்ற

இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

(இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு)
தன்குறிப்பறிகிற தோழியரும், நம்மேல் அன்புடைய உறவினருமில்லாத ஊரினிடத்து வாழ்தல், துன்பஞ்செய்வதாகும்;
அதனினும் துன்பமானது தன் காதலரைப் பிரிவதாகும்.
இனன் -தோழியர்

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

தீயானது தன்னைத் தொட்டால் சுடும்; ஆனால் அது, காமநோயைப் போல ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்கும் வேளையில் சுடும் ஆற்றலற்றது ஆகும்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

காதலர் பிரிவை அறிவித்த போது அதற்கு உடன்பட்டும், பிரியும் போது உண்டாகிற துன்ப நோயையும் பொறுத்துக் கொண்டு, அவரது பிரிவுத் துயரையும் தாங்கி, அதன்பின்னும், காத்திருந்து உயிர் வாழும் மகளிர் இவ்வுலகில் பலர் இருக்கலாம். ஆனால் என்னால் ??

காமத்துப்பால் -களவியல் -அலர் அறிவுறுத்தல் -115

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

மடந்தையோடு எமக்கு உண்டான காதலால், ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்பது, என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறியமாட்டார்கள்.

அலர் - பழிச்சொல்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்களை உடைய இப்பெண்ணின் அருமையை அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, பழிக்கூறலை எமக்களித்தார்களே!

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

எங்கள் காதலை இவ்வூர் அறிதலால் விளைந்த அலரானது, அவனையும் சென்று சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன். (அந்த அலர்தான் எம்மை எம் காதலனுடன் சேர்விக்கப்போகின்றபடியால், அது எனக்கு பெறாது பெற்ற பொருளைப் போன்றது )
கௌவை - பழிச்சொல், அலர்

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

ஊர் உரைக்கும் பழிச்சொற்களாலே என் காதல் மென்மேலும் மலர்கின்றது! அவ்வலர் இல்லையானால், அது தன் இன்பந்தரும் தன்மையிழந்து சுருங்கிப் போய்விடும்.

கவ்வை -பழிச்சொற்கள்

தவ்வென்னும் -சுருங்கிப்போகும்

களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.

கள்ளுண்பவர்கள் கள்ளுண்ணும் பொழுதெல்லாம் அதனை மென்மேலும் விரும்பினாற் போல், காதலும் அலரால் வெளிப்படுந்தோறும் மிகுந்த இனிதாகின்றது.
களித்தல் - மகிழ்தல், கள்ளுண்ணுதல்
வேட்டல் - விரும்புதல்


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

தலைவனை நான் கண்டது ஒரேஒரு நாள்தான்; ஆனால் அதனால் உண்டான அலரானது, சந்திரனைப் பாம்பு விழுங்குவது உலகெங்கும் பரவுதற்போல் பரவிவிட்டது.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்.

இக்காதல் நோயானது, ஊராரின் பழிச்சொற்களை எருவாகவும், அவைகளைக் கேட்டு, தாய் சொல்லுகின்ற கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

'பழிச்சொற்களால் காமத்தைத் தணித்துவிடுலாம்' என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அணைப்பதை ஒத்ததாகும்.

நுதுப்பல் - தணித்தல்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.

பலரும் நாணும் வண்ணம், 'அஞ்சாதே! உன்னை விட்டு பிரியமாட்டேன்!' என்று என்னைத் தெளிவித்துத் தேற்றியவர், என்னை விட்டு நீங்கியபின், ஊராரின் அலருக்கு என்னால் நாணவும் இயலுமோ?

ஒல்வது ~ ஒல்லுதல் - இயலுதல்

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை யெடுக்கும் இவ்வூர்.

யாம் வேண்டும் கவ்வை எடுக்கும் இவ்வூர், (தலைவர்) தாம் வேண்டின் நல்குவார்

நான், என் காதலருடன் உடன்போவதற்கு விரும்புவதாகிய அலரினை இவ்வூராரும் எடுத்துக் கூறுகின்றனர் (என் உள்ளத்தின் உவப்பையே, ஊராரும் அலராகப் பேசுகின்றனர்); என் தலைவனும் என்னை விரும்புவரானால், அவரும் அதற்கு உடன்படுவார். ஆதலால் இவ்வலர் எமக்கு நன்றாய் அமைந்தது.

காமத்துப்பால் -களவியல் -நாணுத் துறவுரைத்தல் -114

நாணுத்துறவுரைத்தல் - நாணத்தை துறந்து, தன் காதலை உரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

தன் காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின், அன்பை பெற இயலாமல் வருந்துகின்ற ஆடவருக்கு, வலிமையான பாதுகாப்பு, 'மடலேறுதல்' அல்லாமல் வேறு இல்லை.

(மடலூர்தல் - தலைவனின் காதலை தலைவி ஏற்றுக் கொள்ளாத நிலையில், தன் காதலை அவளுக்கு உணர்த்தும் வண்ணம், அவள் முகத்தை ஒரு துணியில் வரைந்து கொடி போல் பிடித்துக் கொண்டு, பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை மேல் ஏறி தலைவி இருக்கும் வீதியில் உலா வருதல் ஆகும்.

காய்ந்த பனை ஓலையில் தலைவன் உலா வருகையில், அவ்வோலை வீதியில் உருவாக்கும் இரைச்சலில், அனைவரின் கவனமும் அவன்பக்கம் திரும்பி, சீலைத்துணியில் வரையப்பட்டிருக்கும் பெண்ணிடமும், அவள் பெற்றோரிடமும் தலைவனின் காதலை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு ஊரார் எடுத்துக் கூறுவர்.

மடலூர்தல் என்பது, மிகவும் இழிவான ஒரு செயலாகும். அதிலும் மகளிர் எந்நிலையிலும் மடலூர்தல் கூடாது என்பது மரபு.
"எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மையான்" - தொல்காப்பியம்)
மடலேறுதல் - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

காதலியின் அன்பைப் பெற இயலாதத் துன்பத்தைத் தாங்க இயலாத, என் உடலும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி, மடலூரத் துணிந்துவிட்டன.


நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணத்தையும், மிகுந்த ஆண்மையையும் முன்னர் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால், காம நோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்.
பண்டு - முன்பு

காமக் கடும்புனல் உய்க்குமே நாணோடு
நல்லாண்மை என்னும் புணை.

நாணம், நல்லாண்மை ஆகிய புணை(தெப்பங்)களை, காமமாகிய கடிய வெள்ளம் என்னிற் பிரித்து கொண்டு போகின்றதே!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

அழகிய மணிகளைக் கொண்டு செறிவாகத் தொடுக்கப்பெற்ற கைவளையும், இடையணியும்(மேகலை) அணிந்தவள் எனக்கு,' மாலைப் பொழுதில் வருந்தும் துன்பத்தையும், மடலேறும் நிலையையும் தந்துவிட்டாளே!'
தொடலை - மணிமேகலை (இடையணி)
தொடி - வளையல்

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்.

அப்பேதையின் பொருட்டாக என் கண்கள் தூக்கத்தைப் பகைத்துக் கொண்டு இரவு முழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றன; அதனால், இரவின் நடுச்சாமத்திலும் மடலேறுதலை உறுதியாக மடலேறுதலைப் பற்றியே நான் நினைத்திருப்பேன்.
படல் - உறக்கம்
ஒல்லா - பகை
மன்ற - நிச்சயமாக, உறுதியாக

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.

கடல் போல் கரையற்ற(அளவற்ற) காமநோயை அனுபவித்தும் மடலேறாமல் தன் துயரைப் பொறுமையோடு சகித்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதியான குணம் ஆணுக்கில்லை.

நிறையரியர் மன் அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

இவர், மன உறுதி அற்றவர், உள்ளத்தில் எதையும் கள்ளத்தனமாக வைத்திருக்க அறியாதவர் என்று அவர் மேல் இரக்கம் கொள்ளாது, காதலானது தானே மறைந்திருக்காது, மன்றத்தில் வெளிப்படுகின்றதே!

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

நான்முன் அடங்கியிருக்கையில், என்னை பிறர் அறியவில்லை என்று எண்ணி, என் காமநோயானது, ஊரில் பலரும் அறிந்து என்னைத் தூற்றும்படிக்கு மயங்கிப் போய் வசவும், வதந்திகளுமாய் வீதியெல்லாம் திரிகின்றது.
மறுகில் - வீதியில்
மருண்டு - மயங்கி
மறுகும் - சுற்றுகின்றது (திரிகின்றது)

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

அறிவில்லாதவர்கள்! நான் பட்ட இந்தப் பெருந்துன்பத்தை அவர்கள் அறிந்ததில்லை போலும். அதனால் தான், என் கண்ணில் காணும்படி என் எதிரே நின்று என்னை எள்ளி நகைக்கின்றனர்.

காமத்துப்பால் -களவியல் -காதற் சிறப்புரைத்தல் -113

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

பணிவான சொல்லையுடைய இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போன்ற மிகுந்த சுவையுடையதாகும்.
வால் - வெண்மை, தூய்மை

உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

இப்பெண்ணோடு எமக்கு உண்டான நட்பு, உடம்புக்கும் உயிருக்கும் இடையேயான நட்பினைப் போன்றது.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

-கருமணியின் பாவாய் நீ போதாய்! யாம் வீழும் திரு நுதற்கு இல்லை இடம்
கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடுவாயாக! நான் விரும்புகின்ற அழகிய நெற்றியையுடையவள் இருப்பதற்கான வேறு இடம் இல்லை.
வீழும் -விரும்பும்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிர்க்கு வாழ்வைத் தருகிறாள். பிரியுமிடத்து அவ்வுயிர்க்கு சாதலையேத் தருகின்றாள்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

(ஒள்ளமர்க் கண்ணாள் குணம் மறப்பறியேன்; மறப்பின் மன்யான் உள்ளுவன்)
ஒளியினவாகிப் போர் செய்கின்ற கண்களையுடையவளது குணங்களை மறந்தால் தானே நினைப்பதற்கு; அவளை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்.

மறந்தால் தானே நினைக்கணும் மாமா! நினைவே நீதானே! நீ தானே! - கரகாட்டக்காரன் ~ குடகுமலைக் காற்றில் வரும் பாட்டு கேட்குதா ங்கற பாடல்ல வருமே.

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.

என் காதலுக்குரியவர் என் கண்ணை விட்டு ஒருபோதும் நீங்கார்; என் கண்களை இமைத்தாலும் வருந்துவதுஞ் செய்யார்; அத்துனை நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.

(காதலவர் கண்ணுள்ளார்; ஆகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து )
என் காதலுக்குரியவர், என் கண்ணுள்ளேயே இருப்பதனால், மை எழுதும் காலம் வரை
அவர் மறைதலை சகிக்க இயலாமையின் கண்ணுக்கு மை எழுதவும் மாட்டேன்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
(நெஞ்சத்தார் காதலவர், ஆக வே பாக்கறிந்து வெய்துண்டல் அஞ்சுதும்)
என் காதலுக்குரியவர் என் நெஞ்சத்திலே இருப்பதனால் அவருக்கு சூடு உண்டாவதை எண்ணி நான் எதனையும் சூடாக உண்ணவும் மாட்டேன்.

இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னுமிவ் வூர்.

கண்ணிமைக்கும் காலத்து அவர் மறைதலை அறிந்து, நான் துயிலற்றுக் கிடப்பதனால், இவ்வூர் அவரை (தூங்காது நோய் செய்தார்) அன்பற்றவர் என்கிறது.

கரப்பாக்கு -மறைதல்

ஏதிலர் -அன்பற்றவர்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.

(உள்ளத்துள் என்றும் உவந்துறைவர்; ஏதிலர், இகந்துறைவர் என்னும் இவ்வூர்)
என் காதலர், என் மனத்தில் எப்போதும் மகிழ்ந்து வாசஞ்செய்கிறார்; அதனையறியாமல் இவ்வூர் 'பிரிந்து போய்விட்டார்', அன்பில்லாதவர் என்று பழி கூறுகின்றது.

காமத்துப்பால் -களவியல் -நலம் புனைந்துரைத்தல் -112

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்ச மலரே வாழ்வாயாக! மென்மையான நீயே எல்லாப் பூவிலும் நல்ல குணமுடையாய்! இருந்தாலும் என்னால் விரும்பப் படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மெல்லிய குணத்தையுடையவள்.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

நெஞ்சே! யான் கண்டு மயங்கிய இவள் கண்கள் பலராலும் காணப்படும் குவளை மலரை ஒத்திருப்பதனால், தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைக் கண்டால், நீயும் மயங்குகின்றாயே!
மையாத்தி -மயங்குகின்றாய்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.

அவளின் மேனியோ தளிர்வண்ணம்; பல்லானது முத்தாகும்; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்களோ கூர்வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை.
முறி -தளிர் வண்ணம்
முறுவல் -பல்
முத்தம் -முத்து
வெறி நாற்றம் -இனிய மணம்
வேய் -மூங்கில்


காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளை மலர்கள் இவளைக் கண்டால், மாட்சிமைப்பட்ட ஆபரணங்களையுடைய இவளது கண்களை நிகரோமென்று நாணித் தலைக்குனிந்து நிலத்தைப் பார்க்கும்.
மாண் -மாட்சிமை

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

இவள் தன் மென்மையை நினையாமல், அனிச்சமலரின் காம்பினைக் களையாமல் சூடிவிட்டாள். இனி இவள் இடைக்கு நல்லவைக்கான பறைகள் ஒலியா. (அனிச்ச மலரின் மலர்க்காம்பின் பளுவினைத் தாங்கும் வலிமை கூட இல்லாத, மென்மையானவளாம்)
பெய்தாள் -சூடினாள்
நுசுப்பு -இடை
படாஅ -ஒலியா

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.

பூரண சந்திரனையும், பெண்ணின் முகத்தையும் வேறுபடுத்தி அறிய இயலாமல், வானத்து மீன்கள் தன் நிலையில் நில்லாமல் கலங்கிப் போயின.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

வானத்து மீன்கள் அவ்வாறு கலங்குவதும் ஏனோ? தேய்ந்து, பின் வளர்ந்து முழுமையடையும் நிலவினிடத்து உள்ள கறைகளைப் போல், இவள் முகத்திலும் களங்கம் உண்டோ?

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

மதியே! வாழ்வாயாக. இப்பெண்ணின் முகத்தைப் போல், நான் மகிழும் வண்ணம் ஒளிவீச வல்லமையுடையாயின் நீயும் என்னால் காதலிக்கப்படுவாய். (ஆனால், நீ அவ்வாறு இல்லை)

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

வெண்ணிலவே! மலர் போன்ற கண்களையுடைய இப்பெண்ணின் முகத்தை நீயும் ஒத்திருப்பாயாயின், பலரும் காணும் வண்ணம் இனி நீ வானத்தில் தோன்றாதிருப்பாயாக!


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

மிக மிக மென்மையான அனிச்சம் மலரும், அன்னப் பறவையின் மெல்லிய இறகும், இப்பெண்ணின் பாதத்தை வருடினால், அவை நெருஞ்சிற் பழம் போல அவளின் பாதங்களை நோகச் செய்யுமே.

காமத்துப்பால் -களவியல் -புணர்ச்சிமகிழ்தல் -111

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே!

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

உடலுக்கு நோய் செய்வதும், அந்நோய்க்கு உரித்தான மருந்தும் வேறு வேறான பொருள்கள் ஆகும்; ஆனால், அணிபுனைந்த இப்பெண்ணினால், என் மனதினுக்கு வந்த நோய்க்கு இவளே மருந்து ஆயினளே!

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

தான் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோள்களைத் தழுவித் துயிலும் இன்பத்தைப் போல, கமலக்கண்ணனின் போக உலக இன்பமும் இனிதாக இருக்குமோ?

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

(தீ - நெருங்கித் தீண்டினால் சுடுவதும், விலகினால் அதன் வெம்மை குறையும்; ஆனால் காதலில் அது தலைகீழாகிறது.)

தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் வந்தால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் எங்கிருந்துதான் பெற்றாளோ?

தெறும் -சுடும்
குறுகும் -நெருங்கும்
யாண்டு -எவ்வுலகில்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

இனிய பொருள்களை விரும்பிய பொழுதே, அவைகள் வந்து தரும் இன்பத்தைப் போன்றன, மலரணிந்த கூந்தலையுடையவளான இவளின் தோள்கள் தரும் இன்பம்.
வேட்ட -விரும்பிய
தோடு -மலர்
கதுப்பினாள் -கூந்தலையுடையவள்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இம்மங்கையின் தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டவை போலும்.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

(தம் இல் இருந்து, தமது பாத்து உண்டு அற்றால், அ மா அரிவை முயக்கு)
அழகிய மாமை நிறத்தையுடைய இம்மாதின்கண் புணர்ச்சியானது, தம் வீட்டிலிருந்து, தம் முயற்சியால் வந்த பொருளில், தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமைப் போன்றது.


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காற்றாலும் இடையில் புகுந்து பிரிக்க இயலாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிதேயாகும்.
போழப்படா -இடையறுக்கப்படாத
முயக்கு -புணர்ச்சி

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடலும், ஊடல் தீர்த்தலும், அதன்பின் உண்டாகின்ற புணர்ச்சியும் ஆகிய இவையெல்லாம் காதலை இடைவிடாதடைந்தவர் பெற்ற பயன்கள் ஆகும்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

நூல்களாலும், நுண்ணறிவாலும் பொருள்களை அறியவறிய, நம் அறியாமையைக் கண்டறிதல் போன்றது, செம்பொன் ஆபரணத்தையுடைய இவளிடத்து புணரப்புணர உண்டாகும் காதல்.
செறிதோறும் -புணரப்புணர
சேயிழை -செம்பொன் ஆபரணம்
மாட்டு -பெண்

காமத்துப்பால் -களவியல் -குறிப்பறிதல் -110

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.

இவளுடைய மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய் செய்யும் பார்வை; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும் பார்வை.


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

நான் காணாமல் என்னைப் பார்க்கின்ற இவள் பார்வையானது, மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதி ஆவதன்று; அதனினும் மிகுதியானது.
செம்பாகம் -சரிபாதி

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தவள் போல் நாணித் தலைக் கவிழ்ந்தாள்; அக்குறிப்பானது, எங்கள் அன்புப் பயிருக்கு அவள் வார்த்த நீராயிற்று.
இறைஞ்சினாள் -நாணித் தலை குனிந்தாள்
அட்டிய -வார்த்த

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

நான், அவளைப் பார்க்கும் போது தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்; பாராதபோது, என்னைப் பார்த்து அவள் மெல்ல நகுவாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

என்னையே குறிக்கொண்டு பார்க்காமல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள். (ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ண சாய்க்கிறா... அப்படின்னு எம்ஜியார் திரைப் பாடல் கூட இருக்கே! திரைப்படம் - மாட்டுக்கார வேலன்)

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

புறத்தே நம்மை விரும்பாதவர் போல் சொன்னாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.
உறாதவர் -அயலார்
செறார் -பகையாதவர்
ஒல்லை -விரைந்து

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

சினம் கலவா சொல்லும், சினந்தார் போல் பார்க்கும் பார்வையும் - புறத்தில் அயலார் போல இருந்து உள்ளத்தில் அன்பு மிகுதியாக உடையவரின் உள்ளக் குறிப்பாகும்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யான் நோக்கப் - பசையினள் - பைய நகும் - அசையியற்கு உண்டாண்டோர் ஏர்.

அவளை இரப்பதுபோல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அந்த மெல்லிய புன்னகையானது, காற்றில் அசைகின்ற கொடியினை போன்ற மெல்லிடை கொண்டவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய் உள்ளது.

அசையியற்கு -மெல்லிய சாயலையுடையவளுக்கு
ஏர் - அழகு
பசையினள் -இரங்கினள்


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொதுநோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், காதலர்களிடத்து காணப்படும் தன்மை ஆகும்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

காமத்திற்கு உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.

காமத்துப்பால் -களவியல் -தகையணங்குறுத்தல் -109

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

என் காதல் மாதின் அழகிய உருவத்தைக் கண்டால்," தெய்வ மகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது செறிவான, அழகிய கருங்கூந்தலையுடைய ஒரு மானுடப் பெண்தானோ! என்று புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.

அணங்கு -பெண்
கொல் -தெய்வம்
மாதர் -மானுடப்பெண்
மாலும் -மயங்கும்


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.


என்னை அவள் நோக்கினாள்; நான் அவளை நோக்குங்கால், என்னை எதிர் நோக்கினாள்; அப்போது, அவள் பார்வையின் வலிமையானது, அவள் ஒருத்தியேயாயினும், பெருஞ்சேனைக் கொண்டு என்னைத் தாக்கியதைப் போன்றதாயிருந்தது.

தாக்கு -தாக்கி வருத்துகிற
தானை -சேனை


பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

கூற்றுவனை இதன் முன்னர் அறிந்திலன்; இப்போது அறிந்து விட்டேன், அது பெண்குணங்களுடன் பெரியவாயப்போர் செய்கின்ற கண்களையுடையது.

பண்டு -கண்டு
கூற்று -எமன்
தகையால் -குணங்கள்
பேரமர் -பெரிய வாய்
கட்டு -கண்கள்


கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

தோற்றத்தில் பேதை பெண்ணாய்த் தோன்றினும், அவளுடைய கண்களானது தம்மைக் கண்டவரது, உயிரையுண்ணுந் திறத்துடனே கூடி மாறுபட்டிருந்தன.

அமர்த்தன -மாறுபட்டிருந்தன


கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.

வருத்தும் கூற்றமோ? இயல்பான கண்ணோ? மருளும் பெண்மானோ? - இப்பெண்ணின் கண்கள் இம்மூன்றனையும் தன்பால் கொண்டதாய் இருக்கின்றதே!


கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

வளைந்து நிற்கின்ற கொடிய புருவங்கள் , நேராக அமைந்திருந்தால் அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே!

கோடம் - வளைவு; கோடா - வளையாமல்
அஞர் -துயர்


கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

இப்பெண்ணின், சாயாத முலைகளின் மேலிடப்பட்ட ஆடையானது, அவைகள் என்னைக் கொல்லாதபடிக் காத்ததால், அது மதக்களிற்றின் முகப்படாத்தை ஒத்ததாகும்.

கடாக் களிறு -மத யானை
கட்படாம் -முகப்படாம்
துகில் -ஆடை


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்துக்கு வராதவர்கள் கூட, பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவாகிய என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்துபோயிற்றே!

ஒண்ணுதற்( ஒள்+நுதல்) -ஒளி பொருந்திய நெற்றி
ஞாட்பு -போர்க்களம்
நண்ணார் -எதிர்த்தவர்
உட்கும் -அஞ்சுவதற்கு எதுவாகும்
பீடு -வலிமை


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மான் போன்ற மருளும் பார்வையையும், உள்ளத்தே நாணத்தையும் உடைய இவளுக்கு, இவையே சிறந்த அழகாயிருக்க, வேறு அணிகலன்கள் பூட்டி அழகுபடுத்தல் ஏனோ?


உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

காய்ச்சப்பட்ட மதுவானது, தன்னை உண்டவருக்கு மட்டும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காமத்தைப் போல் கண்டவருக்கும் மகிழ்வைத் தரும் ஆற்றலுடையதில்லையே!

அடு நறவு -காய்ச்சப்பட்ட மது