Monday, November 12, 2007

பொருட்பால் -அங்கவியல் -அவை அறிதல் -72

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.


சொல்லின் தொகையறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தான் சொல்லப் போவதை நன்கு ஆராய்ந்தே சொல்வர்.


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.


சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை சமயமறிந்து மிகவுந்தெளிந்து சொல்ல வேண்டும்.


அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

அவையினதளவை அறியாது, ஒன்று சொல்ல முற்படுபவர், அச்சொல்லின் வகையை அறியாதவர்கள் எதையுமே சாதிக்க இயலாது.


ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.


அறிவினால் ஒளியுடையவர் முன் தானும் அறிவொளியினராக விளங்க வேண்டும்; அவையறியாத புல்லர்கள் முன் சுண்ணாம்பு வண்ணங்கொள்ள வேண்டும்.


நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.


தம்மின் அறிவு மிகுந்தவரது சபையில், அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தரும்.


முந்து -முற்பட்டு
கிளவா -சொல்லாத
செறிவு -அடக்கம்


ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.


விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர்முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் இடையில் நிலை தவறுதலைப் போன்றதாகும்.


வியன்புலம் -விரிந்த நூற்பொருள்


கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் வல்லார் அகத்து.


குற்றப்படாமல் சொற்களை ஆராய்தலில் வல்லவர்கள் சபையிடத்தே, பல நூல்களைக் கற்றறிந்தவரது கல்வியானது யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.


உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

சொல்லின் பயனை உணர வல்லவர் முன் ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிவது போன்ற பெரும் பயனைத் தரும்.


புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.

அறிவாளர்கள் கூடியுள்ள அவையில், அவர்கள் மனத்தில் நன்கு பதியுமாறு சொல்பவர்கள், புல்லறிவினர் கூட்டத்தில் மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.

பொச்சாந்தும் -மறந்தும்

செல -மனங்கொள்ள



அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல்.

தம்போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவர்களின் முன் ஒன்றைப்பற்றி விரிவாகப் பேசுதல், சுத்தமற்ற முற்றத்தில் அமுதத்தைக் கொட்டியது போன்றதாகும்.

அங்கணம் -முற்றம்

உக்க -வீழ்ந்த

கோட்டிக் கொளல் -சொல்லாதிருத்தல்

No comments: