Sunday, November 11, 2007

பொருட்பால் -அங்கவியல் -வினைத்திட்பம் -67

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.


தொழில் செய்யுமிடத்து வலிமை என்பது மனவலிமையே. பிற வலிமைகள் எல்லாம் வலிமையென்று சொல்லப்படுவதில்லை.


ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.


நீதி நூல்களை ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, செயலில் இடையூறு வாராமல் விலக்கிக் கொள்ளுதலும், அங்ஙனம் வந்தால் மனந்தளராமை ஆகிய இரண்டும்.


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்.


செயலில் ஆண்மையானது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம். இடையில் வெளிப்பட்டால் அது தீராத் துன்பத்தையே தரும்.


கொட்கின் -வெளிப்படுமாயின்
ஏற்றா -தீராத


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


'இதனை இப்படியிப்படிச் செய்வோம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளிதாகும். ஆனால் சொல்லியபடி செய்வது மிகவும் கடினமானது ஆகும்.


வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.


எண்ணத்தினால் சிறந்த மன உறுதி கொண்டவர்களது செயல் திறமையானது, மன்னன் மனத்திலும் பதிவதனால், அது எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்.

வீறு -சிறப்பு


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.


ஒரு செயலைச் செய்ய நினைத்தவர்கள், அவ்வெண்ணத்தில் உறுதி உடையவர்களானால் தாம் நினைத்ததை நினைத்தபடி செய்து, வெற்றி அடைவார்கள்.


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.


இவ்வுலகம், பெரிய தேருக்கு அச்சாணி போல் தொழிலில் வலிமையுடையவரையும் உடையது. அதனால் எவரையும் அவரின் தோற்றம் கண்டு இகழலாகாது.


கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.


மனங்கலங்காமல் தெளிவோடு தான் மேற்கொண்ட செயலில் இடையில் சோர்வில்லாமல், காலங்கடத்தாமல் விரைந்து செய்ய வேண்டும்.


துன்பம் உறவரினுஞ் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.


முதலில் வருகின்ற துன்பத்தால் வருந்த நேர்ந்தாலும், முடிவில் இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடன் செய்து முடிக்க வேண்டும்.

உறவரினும் -மிக வரினும்


எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

எந்த வகையில் உறுதி உடையவரானாலும், செய்யும் செயலில் மனஉறுதி இல்லாதவரை இவ்வுலகம் மதியாது.

No comments: