Tuesday, October 30, 2007

பொருட்பால் - அரசியல் - சிற்றினம் - சேராமை - 46

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோர் சிற்றினம் சேர்தல் குறித்து அஞ்சுவர். சிறுமைக் குணமுடையோர் அவர் தம் சுற்றம் எனக் கூடுவர்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

நீரின் குணம் அது சேர்ந்த நிலத்தை ஒத்தது. மனிதருக்கு தாம் சேரும் இனத்தை ஒத்தது.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

மனிதருக்கு உணர்வு மனதைப் பொருத்து அமைவது போல் சார்ந்த இனத்தால் அவன் தன்மை அமையும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

ஒருவனின் அறிவு மனதின் கண் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் அவன் சேர்ந்த இனத்தால் அமையும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

சிந்தனை, செயல் இரண்டின் தூய்மையும் ஒருவன் சேரும் இனத்தால் அமையும்.

தூவா - பற்றுக்கோடு, சார்பு

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனத்தூய்மை உடையவர்களுக்கு நல் மக்கள் பிறப்பர். இனத்தூய்மை அடைந்தார்க்கு செய்வன அனைத்தும் நற்செயல்களாய் அமையும்.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

நல்ல மனம் மனிதருக்கு ஆக்கம் தரும். நல்ல இனம் எல்லா புகழையும் சேர்க்கும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

நல்ல மனம் படைத்திருப்பினும் சான்றோர்களுக்கு நல்ல இனம் சேர்வதே வல்லமையைத் தரும்.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மனத்திற்கு ஏற்றபடி மறுமை கிட்டும். அம்மறுமையும் சேரும் இனத்தின் தன்மையால் மாறக்கூடியது.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

நல்ல இனத்தருடன் சேர்வது மிகச்சிறந்த துணை. தீய இனத்தருடன் இழைவது துன்பத்தைத் தருவதாகும்.

No comments: