Sunday, October 28, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -ஊழ் -38

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

ஆகுவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.

அசைவின்மை -முயற்சி
ஊழ் -பழவினை

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

இழப்பதற்கான ஊழ் ஒருவனை பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் அறிவை விரிவாக்கி பல நன்மைகளைத் தரும்.

அகற்றும் -விசாலப்படுத்தும்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.

நுண்மையான நூல்கள் பலவற்றை கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தாற்படி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

உலகத்தில் ஊழினாலாகிய இயற்கை இரண்டு வகைப்படும்; செல்வமுடையராதல் வேறு; அறிவுடையராதல் வேறு.

திரு -செல்வம்
தெள்ளியர் -அறிவுடையோர்


நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயன நல்லனவாதலும்,தீயூழால் நல்லவை தீமை தருவதாக மாறுவதும் உண்டு.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

நல்லூழ் இல்லாத போது வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடம் நில்லாமற் போகும்; கொண்டுபோய் வெளியே சொரிந்தாலும் நல்லூழினால் நம் பொருள் போகாது.

பரியினும் -வருந்திக் காப்பாற்றினாலும்
பால் -ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

ஊழினை வகுத்தவன் வகுத்தபடி அல்லாமல், கோடியாக பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றை அனுபவித்தல் என்பது அரிதாகும்.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

வந்தடைவதற்கான இன்பங்கள் வாராமல் போனால், துய்க்கும் பொருளில்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

ஊழால் நன்மைகள் விளையும் போது, அவற்றை நல்லவையாகக் கருதுபவர்கள், அஃது இல்லாத காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

ஊழைக்காட்டிலும் வலிமையானவை எவை? மற்றொன்றை வலியதெனக் கருதினாலும் அங்கும் ஊழே வந்து நிற்கும்.

No comments: