Sunday, November 11, 2007

பொருட்பால் -அங்கவியல் -வினை செயல்வகை -68

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.


ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு மனத்துணிவு பெறவே. துணிவு கொண்டபின் அச்செயலைச் செய்யாமல் காலங்கடத்துவது தீமையாகும்.


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

காலங்கடந்து செய்யக் கூடிய செயலைக் காலந்தாழ்த்தியே செய்ய வேண்டும். கடத்தாமல் செய்யக்கூடியதை உடனடியாக செய்ய வேண்டும்.


ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே. அது இயலாத போது, அதை முடிப்பதற்கான வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும்.


வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும் குறைவின்றி செய்ய வேண்டும். அவற்றின் மிச்சம் தீயின் எச்சம் போல் வளர்ந்து கேடு உண்டாக்கும்.

தெறும் -கெடுக்கும்


பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

தொழில் செய்யுமிடத்து பொருளும், சாதனம், தகுந்த காலம், செயலறிவு, ஏற்ற இடம் ஆகிய ஐந்தனையும் மயக்கமின்றி ஆராய்ந்த பின்னே செய்ய வேண்டும்.


முடிவும் இடையூறும் மற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

செயலின் முடிவு, இடையில் தோன்றும் இடையூறுகள், முடித்த பின் அடையும் பெரும்பயன் இவற்றை ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்ய வேண்டும்.


செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.


ஒரு செயலைச் செய்வதற்கான செயல்முறையாவது, அச்செயலை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவரிடம் கேட்டறிந்து, அதனையே தானும் மேற்கொள்ள வேண்டும்.


வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

மத நீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, அப்படிப்பட்ட வேறொன்றை கட்டுவதைப் போல், பழகிய செயலின் அறிவுரையைக் கொண்டு அப்படிப்பட்ட பிற செயல்களையும் செய்ய வேண்டும்.


நனைகவுள் -நனைந்த கன்னமுடைய


நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.


மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலில் ஈடுபடுதல்,
நண்பருக்கு நல்லவை செய்வதினும் விரைவாகச் செய்யக் கூடியது.


உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.


ஒன்றை செய்யும் வல்லமையற்றாருள், பயத்தினால் இடையில் செயலை நிறுத்தியவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

No comments: