Saturday, October 27, 2007

அறத்துப்பால் -துறவறவியல் -கள்ளாமை 29

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

உலகத்தாரால் இகழப்படாமல் வாழவிரும்புவோன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை காத்தல் வேண்டும்.

எனைத்தொன்றும் -எத்தகைய பொருளையும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.

'பிறன் பொருளைக் களவாடிக் கொள்வோம்' என்று ஒருவன் தன் மனத்தால் நினைத்தாலும் அந்த நினைவுக் கூடத் தீமையானதே.

உள்ளல் -எண்ணுதல்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

களவால் வந்தடையும் பொருளானது அளவுகடந்து பெருகுவது போலவே, விரைவாக அழிந்து விடும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த ஆசையானது, அதன் விளைவுகளின் போது தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

விழுமம் -துன்பம்

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பொருளையே நினைத்து, பிறர் சோர்ந்திருக்கும் காலத்தை எதிர்பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை.

பொச்சாப்பு -சோர்வு

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

களவு நெறியில் மிகுந்த ஆசையுடையவர்கள், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

'களவு' எனப்படும் இருளடர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்தில் ஒருபோதும் இல்லை.

கார் -இருள்

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்வோர் நெஞ்சத்தில் 'அறம்' நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவர் நெஞ்சில் 'வஞ்சகம்' எப்போதும் நிறைந்திருக்கும்.

கரவு -வஞ்சனை.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவல்லாத பிற நல்ல வழிகளில் பொருள் சேர்த்து வாழ்தலை அறியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலே கெடுவர்.

வீவர் -கெடுவர்
தேற்றாதவர் -அறியாதவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

களவு செய்வார்க்கு உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப்போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவர் உலகத்து வாழ்வும் தவறாது.

தள்ளும் -தவறிப்போகும்
புத்தேள் உலகு -தேவருலகம்.

No comments: