Saturday, November 17, 2007

பொருட்பால் - ஒழிபியல் - உழவு -104

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பல தொழில்கள் இருந்தாலும் அவை ஏர் பிடித்தலின் பின் வருவன ஆதலால் வருத்தும் என்ற போதும் உழவுத் தொழிலே முதன்மையானது.

உழந்து - வருந்தி

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவன்றி பிற தொழில் செய்பவரையும் தாங்குவதால் உழுபவர் இந்த உலகத்தின் அச்சாணியாகக் கருதப் படுவார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

தான் உழுது உண்டு வாழ்பவர் யாரையும் சார்ந்து இல்லை. மற்ற எல்லோரும் அவரைச் சார்ந்தே வாழ இயலும்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

பல குடைகளை உடைய மன்னர்களால் ஆளப்படும் உலகை தம் ஏர் என்னும் கருவியால் உழவர் ஆள்வார்.

அலகு - கருவி, ஆயுதம்

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

தம் உழைப்பால் உண்ணும் இயல்புடைய உழவர் பிறரிடம் இரந்து கேட்பதில்லை. தம்மிடம் இரந்து கேட்பவருக்கு மறைக்காமல் அவர் கேட்பதைத் தருவர்.

கரவாது - மறைக்காது
மாலை - இயல்பு

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

ஆசையைத் துறந்தவருக்கும் உழவர் கை கொடுக்கா விட்டால் தம் நிலையில் நிற்க இயலாது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஒரு பங்கு மண் கால் பங்கு ஆகும் அளவு (உழுது) உலர விட்டால் பிடி அளவு எரு கூட இல்லாமல் நன்கு விளையும்.

தொடிப் புழுதி - ஒரு வகை அளவு
உணக்கு - உலர்த்துதல்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

நன்கு உழுதபின் எரு விடுதல் நல்லது. களை எடுத்து நீர் விடுதலும் பின் அப்பயிரைக் காத்தலும் நல்ல விளைச்சல் தரும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

நிலத்துக்குரியவன் அன்றாடம் சென்று சோம்பலால் பார்வை இடவில்லை எனில் அந்நிலம் மனைவியைப் போல் வெறுத்து அவனுடன் பிணங்கி விடும்.

கிழவன் - உரியவன்
புலந்து - வெறுத்து

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

தம்மிடம் (நிலம்) எதுவும் இல்லை என்று சோம்பி இருப்பாரைக் கண்டால் நிலம் என்னம் நங்கை சிரிப்பாள். ஏனெனில் நிலத்தில் உழைப்பவன் மேற் கூறிய சிறப்புக்களைப் பெற இயலும் என்பதால்.

No comments: