Monday, November 12, 2007

பொருட்பால் -அங்கவியல் -குறிப்பறிதல் -71

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.


ஒருவன் சொல்லாமலே, அவன் உள்ளக் குறிப்பால் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்துக்கே அணிகலனாவான்.


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.


ஒருவனின் மனத்தினிடத்து நிகழ்வதை, சந்தேகப்படாமல் அறியவல்லவனைத் தெய்வத்தோடு சமானமாக நன்கு மதிக்கத்தக்கவன்.


குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.


ஒருவரது முகக் குறிப்பால், அவரது உள்ளக் கருத்தை அறிய வல்லவனை, உறுப்புகளுள் யாதொன்றையாவது கொடுத்து, அவரைத் தமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.


குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போர் அனையரால் வேறு.


தாம் செய்ய நினைத்த செயலை, சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார்.


குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.


ஒருவன் தன் உள்ளக் கருத்தைக் காட்சிக்குறிப்பால் உணர்த்திய போதும், அதனை உணராமலிருந்தால், உறுப்புகளுள் கண் என்பது என்ன பயனைச் செய்ததாகுமோ?


அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.


தன்னை அடுத்திருக்கும் உருவத்தைத் தன்னிடத்தேக் காட்டும் பளிங்கு போல், ஒருவனின் நெஞ்சம் கடுத்ததை அவன் முகமே காட்டிவிடும்.


கடுத்தது -சினந்தது


முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.


முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கதும் உளதோ? உள்ளம் மகிழ்ந்தாலும், சினந்தாலும் தான் முந்திக் கொண்டு அதனை வெளியேக் காட்டிவிடும்.


முதுக்குறைந்தது -அறிவு மிகுந்தது
உவப்பு -மகிழ்ச்சி


முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.

முகக்குறிப்பால் உற்றதனை அறிந்து தீர்ப்பவனைத் துணையாகப் பெற்றால், அவர் தன் முகத்தைப் பார்க்கும்படி, அவர் முகத்தைப் பார்த்து நின்றாலே போதும்; ஏதும் சொல்ல வேண்டாம்.


பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும், நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும்.


கேண்மை -நட்பு


நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.


நுண்ணறிவு உடையோர் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுமிடத்து, அவரது கண்களேயன்றி வேறு உறுப்புகள் இல்லை.

No comments: